Published : 09 May 2025 04:48 PM
Last Updated : 09 May 2025 04:48 PM
சிறுவயதில் உங்கள் பெற்றோர், உறவினர், ஆசிரியர் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டிருக்கலாம் - ’வளர்ந்த பிறகு என்ன வேலைக்குப் போவாய்?’ இந்தக் கேள்விக்கு நீங்கள், ’மருத்துவர், அறிவியலாளர், விமான ஓட்டி’ என ஏதாவது ஒரு வேலையின் பெயரைக் கூறியிருப்பீர்கள். இதே கேள்வியை 12ஆம் வகுப்புக்குப் பின்பு உங்களிடம் கேட்கும்போது பலரால் உடனடியாகப் பதில் கூற முடிவதில்லை.
மனப்பாடம் வேண்டாம்: சிலரால் பதில் கூற முடிந்தாலும் சிறுவயதில் அவர்கள் கூறிய விருப்பத்திற்கு முற்றிலும் மாறாகப் புதிய வேலையைக் குறிப்பிட்டிருக்கலாம். அல்லது உங்களுக்கான வேலை என்ன என்பதே தெரியாமல் குழப்பமான நிலையில் இருக்கலாம். எந்த வேலைக்குச் செல்லப் போகிறோம்? அதற்கு எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்தும் எந்தத் துறையில் உங்களுக்கு உண்மையான ஆர்வம் உள்ளது போன்ற விஷயங்கள் குறித்தும் எதுவுமே தெரியாமல் குழப்பமாக இருக்கலாம்.
பெரும்பாலானோருக்கு ‘ஆர்வம்’ என்பது ஓர் உள்ளார்ந்த உணர்வு அடிப்படையில் இல்லாமல் நண்பர்கள் கூறுவது, அப்போதைக்குப் பிரபலமான படிப்பு அல்லது எதிர்காலத்தில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ள படிப்பு போன்ற ஏதோவொன்றைச் சார்ந்து இருக்கலாம். உங்களின் உண்மையான ஆர்வத்தை ‘Psychiatric’ தேர்வு மூலம் கண்டறிய முடியும். இதற்கு ‘Interest Inventory’ எனப்படும் உளவியல் தேர்வுகள் உதவும்.
ஆசையின் காரணமாக ஒரு படிப்பைத் தேர்வு செய்து, அதில் சேர்ந்த பின்னர்தான் சிலர் தனக்கான துறை அது அல்ல என்பதை உணர்கின்றனர். சிலர் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தேங்கி விடுகின்றனர். மரபுப் பொறியியல் பாடத்தைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக ஒரு மாணவர் என்னிடம் கூறினார். ஏன் அதைப் படிக்க விரும்புகிறாய் எனக் கேட்டேன். எனக்கு அந்தப் பாடம் மிகவும் பிடிக்கும் என்றார். அந்தப் படிப்பு தொடர்பாக அவரிடம் சில கேள்விகளைக் கேட்டபோது, எந்த ஒரு கேள்விக்கும் அந்த மாணவரால் பதிலளிக்க முடியவில்லை. இதெல்லாம் தேர்வுக்கு வராது. அதனால் எனக்குத் தெரியாது’ என்றார்.
மரபுப் பொறியியல் துறையில் அவருக்கு உண்மையான ஆர்வம் இருந்தால் தேர்வுக்காக மனப்பாடம் செய்யாமல், ஒவ்வொரு கருத்தையும் புரிந்துகொண்டு அந்த மாணவர் உள்வாங்கி இருக்க வேண்டும். நான் கேட்ட கேள்விகளுக்கு அவரால் விளக்கம் சொல்லி இருக்க முடியும். ஆனால், அப்படி நடக்கவில்லை. அந்தத் துறை தொடர்பாகப் படிக்க வேண்டும் என்பது அந்த மாணவரின் மனதில் மேலெழுந்த ஆசையே தவிர அதீத ஆர்வம் இல்லை.
ஆர்வத்தோடு படிக்கவும்: உண்மையான ஆர்வத்தைக் கண்டறிந்து, அது தொடர்புடைய பாடத்தைத் தேர்வுசெய்து படித்து முடித்த பின்பு, அப்படிப்பு தொடர்பான வேலையில் ஈடுபடும்போது மட்டுமே உங்களது முழுத் திறமையையும் பயன்படுத்த முடியும். நீங்கள் செய்யும் வேலையில் திருப்தி கிடைக்கும். வேலையைச் விரும்பிச் செய்யும்போது பணிச்சுமையும் தெரியாது. விருப்பப் பாடத்தை ஆர்வமுடனும், விருப்பத்துடனும் படிக்கும்போது அப்பாடம் தொடர்பாக கூடுதல் விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் இயல்பாகவே நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.
உங்கள் மனம் எதில் தீவிரமாக லயித்திருக்கிறது, எந்தப் பாடத்தைப் படிக்கும்போது மிகுந்த சந்தோஷமாக உள்ளது, எந்தப் படிப்பின் மீது உங்களுக்கு ஆழமானப் பிடிப்பு உள்ளது, எதை உங்கள் மனம் ஆழமாக விரும்புகிறது என்பதைக் கண்டறிந்து அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். ஆழமான நம்பிக்கை இருக்குமானால் உங்களது இலக்கில் குறுக்கிடும் தடைகள், புறச்சூழல் எதுவும் உங்கள் இலக்கு நோக்கிய பயணத்தைப் பாதிக்காது.
சரியான பாடப்பிரிவு, சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டே உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் ஏதோ ஒரு படிப்பைப் படிக்க நினைத்து, அது கிடைக்காதபோது பதற்றம் அடைகின்றனர். பின்பு கிடைத்த ஏதோ ஒரு படிப்பில் சேர மனம் சமரசம் ஆகிவிடுகிறது. இதனால் ஒருவரது லட்சியம், இலக்கு, தனித்திறன், விருப்பம் எல்லாம் ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்று விடுகின்றன. கல்லூரிப் படிப்பை முடித்து கிடைத்த வேலையில் வருமானத்துக்காக மட்டும் இயந்திரத்தைப் போல் பணியாற்றுவதில் தொடர்கிறது வாழ்க்கை.
இப்படி ஐந்தாறு ஆண்டுகள் கழித்து உறங்கிக் கொண்டிருந்த ஆழ்மன விருப்பம் சற்று விழிக்கும்போது சூழ்நிலை வேறு விதமாக இருப்பதை ஒருவர் உணரலாம். தனது கனவுப் பணியில் பணியாற்றும் வேறொருவரைச் சந்திக்கும்போது ஏக்கம் தொற்றிக்கொள்கிறது. அப்போது அந்தப் பாதையை விட்டுவிலகி வெகுதூரம் கடந்து இருப்பீர்கள்.
எனவே வேலையில் சாதிக்க ஆர்வம் மட்டும் போதுமா? படித்து முடித்துவிட்டு வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டாமா என்கிற கேள்வி உங்கள் மனதில் எழலாம். ஒரு துறையின் மீதுள்ள ஆர்வத்தினால் மட்டுமே அத்துறையில் எதிர்கால வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் சேர்ந்துவிட முடியுமா? படிப்புக்குப் பிறகு வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வது போன்ற கேள்விகளுக்கான பதில் அடுத்த அத்தியாத்தில்...
- கட்டுரையாளர், துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை.
(தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT