Published : 08 May 2024 04:04 AM
Last Updated : 08 May 2024 04:04 AM

பேரணாம்பட்டில் கொட்டிய மழை - ஒரே இரவில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

பேரணாம்பட்டு சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பச்சக்குப்பம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வேலூர்: பேரணாம்பட்டில் ஒரே இரவில் 12 செ.மீ மழை கொட்டிய நிலையில் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாலாற்றை வந்தடைந்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெப்ப அலையின் தாக்கத்தால் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வழக்கத்தைவிட வெயில் சுட்டெரித்தது. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்ச வெயில் அளவாக 110.9 டிகிரி அளவுக்கு இருந்தது. மற்ற நாட்களில் சராசரியாக 106 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. இதே அளவுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் வெயில் அளவும் இருந்தது. மழை எப்போது வந்து வெயிலின் உக்கிரம் குறையும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தாண்டு கடுமையான வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் அனைவரும் சிரமப்பட்டனர். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெயில் தாக்கத்தை குறைக்கும் அளவு கோடை மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளின் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கும் என்ற தகவலால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நள்ளிரவு வரை பரவலான கன மழை பெய்தது. குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு பேரணாம்பட்டு பகுதியில் கொட்டிய கனமழையால் பாலாற்றின் துணை ஆறான மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேறறு காலை வெள்ளம் பச்சக்குப்பம் அருகே பாலாற்றை வந்தடைந்தது. ஒரே இரவில் கொட்டிய கன மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேரணாம்பட்டில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்ச அளவாக 120.4 மி.மீ மழை பதிவாகி இருந்தது. ஒடுக்கத்தூரில் 70 மி.மீ., குடியாத்தம் 27, மேல் ஆலத்தூரில் 42, மோர்தானா அணை பகுதியில் 55, விரிஞ்சிபுரம் பகுதியில் 15.6, காட்பாடியில் 1.5, வேலூரில் 1 மி.மீ அளவுக்கும் குறைவாக மழை பெய்தது. மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம்: திருப்பத்தூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு பலரவலான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாதனூரில் 43.4, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 35, ஆலங்காயம் 31, வாணியம்பாடி 36, நாட்றாம்பள்ளி 36, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 22, திருப்பத்தூரில் 18.6 மி.மீ மழைபதிவானது.

சூறை காற்றால் தீ விபத்து: காட்பாடி வட்டம் திருவலம் அடுத்த மேல்மாந்தாங்கல் பகுதியில் இளையராணி என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சூறை காற்று வீசியபோது அந்த பகுதியில் இருந்த மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி தேங்காய் நார் குவியல் மீது பட்டதில் தீ மளமளவென பரவியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தேங்காய் நார் தயாரிக்கும் 3 இயந்திரங்களும் சேதமடைந்தன. இந்த தகவலறிந்த வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x