Published : 08 Jan 2024 06:18 AM
Last Updated : 08 Jan 2024 06:18 AM

ஏசி மின்சார ரயில்கள் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு: கடற்கரை - செங்கல்பட்டு இடையே சோதனை அடிப்படையில் இயங்கும் என எதிர்பார்ப்பு

சென்னை: தெற்கு ரயில்வேக்கு 12 பெட்டிகள் கொண்ட இரு மின்சார ஏசி ரயில்களை ரயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளதால், இந்த ரயில்கள் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் விரைவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவுப் பாதையில் மின்சார ஏசி ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இக்கோரிக்கை தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதுபோல, தமிழக அரசும் முயற்சி எடுக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் கட்ட ஆய்வுப் பணிகளைக் கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது.

தற்போது, இந்த ஆய்வு இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் தலா 3 ஏசி பெட்டிகளை இணைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) கடந்த அக்டோபர் மாதம் பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று, சோதனை அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பராமரிக்கும் வசதி: இதைத் தொடர்ந்து, இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து சோதிக்க, ஏசி பெட்டிகளை ஒதுக்கீடு செய்ய ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், தலா 12 பெட்டிகள் கொண்ட இரு மின்சாரரயில்களை தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது. இந்த ரயில்கள் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் விரைவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட 8 ஏசி மின்சார ரயில்களில், இரு ரயில்கள் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் இயக்கப்படும். என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில்கள் குறைந்தபட்ச முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. முதலில் மத்திய,கிழக்கு ரயில்வேக்கு ஒதுக்கப்படும். அதன்பிறகு, தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்படும். \

ஏசி மின்சார ரயில்களை பெற்ற பிறகு, தாம்பரம் அல்லது ஆவடி மின்சார ரயில் பணிமனைகளில் இந்த ரயில்களை பராமரிப்புக்கான பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x