Published : 02 Jul 2024 05:10 AM
Last Updated : 02 Jul 2024 05:10 AM

புனித ஹஜ் பயணம் முடித்துகொண்டு முதல் விமானத்தில் 326 பேர் சென்னை திரும்பினர்

சென்னை: புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட 326 பேர் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை வரவேற்றார். சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்கு ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 5,801 பேர் பயணம் மேற்கொண்டனர்.

ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் கடந்த மாதம் 25-ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 170 பெண்கள் உட்பட326 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு 326 பயணிகளுடன் முதல் விமானம் சென்னைக்கு நேற்று பிற்பகலில் வந்தது.

அவர்களை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி நிர்வாகிகள், குடும்பத்தினர் வரவேற்றனர். அப்போது, அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``புனித ஹஜ் பயணத்துக்காக, தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு 5,801 பேர் சென்றனர்.

இப்போது முதல் விமானத்தில் வந்துள்ள 326 பேரை வரவேற்கிறோம். புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. புனித ஹஜ் பயணத்தின்போது வெயிலின் தாக்கத்தால், தமிழகத்தைச் சேர்ந்த 10பேர் இறந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

மெக்காவில் இருந்து மதினாவுக்கு செல்லும் வழியில் நடந்த பேருந்து விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் வரும் காலங்களில், இது போன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x