Last Updated : 28 May, 2025 06:49 AM

 

Published : 28 May 2025 06:49 AM
Last Updated : 28 May 2025 06:49 AM

என்ன தண்டனை? | கதை

நரி படுத்திருந்தது. அப்போது கரடி வந்து, “நரியே, இன்னும் உறக்கமா? தீனி பலமோ? உடனே சிங்கராஜா உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார்” என்றது. “எதுக்கு.?” “நீதானே தினமும் காலையில் காட்டில் நடக்கும் விஷயங்களைச் சிங்கராஜாவுக்குச் சொல்வாய்.”

“ஆமாம்” என்று மகிழ்ச்சியாகச் சொன்னது நரி. “இன்று ஏன் வரவில்லை? காட்டு நடப்பு தெரியாமல் சிங்கராஜா தவிக்கிறார். அதனால் உடனே உன்னை அழைத்து வரச் சொன்னார்” என்றது கரடி. நரிக்குப் பெருமையாக இருந்தது. “இதோ வருகிறேன். என்னைப் பார்க்கவில்லை என்றால் ராஜாவுக்குக் காட்டு நடப்பே தெரியாது” என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டது. சிங்கராஜா காத்திருந்தது.

“என்ன நரி, ஏன் இன்று வரவில்லை? காட்டு நடப்பே தெரியாமல் தவிக்கிறேன். நேற்று என்ன நடந்தது?” “சிங்கராஜா, மன்னிக்க வேண்டும். நேற்று எனக்குத் தலைவலி. அதனால் சரியாகத் தூங்க முடியவில்லை. காலையில்தான் உறக்கம் வந்தது” என்றது நரி. “நீ செய்தியைச் சொல்லாவிட்டால், காட்டின் விதிகள் மீறப்பட்டிருக்குமோ என்கிற கவலை எனக்கு வந்துவிடுகிறது” என்றது சிங்கராஜா. “கவலை வேண்டாம் மன்னா. நான் செல்லும் இடமெல்லாம் சொல்வது ஒன்றுதான். நம் மன்னர் மிகுந்த கட்டுப்பாட்டுக்குப் பெயர் பெற்றவர். மன்னர் வகுத்த சட்டத்தை மீறினால் தண்டனை உறுதி என்று கூறுகிறேன்.”

“ஆஹா! அருமையான கொள்கைபரப்புச் செயலாளர் நீதான். யாரங்கே? நரிக்கு நல்ல உணவைக் கொண்டு வாருங்கள்” என்று குரல் கொடுத்தது சிங்கராஜா. உடனே நரிக்கு நாவில் நீர் ஊறியது. காட்டுப்பூனை ஒரு பெரிய தட்டு நிறைய நரிக்குப் பிடித்த உணவு வகைகளைக் கொண்டுவந்து வைத்தது. நரி ரசித்து, ருசித்துச் சாப்பிட்டது. “என்ன, பசி அடங்கிவிட்டதா?” என்று சிங்கராஜா கேட்டது.

“நன்றி மன்னா. உங்களுக்குத்தான் என் மீது எவ்வளவு பிரியம்! என்னால் மறக்கவே முடியாது” என்றது நரி. “என்னாலும் உன்னை மறக்க முடியாது. அது சரி, நேற்று நீ எங்கும் செல்லாததால் காட்டில் நடந்த ஒரு அநியாயம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை” என்றது சிங்கராஜா. “அநியாயமா? நம் காட்டிலா? என்ன அது?” என்று பதற்றத்துடன் கேட்டது நரி. “கழுதையே, மானை அழைத்து வா” என்றது சிங்கராஜா. தாய் மானையும் அதன் குட்டியையும் அழைத்து வந்தது கழுதை.

“தெரியுதா?” “இந்த மானைத் தெரியும் மன்னா. ஆனால், மானுக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டது நரி. “தாய் மான் போன வாரம்தான் குட்டி போட்டிருக்கிறது. குட்டி போடும் காலத்திலும் குட்டி போட்ட பிறகும் தாயையோ குட்டியையோ உணவுக்காகத் தாக்கக் கூடாது என்பது சட்டம். அது மீறப்பட்டிருக்கிறது.” “இருவரும் நலமுடன்தானே இருக்கிறார்கள், மன்னா?” “உளவுப் பிரிவைச் சேர்ந்த கழுதை அங்கு இருந்ததால், தாக்க வந்த விலங்கை ஓங்கி உதை விட்டிருக்கிறது. அந்த விலங்கு ஓடிவிட்டது. அநேகமாகப் பக்கத்துக் காட்டுக்குச் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்.”

உடனே கரடி, கழுதை, மான், மான் குட்டி, காட்டுப் பூனை என அனைத்தும் சிரித்தன. சிங்கராஜாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. “நான் ஒரு நாள் போகவில்லை என்றால், என்னவெல்லாம் நடக்குது? நம்பவே முடியவில்லை” என்றது நரி. “எனக்கும்தான். ஆனால், நான் புத்திசாலித்தனமாகக் கழுதையை அனுப்பி வைத்ததால், இந்த அநியாயம் என் கவனத்துக்கு வந்தது. மானும் குட்டியும் தப்பின. நம் காட்டு விதியும் காப்பாற்றப்பட்டது.” “மன்னா, இப்போது அந்த விலங்கு அடுத்த காட்டிலா இருக்கிறது?” என்றது நரி. “இல்லை, இல்லை... நம் காட்டில்தான் பாதுகாப்பாக உள்ளது.”

“அப்படி என்றால் தண்டனை கொடுக்க வேண்டுமே? எங்கே அது?” என்று கேட்டது நரி. “ஆமாம், நம் காட்டின் விதி என்ன சொல்கிறது? “காட்டு விதி 6இன் படி தவறு இழைத்தவர் கழுதையால் உதைக்கப்பட வேண்டும் மன்னா” என்றது கரடி. “நல்லது. மன்னர் முன் பொய் சொன்னால் தண்டனை என்ன நரி?” “யானை காலால் உதைபட வேண்டும். ஆனால், தவறு செய்தது யார்?” என்றது நரி. “யாரது, யானையை அழைத்து வாருங்கள். கழுதை உதைத்த பிறகு, யானை உதைக்க வேண்டும். ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அது எனக்கு நெருக்கமானவன் என்றாலும் விடமாட்டேன்” என்று சிங்கராஜா கர்ஜனை செய்தது.

“ஐயோ, மன்னா... என்னை மன்னித்துவிடுங்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்துவிட்டேன்” என்றது நரி. “தவறு செய்ததைவிட, அதை ஒப்புக்கொள்ளாமல் இருந்தது அதைவிடப் பெரிய தவறு அல்லவா?” “ஆமாம், மன்னா. இந்த முறை என்னை மன்னித்துவிடுங்கள்.” “தவறு யார் செய்தாலும் தண்டனை உண்டு.

ஆனால், இதுவரை நீ எனக்குச் செய்த உதவிகளை நினைத்து, உன்னுடைய பொறுப்பை மட்டும் பறித்துவிடுகிறேன். இனி உன் வேலையை இந்த மான் செய்யும். நீ ஓராண்டுக்கு எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், நல்ல உள்ளத்துடன் வாழ்ந்து காட்ட வேண்டும்.” “இனி இப்படி ஒரு தவறைச் செய்ய மாட்டேன். நன்றி மன்னா” என்று சொல்லிவிட்டு ஓடியது நரி.

- முருகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x