Published : 27 May 2025 03:28 PM
Last Updated : 27 May 2025 03:28 PM
மே 20: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை என்று வக்பு திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து தெரிவித்தார்.
மே 20: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மே 21: துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து அரசுக்கு மாற்றும் தமிழக அரசின் சட்டங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மே 21: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை 6% வட்டியுடன் சேர்த்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மே 21: சத்தீஸ்கரில் நாராயண்பூரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர் பசவராஜ் உள்பட 27 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மே 22: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கூட்டாச்சி விதிமுறைகள், அனைத்து வரம்புகளையும் அமலாக்கத் துறை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மே 22: ‘ஹார்ட் லாம்ப்’ சிறுகதை தொகுப்புக்காக கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக் சர்வதேச புக்கர் விருதை வென்றார். முதல் முறையாக சிறுகதைத் தொகுப்புக்காக புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மே 23: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மே 24: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு வரி பகிர்வு பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும், கல்வி திட்ட நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மே 24: தமிழக அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுதீன் முகமது அயூப் (84) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
மே 25: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவி இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிராம்பி ஸ்ரீகாந்த் சீனாவின் லீ செப்பங்கிடம் 11-21, 9-21 என்கிற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார்.
மே 25: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
மே 25: கந்தகம் உள்பட அபாயகரமான ரசாயனங்களை கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்குப் புறப்பட்ட லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் கொச்சி அருகே கடலில் மூழ்கியது. இக்கப்பலில் பணிபுரிந்த 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மே 25: ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்திய பொருளாதாரம் உலகளவில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மே 26: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 19இல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக எம்.பி.க்கள் எம். சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன், பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், மதிமுக எம்.பி. வைகோ, அதிமுக எம்.பி. சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24இல் முடிவடைகிறது.
மே 26: தென் கொரியாவின் குமி நகரில் 26ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. ஆசிய கண்டத்தில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து 59 பேர் பங்கேற்றுள்ளனர்.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT