Published : 04 Nov 2023 12:16 PM
Last Updated : 04 Nov 2023 12:16 PM

'சென்னையில் மழைக்கு பதறும் காலம் மாறிவிட்டது; திமுக ஆட்சியே காரணம்' - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்.தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.

மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க #DravidianModel அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

பரவலாக மழை: தமிழகத்தில் கடந்த அக்.21-ம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால், பரவலாக தமிழகம் முழுவதும் மழைபெய்து வருகிறது. சென்னையிலும், அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், நேற்று முன்தினம் இரவுமுதல் தொடர்ந்து விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 6-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், வரும் 7, 8-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9-ம் தேதி சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x