Published : 10 Jan 2024 12:51 PM
Last Updated : 10 Jan 2024 12:51 PM

பொங்கல் பண்டிகை | நெல்லை, தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத 2 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி, விரைவாக முடிந்தது. வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

ரயில்களில் முன்பதிவு செய்யமுடியாத பொதுமக்கள், சிறப்பு ரயில்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலும், தாம்பரம் - நெல்லை - தாம்பரம் இடையே முன்பதிவு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜன. 14,16-ம் தேதியும், மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து ஜன. 15,17-ம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரயில் (24 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லாத ரயில்) இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு கிளப்பும் ரயில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி செல்கிறது. மறுமார்க்கமாக தூத்துக்குடியில் காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வருகிறது.

இதுதவிர, தாம்பரம் - திருநெல்வேலி இடையே வரும் 11, 13, 16-ம் தேதிகளிலும், திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் இடையே ஜன. 12, 14, 17-ம் தேதிகளிலும் முன்பதிவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x