Published : 26 Aug 2025 05:05 PM
Last Updated : 26 Aug 2025 05:05 PM
ஆக.19: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆக.19: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஆக.19: தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுத முடியாது என்று குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு வாதத்தை முன் வைத்தது.
ஆக.19: கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
ஆக.19: உதவி காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வில் இனி காவல் துறை இட ஒதுக்கீடு கிடையாது என்றும் அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
ஆக.19: ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகரா பட்டம் வென்றார்.
ஆக.20: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் மசோதாவை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
ஆக.20: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் ஒரே மாதத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஆக.20: தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆக.21: சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் காரணமில்லாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும் என்று என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்தது.
ஆக.21: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் ஜூனியர் ஸ்கீட் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மான்ஷி ரகுவன்ஷி தங்கப் பதக்கம் வென்றார்.
ஆக.21 இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்றும் ஆசியகோப்பை, உலகக் கோப்பை தொடர்கள்ல் மட்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆக.21 கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை ஒடிசாவில் உள்ள சண்டிபூர் பரிசோதனை மையத்திலிருந்து வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
ஆக.22: தலைநகர் டெல்லியில் பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. நாய்களைப் பிடித்து காப்பங்களில் அடைக்கும் உத்தரவையும் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
ஆக.24: ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறுமாறு மா நில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆக.24: அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா அறிவித்தார்.
ஆக.24: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 10 மீ. ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் பபுதா, இளவேனில் வாலறிவன் இணை தங்கப் பதக்கம் வென்றது.
ஆக.25: பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால் தடை விதித்துள்ளது. கொடிக் கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப் பிறப்பித்திருந்தது.
ஆக.25: அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராய்பாய் சானு 193 கிலோ எடையைத்தூக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆக.25: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் மகளிர் டிராப் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா இறுதிப் போட்டியில் 43 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT