Published : 21 Sep 2016 10:30 AM
Last Updated : 21 Sep 2016 10:30 AM
குழந்தைகளே! மேஜிக் செய்துபார்த்து கொஞ்சம் நாளாகிவிட்டது அல்லவா? வாழைப்பழத்தை வைத்து சுலபமான ஒரு மேஜிக்கைச் செய்து பார்ப்போமா?
என்னென்ன தேவை?
வாழைப்பழம் ஒன்று, ஒரு தையல் ஊசி.
மேஜிக்:
‘கடையில் வாழைப்பழத்தை வாங்கியவுடன் எப்படிச் சாப்பிடுவோம்? அப்படியே உரித்துச் சாப்பிவோம் அல்லவா? வாழைப்பழத்தைத் துண்டாக்கிச் சாப்பிடக் கூடாதா என்ன? பழத்தை நறுக்க எப்போதும் கத்தியைப் பையிலா வைத்துகொள்ள முடியும்?’ என்று உங்கள் நண்பர்கள் முன்னால் இப்படி பேசுங்கள்.
‘இந்த மேஜிக்கைப் பாருங்கள்’ என்று கூறிவிட்டு ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். அந்தப் பழத்தைக் கைகளால் மந்திரம் செய்வது போல ஏதாவது சொல்லுங்கள். சொல்லிவிட்டு வாழைப்பழத் தோலை உரியுங்கள். என்னே ஆச்சரியம்! உரித்த வாழைப்பழம் உள்ளே துண்டுதுண்டாகக் கத்தியால் வெட்டியது போல இருக்கும். இந்த மேஜிக்கை எல்லோரும் வியந்து ரசிப்பார்கள்.
மேஜிக்கை எப்படிச் செய்வது?
மேஜிக்கைச் செய்வதற்கு முன்பே நீங்கள் ஒரு முன்தயாரிப்பில் ஈடுபட வேண்டும்.
# ஒரு வாழைப்பழத்தில் தையல் ஊசியைச் செருகுங்கள்.
# பழத்துக்குள் இடமும் வலமுமாக ஊசியை நன்கு அசையுங்கள். பழம் உள்ளுக்குள்ளேயே துண்டாவது போலச் செய்து, ஊசியை வெளியே எடுத்துவிட வேண்டும்.
# ஆனால், ஊசியை ஒரு பக்கம் குத்தும்போது மறுபக்கம் வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
# இதுபோல 3 அல்லது 4 பாகமாகக் குத்திப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
# கொஞ்சம் தள்ளிப் பார்க்கும்போது, நீங்கள் குத்திய அந்த 4 மெல்லிய துளை வெளியே தெரியாது. பிறகு என்ன? மேஜிக் செய்ய வாழைப்பழம் தயார். இந்த வாழைப்பழத்தை வைத்து மேஜிக்கை செய்துகாட்டி உங்கள் நண்பர்களை வியப்பில் ஆழ்த்துங்கள்.
வாழைப்பழத்தை ஊசியால் துளையிட்டுத் துண்டாக்குவதை ஒரு முறைக்கு இருமுறை பயிற்சி எடுத்து முயற்சிக்கவும். சரியாகச் செய்யவில்லை என்றால் கையில் ஊசி குத்திவிடும் ஆபத்து இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT