Published : 28 Jul 2014 10:00 AM
Last Updated : 28 Jul 2014 10:00 AM
ஒற்றை தலைமையைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதை திராவிட கட்சிகளிடமிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் பேசினார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம், பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று அவர் கூறும்போது, ஆளும்கட்சி தேர்தலில் தோற்று, எதிர்கட்சி ஆட்சிக்கு வருவது வாடிக்கையான ஒன்றுதான். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இதுதான் வழக்கமான நடைமுறை. தமிழகத்திலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு பிரச்சாரத்தை பாஜக முன்வைத்தது. மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 60 நாட்களாகியும், காங்கிரஸ் எடுத்திருக்கும் எந்த முடிவை மாற்றியுள்ளது? பாஜக-வின் பொய் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தோல்வியுற்றது. காங்கிரஸ் கொள்கைகளை மாற்றாமல், 2 மாத ஆட்சியை பாஜக நடத்தியுள்ளது. பாஜக-வால் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ய முடியாது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என 4 பேர் தான் முதல்வராக இருந்துள்ளனர். ஒற்றை தலைமையைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதை திராவிட கட்சிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கட்சிக்கு பின்னால் மக்கள் செல்லமாட்டார்கள்; தலைவர்களுக்கு பின்னால்தான் செல்கிறார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT