Published : 14 Apr 2024 06:11 AM
Last Updated : 14 Apr 2024 06:11 AM

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு: தென் மாவட்டங்களில் பரவலாக மழை

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தமிழகப் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16, 17-ம் தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலையும், 18, 19 -ம்தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சிவகாசியில் 7 செ.மீ. மழை: சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தென் தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 7 செ.மீ., தேனி மாவட்டம் போடி நாயக்கனூர், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் எச்சன்விடுதி, நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

106 டிகிரி வெப்பம் வரை உயரும்: தமிழகத்தில் 17-ம் தேதி வரைஅதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, கடலோரப் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கக்கூடும். நாளை முதல் 17-ம்தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 106 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில்வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x