Published : 19 May 2025 12:52 PM
Last Updated : 19 May 2025 12:52 PM
கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு பொதுமக்கள் மீதோ ராணுவ நிலைகள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை. ஆனாலும் இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதை இந்திய பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்தது. இதற்கு நடுவே, பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ஐஎம்எப் பரிசீலித்தது. ஆனால், தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதையும் மீறி பாகிஸ்தானுக்கு ஐஎம்எப் கடன் வழங்க ஒப்புதல் வழங்கியது. ஐஎம்எப் கடன் வழங்கும் நடைமுறைகள் பற்றி பார்ப்போம்..
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) அதன் உறுப்பு நாடு ஒன்று, பொருளாதார மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக பிணை எடுப்பு கடன்கள் (Bail Out loans) கேட்பது அசாதாரணமானது அல்ல. அனைத்து வளரும் பொருளாதாரங்களும் ஒன்றல்ல, பல நாடுகள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நெருக்கடி காலகட்டங்களை கடந்து வந்துள்ளன.
ஐ.நா.வின் 190 உறுப்பு நாடுகளில், ஐஎம்எப்-க்கு கடன்பட்ட நாடுகள் எண்ணிக்கை 95. அவை மொத்தம் 111.6 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ளன. அர்ஜென்டினா, எகிப்து மற்றும் உக்ரைன் உள்ளிட்ட முன்னணி கடனாளி நாடுகள் மொத்த கடனில் 51 பில்லியன் டாலர் (46%) பெற்றுள்ளன.
அதிக கடன் பெற்றுள்ள முதல் 10 நாடுகளில் பாகிஸ்தான் (5-ம் இடம்) மற்றும் வங்கதேசம் (10-ம் இடம்) ஆகியவை தெற்காசிய நாடுகள். பாகிஸ்தான் இதுவரை 25 முறை பிணை எடுப்பு கடன்களை பெற்றுள்ளது. அந்த நாடு கடந்த கால கடன்களைச் செலுத்தவே மீண்டும் கடன் வாங்குகிறது.
பாகிஸ்தானிய பொருளாதார நிபுணர் டாக்டர் கைசர் பெங்காலி (Kaiser Bengali), செப்டம்பர் 2024-ல் பல்வேறு அதிகாரப்பூர்வ குழுக்களில் இருந்து ராஜினாமா செய்தார். அதற்கு முன்பு, 2023-ல் பாகிஸ்தான் சர்வதேச விவகார நிறுவனம் (Pakistan Institute of International Affairs) ஏற்பாடு செய்த, ‘பாகிஸ்தானின் பொருளாதாரத்தின் நிலை: அடுத்து என்ன?’ எனும் கருத்தரங்கில் அவர் பேசியதாவது: "பாகிஸ்தானின் எந்தவொரு நிதி அமைச்சருக்கும், கடந்த கால கடன்களை அடைக்க அதிக கடன்களை எவ்வாறு பெறுவது என்பது மட்டுமேமிக எளிய பணி.
அதுதான் நாட்டின் பொருளாதாரத்தின் ஒரே செயல்பாடு. வருவாய் உருவாக்கம், மேம்பாடு, தொழில்மயமாக்கல், கல்வி, சுகாதாரம் போன்றவற்றைப் பற்றிய நீண்ட திட்டங்கள், அறிக்கைகள் நிச்சயமாக இருக்கும். ஆனால் அனைத்தும் விசித்திரக் கதைகள் (Fairy Tales), ஏனென்றால் எதற்கும் பணம் இல்லை.
எதுவும் நடக்காது” (Dawn, 16, July 2023). 2024-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட பாகிஸ்தானின் பிணை எடுப்பு கடனை விடுவிக்க ஐஎம்எப் கடந்த வாரம் (மே 9, 2025) ஒப்புதல் வழங்கியது. இதுபற்றி விவாதிப்பதற்கு முன்பு, 1991-93 ஆண்டுகளின் இந்தியாவின் ஐஎம்எப் பிணை எடுப்பு அனுபவத்தை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவின் கடன் அனுபவம்: 1990-களில் இந்தியாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஐஎம்எப் இடமிருந்து உடனடி கடன் உதவியை நாட வேண்டியிருந்தது. 1991 மற்றும் 1993-க்கு இடையில் கடன்கள் பெறப்பட்டன. 2 காத்திருப்பு ஏற்பாடுகளின் கீழ் மொத்தம் 2.2 பில்லியன் டாலர் பெறப்பட்டது. கூடுதலாக, 1991 தொடக்கத்தில் இந்தியா இழப்பீட்டு நிதி வசதியின் (Compensatory Finance Facility) கீழ் மேலும் 1.4 பில்லியன் டாலர் கடன் வாங்கியது.
