Published : 06 Jul 2018 07:11 PM
Last Updated : 06 Jul 2018 07:11 PM
ச
மூக நாடகங்களின் வழக்கமான ‘டெம்பிளேட்’ கதைகளிலிருந்து விலகி, அண்மையில் இரண்டு நாடகங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தன. ‘தர்மாஸ்பத்திரி’, ‘என்ன கவி பாடினாலும்’ என்னும் இரண்டு நாடகங்களே அவை. இரண்டு நாடகங்களுமே ‘மயூரப்ரியா’ குழுவினரின் முயற்சியில் உருவானவை. நாடகத்துக்கான கருவை மருத்துவ உலகத்துக்கு நெருக்கமாக உருவாக்கியதுதான், அவற்றின் மீதான கவனம் குவிவதற்குக் காரணமாக அமைந்தது.
கார்ப்பரேட் மருத்துவமனைகளில் எப்படியெல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதையும், அதனால் நடுத்தர மக்கள் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும், அது குறித்த விழிப்புணர்வையும் நெகிழ்ச்சியோடு பதிவுசெய்கிறது `தர்மாஸ்பத்திரி’ நாடகம்.
உடல் அளவில் 30 வயது இளைஞனுக்கு உரிய வளர்ச்சி இருந்தாலும் மனதளவில் 7 வயதுச் சிறுவனின் மூளை வளர்ச்சியோடு இருக்கும் நீலமணி என்னும் மாற்றுத் திறனாளியையும், அவனுக்கு அளிக்கப்படும் ‘இசை’ சிகிச்சையையும் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் கதையைக் கொண்டது `என்ன கவி பாடினாலும்’ நாடகம்.
மாற்றுத் திறனாளியான நீலமணிக்கு இயல்பாகவே பாடல்களைக் கேட்டால் அவற்றின் ராகத்தைக் கூறும் திறமையை வளர்ப்பதன் மூலம், மருத்துவ சிகிச்சையின் அடுத்த கட்டத்தில் இசையைத் துணை மருத்துவமாகப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்னும் நம்பிக்கையை நாடகம் விதைக்கிறது.
டாக்டர்கள் கொடுத்த கதைகள்
இந்த இரண்டு நாடகங்களையும் இயக்கிய பி. முத்துக்குமரனிடம் (நீலமணியாக நடித்தவரும் இவரே!) பேசினோம்.
“இரண்டு நாடகங்களில் ‘தர்மாஸ்பத்திரி’ நாடகத்தின் கரு, ஆங்கில மருத்துவர்கள் டாக்டர் அருண் காத்ரே, டாக்டர் அபய் சுக்லா எழுதிய ‘டிஸ்ஸென்டிங் டயக்னாசிஸ்’ மற்றும் டாக்டர் கமல் குமார் மஹாவர் எழுதிய ‘தி எத்திக்கல் டாக்டர்’ ஆகிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
கார்ப்பரேட் மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை, உள்நோயாளிகளைச் சேர்ப்பதில் மருத்துவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது, அந்த இலக்கை அடைவதற்காக மருத்துவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற விஷயங்களை இந்தியா முழுவதும் உள்ள 78 மருத்துவர்களைப் பேட்டி கண்டதன் மூலமாக வெளிக்கொணர்கிறது முதல் புத்தகம்.
உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்ற நெருக்கடி கொடுக்கப்படும்போது, நம்மில் எத்தனை பேர் இன்னொரு மருத்துவரிடம் ‘செகண்ட் ஒப்பீனியன்’ கேட்க வேண்டும் என்ற அவசியத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்?
மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் வாங்கிப் பன்படுத்துவது தவறு என்பது தெரிந்தும் நம்மில் பலர் மருந்துகளை வாங்குகிறோம்தானே? இதற்கெல்லாம் காரணம், மருத்துவர்கள் மீது நமக்கு நம்பிக்கை இல்லாமல் போனதுதான். ஏன் அந்த நம்பிக்கை இல்லாமல் போனது? அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகிறது இரண்டாவது புத்தகம். அந்தப் புத்தகங்களால் ஈர்க்கப்பட்டு இந்த நாடகத்தை எழுதினேன்.
இவை தவிர, குன்னக்குடி வைத்தியநாதன் நீண்டகாலமாக செய்துவந்த இசை ஆராய்ச்சி, டாக்டர் அம்பிகா காமேஷ்வரின் இசை ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ‘என்ன கவி பாடினாலும்’ நாடகத்தை எழுதினேன்” என்கிறார் முத்துக்குமரன்.
மேடைகள் கொடுக்கட்டும் இன்னும் பல மருந்துகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT