Published : 26 May 2025 12:25 PM
Last Updated : 26 May 2025 12:25 PM

தங்க நகைக் கடன் புதிய வரைவு விதிமுறைகள்: வாடிக்கையாளருக்கு சாதகமா.. பாதகமா?

இந்தியாவில் சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாமல் கூட பல குடும்பங்கள் இருக்கலாம். ஆனால், தங்க நகை இல்லாத குடும்பங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தியர்கள் மத்தியில் தங்கம் ஊடுருவி இருக்கிறது. இது ஒரு ஆடம்பர பொருளாக மட்டும் அல்லாமல், அவசர பணத் தேவையை பூர்த்தி செய்கிறது.

குறிப்பாக வங்கிகளில் தங்க நகைகளை அடமானமாக வைத்து குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) தனிநபர்களுக்கு தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பான 9 புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள், துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விதிமுறைகளில் உள்ள சில அம்சங்கள் வாடிக்கையாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அது பற்றி பார்க்கலாம்:

* கடன்-மதிப்பு விகிதம் வரம்பு: அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் கடன்-மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், ரூ.100 மதிப்புள்ள தங்க நகைகளை அடமானம் வைத்தால், அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாகப் பெற முடியும். இதுவரையில் நகையின் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 90% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்த விதியை அமல்படுத்தும்போது, கடன் தொகை கணிசமாக குறையும். அதேநேரம் தங்கத்தின் விலை எப்போது ஏறும் அல்லது இறங்கும் என்று தெரியாத நிலையில் இதுபோன்ற ஒரு வரம்பு நிர்ணயிப்பது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சாதகமான ஒன்று.

சில நேரங்களில், கடன் தொகையும் வட்டியையும் கணக்கிட்டு பார்க்கும் போது அன்றைய சந்தை நிலவரப்படி திருப்பிச்செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் சில கடனாளிகள் நகையை மீட்காமல் அப்படியே விட்டுவிடக்கூடும். பின்னர் நகைகள் ஏலத்தில் விடப்பட்டு, கடன் வழங்கிய நிறுவனங்கள் அந்த பணத்தை நிறுவனத்துக்கு மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவது கால தாமதம், வட்டி இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

* உரிமைச் சான்று கட்டாயம்: புதிய விதிமுறைகளின்படி கடன் வாங்குபவர்கள் அடமானம் வைக்கப்படும் நகைக்கு, தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும். நகையின் உரிமை சந்தேகத்துக்குரியதாக இருந்தால் கடன் வழங்கப்பட மாட்டாது.

அசல் ரசீதுகள் இல்லாதபட்சத்தில் கடன் பெறுபவர்கள் இந்த நகை தங்களுக்கு எப்படி உரிமையானது என்பதை விளக்கும் வகையில் ஒரு அறிக்கை தர வேண்டும். நமது நாட்டைப் பொறுத்தவரை தங்கநகைகள் என்பது குடும்பச் சொத்துகள். தலைமுறைகளை தாண்டி இன்றும் பயன்பாட்டில் உள்ளன. எனவே இந்த விதிமுறையை காரணம் காட்டி கடன் வழங்க வங்கிகள் மறுக்கக்கூடும்.

* தங்கத்துக்கான தூய்மை சான்றிதழ்: கடன் வழங்குபவர்கள், தாங்கள் பெறும் நகைகளின் தூய்மை, எடை மற்றும் மதிப்பு குறித்த சான்றிதழை வழங்க வேண்டும். அதில் தூய்மை (காரட் அடிப்படையில்), மொத்த எடை, நிகர எடை, கற்கள், ஏதேனும் சேதங்கள் இருந்தாலும் அதைப்பற்றி குறிப்பிடுவதோடு, அடமானம் வைக்கப்படும் நகையின் படத்தையும் சான்றிதழுடன் இணைக்க வேண்டும். இந்த சான்றிதழில் கடன் வழங்குபவரும், வாங்குபவரும் கையெழுத்திடுவதோடு இதன் நகல் கடனாளிக்கு வழங்கப்பட வேண்டும்.

தங்கத்தின் தூய்மைக்கான சான்றிதழ் வழங்கும் பணி மிகவும் சிக்கலானது. பரபரப்பான வங்கி சூழ்நிலையில் இதுபோன்ற ஆய்வுகள் காலதாமதத்தை ஏற்படுத்தும். கடனாளிகள் உடனே கடன் பெற இயலாது என்பதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களில் முழுநேர தகுதி வாய்ந்த நகை மதிப்பீட்டாளர் இருக்க வேண்டும். அத்துடன், கிட்டத்தட்ட ஒரு நகைக் கடைக்கு தேவையான அனைத்து வகை சாதனங்களும் தேவைப்படக்கூடும்.