ஆக மொத்தம் 3.6 பில்லியன் டாலர். இந்தியா கடன் வாங்கியதற்கான முதன்மைக் காரணம், இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள வேறுபாடு செலுத்துகை (Balance of Payments - BOP), சமநிலை நெருக்கடியைச் சமாளிப்பதாகும். BoP நெருக்கடி, அந்நியச் செலாவணி நெருக்கடியின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
செலாவணி போதுமானதாக இல்லாததால், உறுப்பு நாடு சராசரியாக மூன்று வார இறக்குமதிக்கு கூட தீர்வுத் தொகையைச் செலுத்த முடியாமல் போனது. வெளிநாட்டு நாணயத்தின் (அமெரிக்க டாலர்) அடிப்படையில் உள்நாட்டு நாணயத்தின் மதிப்பு குறையும் என்பதே பெரிய அச்சம்.
காத்திருப்பு ஏற்பாடு (Stand By Arrangements) அடிப்படையிலான ஐஎம்எப் கடன்கள் மற்றும் இழப்பீட்டு நிதி வசதி ஆகியவற்றின் நோக்கம், அந்நியச் செலாவணி இருப்புகளை அதிகரிப்பது, நாட்டின் நிதி நிலைமையை உறுதிப்படுத்துவது, உடனடி பணப்புழக்கத்தை வழங்குவது மற்றும் பொருளாதார சீர்திருத்தங் களை ஆதரிப்பது ஆகும். உறுப்பு நாட்டின் பொருளாதாரத்தில் நம்பிக்கையை வளர்ப்பதும் மற்றொரு நோக்கம் ஆகும். பொதுவாக, ஐஎம்எப் கடன் உதவி என்பது, நிதி நெருக்கடிக்கு ஒரு குறுகிய கால தீர்வாகும். இது உறுப்பு நாட்டுக்கு மிகவும் நிலையான பொருளாதார அடித் தளத்தை நிறுவுவதற்கான நீண்டகால இலக்காகும்.
2001 முதல் கடன் பெறவில்லை: ஐஎம்எப் இடம் 1991-1993 காலகட்டத்தில் பெற்ற பிணை எடுப்புக் கடன் மற்றும் வட்டியை 2020, டிசம்பர் 31-க்குள் இந்தியா முழுமையாகத் திருப்பிச் செலுத்தியது. 2001 முதல் ஐஎம்எப் இடம் இந்தியா எந்தக் கடனும் பெறவில்லை. ஜிடிபி அடிப்படையில் 4-ம் இடத்தில் உள்ள இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் நோக்கி முன்னேறி வருகிறது. 2047-ல், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, வறுமையை ஒழிப்பதற்கும், நடுத்தர வருமானத்தில் உயர்நிலைக்கு வருவதற்கும் இன்னும் பலவற்றை சாதிக்க வேண்டும்.
சராசரி தனிநபர் வருமான அடிப்படையில் இந்தியா தற்போது உலக வங்கியால் குறைந்த நடுத்தர வருமான (1,136 டாலர் முதல் 4,465 டாலர்வரை) நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2047-க்குள் உயர் நடுத்தர வருமான நிலையை (4,466 டாலர் முதல் 13,845 டாலர் வரை) அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தானின் பிணை எடுப்புக் கடன்: மே 9-ம் தேதி கூடிய ஐஎம்எப் செயல் இயக்குநர்கள் கூட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டிருந்தது: (i) ஏற்கெனவே (செப். 2024ல்) அங்கீகரிக்கப்பட்ட பிணை எடுப்புக் கடனில் (7 பில்லியன் டாலர்) 2-வது தவணையாக 1 பில்லியன் டாலர் வழங்குவதற்கான ஒப்புதலைப் பரிசீலிப்பது; (ii) மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதியின் (Resilience Stability Facility-RSF) கீழ் மற்றொரு புதிய கடனை (1.4 பில்லியன் டாலர்) முழுமையாக அங்கீகரிப்பது. இந்த முன்மொழிவுகள் தொடர்பான ஆவணங்கள், மே 9-ம் தேதி திட்டமிடப்பட்ட கூட்டத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் குழுவின் பரிந்துரையுடன் அனுப்பப்பட்டன.
