Published : 10 Jan 2024 04:06 AM
Last Updated : 10 Jan 2024 04:06 AM

குமரியில் மிதமான மழை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் மழையில் நனைந்தவாறு சிரமத்துடன் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழைக்குப் பின்னர் கடும் வெயில் அடித்தது. நேற்று அதிகாலையில் இருந்தே மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது. மாலை வரை குளிரான தட்பவெப்பம் நிலவியது.

மழையால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்லும் ஊழியர்களும் மழையில் நனைந்தவாறு சென்றனர். பகலில் மழை நின்ற போதிலும் குளிர் காற்று வீசியது. கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் கோடைகாலம் போன்று வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்தது. கனமழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை.

பேச்சிப் பாறை அணைக்கு விநாடிக்கு 508 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 46 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 541 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.52 அடியாக உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து 114 அடியாக உள்ளது. அணையில் இருந்து 250 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x