Published : 03 Feb 2016 11:25 AM
Last Updated : 03 Feb 2016 11:25 AM
ஒருவரைப் பாராட்டுவதென்றால் எப்படிப் பாராட்டுவோம்? முதுகில் தட்டிக்கொடுத்து ‘சபாஷ்’ என்று சொல்லுவோமில்லையா? இந்த ‘சபாஷ்’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? எங்கிருந்து அந்த வார்த்தை வந்தது என்று வரலாற்றைத் திருப்புவோமா?
கி.பி. 1587-ம் ஆண்டில் பாரசீக நாட்டை ஷா-அப்பாஸ் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் துருக்கி, உஸ்பெக்கை வென்று தன் நாட்டுடன் இணைத்தார். 1607-ல் இந்தியாவின் மீதும்கூட அவர் படையெடுத்தார். அப்போது இந்தியாவை ஆண்டு வந்த முகலாய மன்னர் ஜஹாங்கீர், ஷா-அப்பாஸைப் போரில் தோற்கடித்தார்.
உடனே தான் சிறைப் பிடிக்கப்பட்டு விடக்கூடாது என்று நினைத்தார் ஷா-அப்பாஸ். தனக்குத் தெரியாமலேயே அந்தப் படையெடுப்பு நடந்துவிட்டதாகவும், முஸ்லிம் களுடன் நட்பு கொள்ளவே தான் விரும்புவதாகவும் ஜஹாங்கீருக்குத் தகவல் அனுப்பினார். ஜஹாங்கீர் இதைப் பார்த்துக் கோபப்படவில்லை. தோல்வி என்றதும் நிலைமையைத் தனக்குச் சாதகமாக மாற்றி, பின்வாங்கிய ஷா-அப்பாஸின் சாதுரியத்தைப் பாராட்டினார். அன்று முதல் யார் எந்த சாதுரியமான செயலைச் செய்தாலும் அவரை ‘ஷா-அப்பாஸ்’ என்று பாராட்டினார் ஜஹாங்கீர்.
காலப்போக்கில் அதுதான் ‘சபாஷ்’ என்றாகி மக்களோடு கலந்துவிட்டது! இந்த வார்த்தைக்குக் காரணமான ஷா-அப்பாஸுக்கு ஒரு சபாஷ் போடலாமா?
தகவல் திரட்டியவர்: பி. தினேஷ், 9-ம் வகுப்பு,
அரசு மேல் நிலைப்பள்ளி, மன்னார்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT