Published : 27 Sep 2023 06:18 AM
Last Updated : 27 Sep 2023 06:18 AM

தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்கள் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இணையதளம்: எல்காட் இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ் பரப்புரை கழக திட்டத்தில் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்கள், ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான இணையதளம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அயலக மாணவர்களின் தமிழ்கற்றல், கற்பித்தலுக்காக தமிழ் பரப்புரை கழகத்தை முதல்வர் ஸ்டாலின்கடந்த 2022 செப்டம்பரில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் பணிகளை தமிழ் இணைய கல்விக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

இதில் 34 நாடுகள், 16 இந்திய மாநிலங்களில் தமிழ் இணைய கல்வி கழகத்தின் 160 தொடர்பு மையங்கள் மூலம் திறன்கள் அடிப்படையிலான பாடப் புத்தகங்கள், கற்றல் துணை கருவிகள், கட்டணமில்லா இணையவழி வகுப்புகள் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த மையங்களில் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவிக்கின்றனர்.

இந்த சூழலில், அயலக தமிழ்ச்சங்கங்கள், பள்ளிகளின் கோரிக்கைஅடிப்படையில், கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில், தன்னார்வலர்களுக்கு இணையவழியில் ஓராண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி வழங்க தமிழ் பரப்புரை கழகம் திட்டமிட்டது. இப்பயிற்சியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க கடந்த ஜனவரியில் அயலகதமிழர் தின விழாவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

எல்காட் இணையதளம்: இந்நிலையில், இப்பயிற்சியில் சேர பதிவு செய்வதற்கான http://tva.reg.payil.app/ என்ற இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பட்டயப் பயிற்சி குறித்த குறிப்பேட்டை முதல்வர் வெளியிட, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக் கொண்டார்.

எல்காட் நிறுவனத்துக்கும், அரசுத் துறைகளுக்கும், தகவல்தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பிற பங்குதாரர்களுக்கும் இடையே வெளிப்படையான, விரைவான, திறமையான சேவைகளை வழங்க, https://erp.elcot.in என்ற ஒருங்கிணைந்தஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதன்மூலம், ஐ.டி. நிறுவனங்கள் நிலம் மற்றும் இட ஒதுக்கீடு, தளப்பரப்பு குறியீடு (எஃப்எஸ்ஐ), அடமான கடன் பெறுவதற்கான தடையின்மை சான்று வழங்குதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி. வன்பொருள் தயாரிப்புகளை அரசுத் துறைகள்வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். தொலைதொடர்பு சேவைவழங்குநர்கள் புதிய ஒப்புதல்கள் மற்றும் ஏற்கெனவே உள்ளதொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்.

நிரந்தர பதிவு மையங்கள் மூலம் குடிமக்கள் ஆதார் பதிவு, புதுப்பித்தல் சேவைகளை பெறவும், அரசு துறைகள் தங்கள் தரவுபதிவேற்ற தேவைகளுக்கு விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கணினி, மடிக்கணினி, கையடக்க கணினி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அனைத்து சாதனங்கள்மூலமாகவும் இந்த இணையதளத்தை அணுக முடியும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் எஸ்.அனீஷ் சேகர், தமிழ்நாடு மின்னணு நிறுவன செயல் இயக்குநர் எஸ்.அருண் ராஜ், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் பி.சி. நாகசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x