Last Updated : 16 May, 2024 04:34 PM

 

Published : 16 May 2024 04:34 PM
Last Updated : 16 May 2024 04:34 PM

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி தொடங்கும்: சத்யபிரத சாஹு தகவல்

சத்யபிரத சாஹு | கோப்புப்படம்

சென்னை: வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதகிாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பயிற்சிக்கான தேதியை முடிவு செய்வார்கள், என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்.19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கடந்த சில தினங்களாக திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி தொகுதிகளில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், ஆய்வு மற்றும் ஏற்பாடுகள் குறித்து அவர் கூறுகையில், “வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஸ்டிராங் அறை முன்பு கூடுதல் கேமரா பொருத்தப்பட்டு, மின்சாரம் தடைபட்டாலும் அந்த கேமரா இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்கும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பயிற்சிக்கான தேதியை முடிவு செய்வார்கள்.

தற்போது அண்டை மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்துள்ளதால், எல்லையோர மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ள பறக்கும்படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள் திரும்பப் பெறப்படுவர்.

எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வழக்கமான சோதனை தொடர்ந்து நடைபெறும். இந்த சோதனைச்சாவடிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் பிடிபடும் ரொக்கம் உள்ளிட்டவற்றின் மதிப்பு, அந்தந்த அண்டை மாநிலங்களுக்கும் தெரிவிக்கப்படும். அதே போல், அவர்களும் பிடிபடும் ரொக்கம், பொருட்களின் விவரங்களை தெரிவிப்பார்கள். இதர மத்திய அரசு துறைகளால் பிடிக்கப்படும் தொகை குறித்த விவரங்கள் நேரடியாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்படுவார். தேர்தலின் போது பணியாற்றிய மத்திய பார்வையாளர்கள் எண்ணிக்கையின் போதும், கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை கவனிக்க தேவைப்படும் இடங்களில், ஐஏஎஸ் அல்லது மாநில அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கூடுதல் பார்வையாளர்களாக நியமிக்கும்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x