Last Updated : 14 May, 2025 07:04 AM

 

Published : 14 May 2025 07:04 AM
Last Updated : 14 May 2025 07:04 AM

பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 5

பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களில் பெரும்பாலோர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கவே விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

மாணவர்களுக்குச் சில யோசனைகள்:

* பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் பட்டியலையும் எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பது குறித்த விருப்ப வரிசையையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

* பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்.

* அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் கட்டணம் குறைவாக இருக்கும். அரசு ஒதுக்கீட்டின்கீழ் தனியார் சுயநிதிக் கல்லூரிகளைப் பொறுத்தவரை டியூஷன் ஃபீஸ் தவிர, மற்ற கட்டணங்கள் எவ்வளவு என்பதை முன்னதாகவே தெரிந்துகொள்வது நல்லது.

* அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள கையேடு, நாம் சேர விரும்பும் கல்லூரிகளின் இணைய தளங்களைப் பார்த்தும் சில அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

* ஏற்கெனவே பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் கல்லூரிகளிலும் முதுநிலைப் படிப்புகள் உள்ள கல்லூரி களிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்கும் என நம்பலாம். ஆனால், பல ஆண்டுகளாக உள்ள கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கக் கூடும் என்பதையும் புதிய கல்லூரிகளில் நல்ல வசதிகள் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

* பொறியியல் கல்லூரிகள் குறித்துப் பத்திரிகைகளிலும் காட்சி ஊடகங்களிலும் வரும் விளம்பரங்களைப் பார்த்து மயங்கிவிடக் கூடாது. பிரம்மாண்டமான கட்டிடங்கள் இருப்பதால் மட்டுமே அது சிறந்த கல்வி நிறுவனம் ஆகிவிடாது. அங்கு ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.

அதைவிட முக்கியம், அக்கல்லூரியில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இருக் கிறார்களா என்பதையும், கல்லூரிகளில் பாடத்திட்டத்தையும் தாண்டி மாணவர் களின் வேலை வாய்ப்புக்கு உதவும் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும்.

* தாங்கள் சேர விரும்பும் கல்லூரியைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதற்கு, அக்கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பார்ப்பதுடன், அக்கல்லூரியில் படித்துவரும் மாணவர்களிடம் அக்கல்லூரியின் நிறைகுறைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அனைத்துக் கல்லூரிகளுக்கும் நேரில் சென்று பார்ப்பது சாத்தியமல்ல என்றாலும் விருப்பப் பட்டியலில் உள்ள சில கல்லூரிகளுக்காவது நேரடியாகச் சென்று பார்க்கலாம்.

* நாம் சேர விரும்பும் கல்லூரியில் கடந்த ஆண்டு எத்தனை சதவீத இடங்கள் பூர்த்தியாகியுள்ளன என்பதையும், கல்லூரியில் மாணவர் தேர்ச்சி விகிதம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் பார்த்து சேர விரும்பும் கல்லூரிகளின் தரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

* சிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்துதான் பிரபலமான தொழில் நிறுவனங்கள் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் மாணவர்களைத் தேர்வுசெய்கின்றன. எனவே, நாம் சேர விரும்பும் கல்லூரிகளில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

* பொறியியல் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும்போது, அந்தப் பாடப்பிரிவில் எந்தவிதமான பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன, அந்தப் படிப்பை சிரமமில்லாமல் படிக்க முடியுமா, அந்தப் படிப்பைப் படித்தால் எந்தெந்த வேலைகளுக்குப் போகலாம் என்பதை மாணவர்கள் முன்னதாகவே தெரிந்துகொள்வது நல்லது. இது பற்றி ஆசிரியர்களிடமும் சீனியர் மாணவர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

* பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் ஏராளமான மாணவர்கள் போட்டிபோட்டு கொண்டு சேர்வார்கள். அந்தப் பாடப்பிரிவுதான் சிறந்தது என்றும் அந்தப் பாடப்பிரிவைப் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும்தான் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் நல்ல வேலை கிடைக்கும் என்றும் நினைக்க வேண்டாம். பொறியியல் கல்லூரிகளில் எந்தப் பாடப்பிரிவைப் படித்தாலும் அதில் சிறப்பாகப் படிக்கிற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

* மாணவர்களின் விருப்பத்துக்கு மாறான படிப்புகளில் சேரும்படி மாணவர்களைப் பெற்றோர் கட்டாயப் படுத்தக் கூடாது. ஆர்வமில்லாத படிப்பு களில் மாணவர்கள் சேரும்போது, அந்தப் படிப்பே சில நேரம் மாணவர்களுக்கு சுமையாகிவிடக்கூடும்.

* மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், ஆர்வம், திறமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எந்தக் கல்லூரியில், எந்தப் படிப்பில் சேர்வது என்பதைப் பெற்றோரும் மாணவரும் கலந்து ஆலோசித்து முடிவுசெய்ய வேண்டும்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x