Published : 14 May 2024 04:02 AM
Last Updated : 14 May 2024 04:02 AM

அரூர் கோட்டத்தில் காற்றுடன் பெய்த கனமழையால் 31 ஹெப்டேர் வாழைத் தோட்டம் சேதம்

பிரதிநிதித்துவப் படம்

அரூர்: அரூர் கோட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால்31 ஹெக்டேர் வாழைத்தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்தில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வாழைத் தோட்டங்கள், பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுத்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் மொரப்பூர் வட்டாரங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் கனமழையால் அரூர் வட்டாரத்தில் 13 ஹெக்டேரும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் 8 ஹெக்டேரும், மொரப்பூர் வட்டாரத்தில் 10 ஹெக்டேரும் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்தது. இது குறித்த தகவல்கள் தோட்டக் கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மூலம் மாநில அரசுக்கு அனுப்பப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம், பேரிடர் மேலாண்மை நிதி அரசிடமிருந்து பெறப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப் படவுள்ளது.

காற்று மழையால் தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்கள் பரவலாக பாதிக்கப் பட்டிருந்தாலும், மொத்த மரங்களின் எண்ணிக்கையில் 33 சதவீதத்திற்கு குறைவான அளவு பாதிப்பே இருப்பதால் பேரிடரில் கணக்கில் வராது என்பதால் அது குறித்து கணக்கீடு நடக்கவில்லை என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x