மே 9 விவாதத்தின்போது எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு கடன் நிதியை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே புதிய வசதி மட்டுமல்ல, செப்டம்பர் 2024-ன் கீழ் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட கடனின் கீழ் எந்த நிதியையும் வழங்கக்கூடாது என்று இந்தியா வாதிட்டது. இந்தியாவின் ஆட்சேபனைகளை மீறி ஐஎம்எப், கடனுக்கு ஒப்புதல் அளித்தது. அன்று, 1.4 பில்லியன் டாலர் புதிய கடனையும் உடனடி விநியோகத்தையும் அங்கீகரித்தது. மேலும் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட கடனில் இருந்து 1 பில்லியன் டாலரை 2-வது தவணையாக வழங்கவும் ஒப்புதல் அளித்தது.
இது தொடர்பான வாக்கெடுப்பின்போது, பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையின்படி ‘இல்லை’ என்ற வாக்கெடுப்புக்கு எந்த ஏற்பாடும் இல்லாததால் இந்தியா புறக்கணித்தது (abstention). ஐஎம்எப், இந்தியாவின் வாதங்களையும் வாக்கெடுப்பை புறக்கணித்ததையும் கவனத்தில் கொண்டது.
பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகள்: இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானுக்கு அடுத்த கடன் தவணையை விடுவிப்பதற்கு 11 புதிய நிபந்தனைகளை ஐஎம்எப் விதித்துள்ளது. இதன்மூலம் மொத்த நிபந்தனைகள் 50 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நீடித்தால் அல்லது மோசமடைந்தால் ஐஎம்எப் கடன் திட்டம் மற்றும் சீர்திருத்த இலக்குகள் பாதிக்கப்படும் என ஐஎம்எப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு: சர்வதேச நாணய நிதியத்திடம் 1981-ம் ஆண்டுகடன் கேட்டு விண்ணப்பித்தபோது, இந்தியா இதேபோன்ற ஒரு புறக்கணிப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்கான அதிக விலைகளின் விளைவாக எதிர்கொள்ளும் சிரமங்களை தணிக்க இந்தியா ஐஎம்எப் இடம் 5.8 பில்லியன் டாலர் கடன் கேட்டது. அப்போது நடந்த வாக்கெடுப்பின்போது அமெரிக்கா அதை புறக்கணித்தது.
ஆனால், அமெரிக்காவின் ஆட்சேபனைகளை மீறி, நவம்பர் 10, 1981 அன்று இந்தியாவுக்கு 5.8 பில்லியன் டாலர் கடன் வழங்க ஐஎம்எப் ஒப்புதல் அளித்தது. இந்தியாவுக்கு கடன் வழங்குவது குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகன் தலைமையிலான அரசு கடுமையான சந்தேகங்களை வெளிப்படுத்தியது. குறிப்பாக, குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பதிலாக வளர்ச்சி நோக்கங்களுக்காக பயன்படுத்தும் என்று கூறியது.
ஆனால் இந்தக் கருத்துக்கு மற்ற முக்கிய நாடுகள் ஆதரவு அளிக்காததால் அமெரிக்கா வாக்களிப்பை புறக்கணித்தது. எனவே, இந்த வகையான ‘புறக்கணிப்பு' இயல் பானவை. நாம் அவற்றை முன்பே பார்த்திருக்கிறோம். ஏனெனில் அவை ஐஎம்எப் நடைமுறைகளின் ஒரு பகுதியாகும்.
- tkjayaraman@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT