Last Updated : 13 May, 2025 03:16 PM

 

Published : 13 May 2025 03:16 PM
Last Updated : 13 May 2025 03:16 PM

‘ஆபரேஷன் சிந்தூர்’ முதல் விராட் கோலி ஓய்வு அறிவிப்பு வரை: சேதி தெரியுமா? @ மே 6-12

சேதி தெரியுமா?

மே 6: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.

மே 7: சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

மே 7: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

மே 7: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ. சத்யநாராயண பிரசாத் (56) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

மே 7: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். அவர் 67 போட்டிகளில் 4301 ரன்களைக் குவித்தார். இதில் 12 சதங்கள், 18 அரை சதங்கள் அடங்கும். மேலும் கேப்டனாக 24 டெஸ்ட் போட்டிகளில் 12 வெற்றி, 9 தோல்விகளைப் பெற்றார்.

மே 8: இந்தியாவின் 15 நகரங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் சுதர்சன சக்கரம் வழிமறித்து அழித்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட்டில் உள்ள ராணுவ தளங்களைக் குறி வைத்து இந்தியப் படைகள் விடிய விடிய தாக்குதல் நடத்தின.

மே 8: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 0.47% அதிகம். தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில் மாணவிகள் 96.70%, மாணவர்கள் 93.16% தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் அரியலூர் மாவட்டம் 98.82% முதலிடம் பிடித்தது.

மே 8: தமிழக அமைச்சரவையில் 2 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. துரைமுருகன் வசம் இருந்த கனிமளத் துறை எஸ். ரகுபதிக்கும், அவரிடமிருந்த சட்டத் துறை துரைமுருகனுக்கும் ஒதுக்கப்பட்டது.

மே 8: உலகக் கத்தோலிக்கத் திருச்சபையின் 267ஆவது போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். முதல் முறையாக அமெரிக்காவைச் சேர்ந்தவர் போப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மே 9: இந்தியாவின் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் 30 இடங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் ஏவிய 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்தியாவின் வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

மே 9: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில் 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சியப் போட்டிகளைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.

மே 9: காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திரத்தைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர் முரளி நாயக் (25) வீர மரணம் அடைந்தார்.

மே 9: தேசிய கல்வி கொள்கையை ஏற்கும்படி மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

மே 10: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவி வந்த நிலையில் ராணுவத்துக்கு ஆதரவாகத் தேசிய கொடியேந்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி சென்னையில் நடைபெற்றது.

மே 10: இந்தியா - பாகிஸ்தான் இடையே உடனடியாகப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரு நாடுகளைச் சேர்ந்த முப்படைகளும் தாக்குதலை நிறுத்திக் கொண்டதாக இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டது.

மே 11: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர் என்று ராணுவ உயரதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மே 11: போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

மே 11: ஷாங்காயில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது.

மே 11: இலங்கையில் மூன்று நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மே 12: பாகிஸ்தான் இனியும் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் அணு ஆயுத மிரட்டல் இனி பலிக்காது என்றும் பிரதமர் மோடி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.

மே 12: தீவிரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் வேறு எந்த விஷயம் குறித்தும் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றும் பிரதமர் மோடி தெளிப்படுத்தினார். தண்ணீரும் ரத்தமும் ஒரே நேரத்தில் பாயாது என்றும் வர்த்தகமும் தீவிரவாதமும் ஒருசேர பயணிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மே 12: பாகிஸ்தான் மீதான தாக்குதலின்போது அந்நாட்டு அணு ஆயுத கிடங்கை இந்திய ஆயுதப் படைகள் குறி வைக்கவில்லை என்று விமானப் படை அதிகாரி ஏ.கே. பார்தி தெரிவித்தார்.

மே 12: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். விராட் கோலி 14 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையில் 123 போட்டிகளில் விளையாடி 9,230 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 30 சதங்கள், 31 அரை சதங்கள் அடங்கும். மேலும் 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 40 போட்டிகளில் வெற்றி, 17 தோல்விகளைப் பதிவு செய்துள்ளார்.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x