* தகுதியான தங்க வடிவங்கள்: புதிய விதிமுறைகளின்படி, தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே தங்க நகைக் கடனுக்கு பிணையமாக தகுதியுடையவை. ‘குறிப்பிட்ட தங்க நாணயங்கள்’ என்பவை வங்கிகளால் விற்கப்படும் 22 காரட் அல்லது அதற்கு மேற்பட்ட தூய்மையுடன் அச்சிடப்பட்ட தங்க நாணயங்கள். நம் நாட்டில் இன்றளவும் வங்கிகள் மூலமாக தங்க நாணயங்களை வாங்குவது இன்னும் வழக்கத்துக்கு வரவில்லை. வங்கிகள் மூலமாக வாங்கப்பட்ட தங்கநாணயங்களுக்கு மட்டும்தான் கடன் வழங்கப்படும் என்ற விதி நடைமுறைக்கு வந்தால் பிறகடைகள் மூலம் வாங்கிய தங்க நாணயங்களுக்கு கடன் பெற முடியாத சூழல் ஏற்படும்

* வெள்ளி பொருள்களுக்கு கடன்கள்: இப்போது வெள்ளி நகைகளுக்கு கடன் வழங்கப்படுவதில்லை. புதிய வரைவு, வெள்ளி நகைகள் மற்றும் குறிப்பிட்ட வெள்ளி நாணயங்களுக்கு எதிராக கடன் வழங்குவதை அனுமதிக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எனினும், குறைந்தபட்சம் 925 தூய்மையுடன் வங்கிகளால் விற்கப்படும் அச்சிடப்பட்ட வெள்ளி நாணயங்கள் மட்டுமே இதற்கு தகுதியுடையவை.

* கடன் வரம்பு: ஒரு கடனாளி அடகு வைக்கும் தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தங்க நாணயங்களை பொறுத்த வரை, அடகு வைக்கப்படும் மொத்த எடை ஒரு கடனாளிக்கு 50 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என புதிய விதி கூறுகிறது. இது சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

* தங்க மதிப்பு கணக்கீடு: பிணையமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தங்கம், 22 காரட் தங்கத்தின் விலையின் அடிப்படையில் மதிப்பிடப்படும். தூய்மை குறைவாக இருந்தால் (18 காரட்), கடன் வழங்குபவர் பிணையத்தை 22 காரட் தூய்மைக்கு சமமானதாக மாற்ற வேண்டும். இதனால் 18 காரட் நகைக்கு கடன் குறையும். இதேபோல், வெள்ளி 999 தூய்மை விலையில் மதிப்பிடப்படும்.

* கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல்: புதிய விதிமுறைகளின்படி, கடன் ஒப்பந்தத்தில் பிணையத்தின் விளக்கம், மதிப்பு, ஏல நடைமுறைகள், தங்கபிணையத்தை ஏலம் எடுப்பதற்கான சூழ்நிலைகள், ஏலத்துக்கு முன்பு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அறிவிப்பு காலம், பொருந்தக்கூடிய கட்டணங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும்.

* அடமானம் செய்யப்பட்ட நகையை விடுவித்தல்: கடன் முழுவதும் திருப்பிச் செலுத்தப்பட்ட 7 வேலை நாட்களுக்குள் அடமானம் செய்யப்பட்ட நகைகளை கடனாளியிடம் திருப்பித் தர வேண்டும். தாமதமானால், கடன் வழங்குபவர்/ வழங்கும் வங்கி தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும். பொதுவாக கடனை திருப்பிச் செலுத்திய நாளிலேயே நகை திரும்ப வழங்கப்படும் நிலையில், இந்த விதி தேவையற்றதாகஉள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் கடன் வாங்குபவர்கள் கடன் விதிமுறைகளைப் புரிந்துகொள்வதை எளிதாக்கும் எனது துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த வரைவில் கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டால் எல்லோராலும் எளிதாக கடன் பெற முடியாது. தனியார் அடகுகடைக்காரர்கள் இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, வங்கிகளின் கடன் விகிதத்தை காட்டிலும் கூடுதலாக கடன் தருவதோடு கூடுதல் வட்டி வசூலிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

வரைவு விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பொதுமக்கள், துறை சார்ந்த நிபுணர்கள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில் மாற்றங்கள் இருக்கலாம். இருப்பினும் இந்த விதிமுறைகள் தங்க நகைக் கடன் சந்தையில் புதிய ஒழுங்கு முறையை கொண்டு வருவதோடு கடன் வாங்குபவர்களுக்கும், வழங்குபவர்களுக்கும் இடையே அதிக வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

- somasmen@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x