Last Updated : 08 Jun, 2024 10:14 PM

 

Published : 08 Jun 2024 10:14 PM
Last Updated : 08 Jun 2024 10:14 PM

குமரியில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் உபரிநீர் திறப்பால் வெள்ள எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நிரம்பி மறுகால் பாய்ந்து வரும் சுசீந்திரம் தெப்பக்குளம்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று உபரியாக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழைக்கு பின்னர் தென்மேற்கு பருவமழை நீடித்து வருகிறது. நேற்று இரவில் இருந்து விடிய விடிய மழை கொட்டியது. பகலில் மேகமூட்டத்துடன் குளிரான தட்பவெப்ப நிலை நீடித்தது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், குலசேகரம், மார்த்தாண்டம், களியக்காவிளை, கருங்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ச்சியாக மழை கொட்டியது. அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 49 மிமீ., மழை பதிவானது. களியலில் 44, அடையாமடையில் 41, பெருஞ்சாணியில் 42, புத்தன்அணையில் 40 பாலமோரில் 37, திற்பரப்பில் 32, சுருளோட்டில் 31 மிமீ., மழை பதிவானது.

தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. இன்று மதியம் அணையின் நீர்மட்டம் 45.59 அடியாக உயர்ந்தது.ஏற்கனவே அணையில் இருந்து 535 கனஅடி தண்ணீர் மதகு வழியாக வெளியேறிய நிலையில் மாலையில் 500 கனஅடி நீர் உபரியாக திறந்து விடப்பட்டது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீருடன் 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் கோதையாற்றில் ஓடியதால் களியல், திற்பரப்பு அருவி, மூவாற்றுமுகம், குழித்துறை தாமிரபரணி ஆறு வழியாக தேங்காய்பட்டணம் கடலில் சேரும் நீர்வழித்தடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, மற்றும் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். தொடர் மழையால் குமரி மாவட்டத்தி்ல 500க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x