Published : 09 Apr 2016 12:05 PM
Last Updated : 09 Apr 2016 12:05 PM

படுக்கையறைப் பராமரிப்பு

வீட்டைக் கட்டி முடித்ததும், வீட்டை அலங்கரிப்பது முக்கியமான வேலை. உரிய பொறியாளரைக் கொண்டு எலிவேஷன் வரைந்து திட்டமிட்டு வீட்டின் முகப்பைக் கட்டுவோம். அதுபோல வீட்டின் உள்ளேயும் உள்ளலங்காரம் செய்து அழகுபடுத்துவோம். சாப்பாட்டறை, சமையலறை, வரவேற்பறை ஆகிய அறைகளில் உரிய அறைக்கலன்களைத் தேர்வுசெய்து அதற்குத் தகுந்தாற்போல் அந்தந்தச் சுவர்களில் வண்ணம் அடித்து அழகுசெய்வோம். இவ்வாறு அழகுபடுத்தும்போது படுக்கையறையை நாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

படுக்கை அறையின் சுவர்களில் மென்மையான உணர்வுகளைத் தரும் சுவரோவியங்களைத் தீட்டிவைக்கலாம். சிறு குழந்தைகள் உள்ள வீடென்றால் அவர்களது கிறுக்கல்களைக் கூட அழகிய சட்டமிட்டு மாட்டிவைக்கலாம். மனதுக்கு அவை இதமாக அமையும். படுக்கையறையின் விளக்குகள் மெலிதான வெளிச்சத்தை எப்போதும் வழங்க வேண்டும். வழக்கத்திற்கு அதிகமான கண்களைக் கூசச் செய்யும் விளக்குகளை மாட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

படுக்கை அறை எப்போதும் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம். படுக்கையறையில் ஓய்வெடுக்க வரும்போது அதன் சூழலே நமது மனத்திற்கு உகந்ததாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டிலின் மீது விரிக்கும் படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் விதவிதமான வண்ணங்களில் வசீகரமான விஷயத்தில் அமைந்தால் மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.

அழகிய ஓவியங்களும் சித்திரங்களும் வரையப்பட்ட தலையணை உறைகளையும் படுக்கைவிரிப்புகளையும் நாம் பராமரித்தால் அவை நமது ஓய்வு நேரத்தைச் சிறப்பாக்கும். சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய படுக்கை நேர்த்தியாக அமையப்பெற்றிருந்தால் படுக்கையில் சாய்வதே பரவசமான அனுபவமாக மாறும். படுக்கை விரிப்புகள் நமது தட்பவெப்ப நிலைக்கு உகந்த வகையில் அமைந்திருக்க வேண்டும்.

படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் அவற்றின் உறைகளும் எப்போதும் சுத்தமான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் கிருமிகள் அதிக அளவில் உருவாகும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x