Last Updated : 23 May, 2025 12:30 PM

 

Published : 23 May 2025 12:30 PM
Last Updated : 23 May 2025 12:30 PM

சிங்கத்தின் கர்ஜனைக்கு என்ன அர்த்தம்? | உயிரினங்களின் மொழி - 20

ஆப்ரிக்க, இந்தியக் காடுகளில் வாழும் பெரிய பூனை இனங்களில் ஒன்றான சிங்கங்கள் கூட்டமாக வாழ்கின்றன. ஒன்றோடு மற்றொன்று தொடர்பு கொள்ள உடல் அசைவுகள், ஒலிகள், வாசனைகள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன.

கர்ஜனைதான் சிங்கத்தின் முக்கியமான தொடர்பு முறை. ஒரு சிங்கம் கர்ஜித்தால் சுமார் 8 கி.மீ. தூரம் வரை கேட்கும். ஒவ்வொரு கர்ஜனைக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் உள்ளது. தங்கள் இருப்பிடத்தை அறிவிக்கக் கர்ஜிப்பது வேறு, எல்லைகளை வரையறுக்கக் கர்ஜிப்பது வேறு. அது போலவே தூரத்தில் உள்ள மற்ற சிங்கங்களுக்குத் தகவல் தெரிவிக்கவும், மற்ற விலங்குகளை அச்சுறுத்தவும் கர்ஜிக்கும்.

கர்ஜனையைத் தவிர, சிங்கங்கள் குறைந்த அதிர்வெண்ணிலும் பல்வேறு ஒலிகளை எழுப்பும். மற்ற விலங்குகளை எச்சரிக்கவும், சக சிங்கத்தை அச்சுறுத்தவும் சீறுவது போல் ஒலி எழுப்பும்.

அதிருப்தி அல்லது கோபத்தை வெளிப்படுத்த உறுமும். பெண் சிங்கங்கள் தங்கள் குட்டிகளுடன் தொடர்பு கொள்ளும் போது மென்மையாகக் கர்ஜிக்கும். சிங்கங்கள் காயமடைந்திருக்கும்போது, நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது உடல் வலியில் இருக்கும்போது மெல்லிய ஒலியை எழுப்புகின்றன. இது மற்ற சிங்கங்களுக்கு அவற்றின் நிலைமையைத் தெரிவிக்கவும், உதவி தேவைப்படுவதை அறிவிக்கவும் உதவுகிறது.

சிங்கம் என்ன மனநிலையில் உள்ளது என்று தெரிந்துகொள்ள வாலைப் பார்த்தால் போதும். வால் உயர்ந்து இருந்தால் விழிப்பாக இருக்கிறது என்று அர்த்தம். வால் ஆடிக் கொண்டே இருந்தால் எரிச்சலில் உள்ளது என்பதை உணர்ந்து, மற்ற விலங்குகள் தூரமாகச் சென்றுவிடும். எந்த அசைவுமின்றி சோர்ந்து போய் இருந்தால், பயத்தில் இருப்பதாக அர்த்தம்.

மனநிலையைத் தெரிந்துகொள்ள வால் என்றால், உணர்வுகளைத் தெரிந்துகொள்ள முகத்தைக் கவனிக்க வேண்டும். பற்களைப் பளீரென்று காட்டினால் எச்சரிக்கைச் செய்கிறது. காதுகளைப் பின்னால் தள்ளினால் ஆக்ரோஷமாக அல்லது அது அச்ச உணர்வில் இருக்கிறது. கண்களைச் சுருக்கினால், கவனமாக இருக்கிறது அல்லது சுற்றி உள்ள ஏதோ ஒன்றைச் சந்தேகிப்பதாக அர்த்தம்.

கண்களை, வாலைப் பார்க்கச் சிரமமாக இருக்கிறது என்றால் அதன் மொத்த உடலைப் பாருங்கள். குனிந்த நிலையில் இருக்கிறது என்றால் வேட்டையாடத் தயாராக உள்ளது. தலையை உயர்த்தி கம்பீரமாக இருந்தால், ஆதிக்க உணர்வில் இருக்கிறது. அதே உடல் பவ்யமாகக் குனிந்தால், ’சமாதானம்’ என்று பொருள்.

சிங்கங்களின் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகள் வாசனைகளை வெளியிடுகின்றன. குறிப்பாகக் கன்னங்கள், முகத்தின் பக்கவாட்டுப் பகுதிகளில் சிறப்புச் சுரப்பிகள் உள்ளன. இந்தச் சுரப்பிகள் தனித்துவமான வாசனைகளை வெளியிடுகின்றன. சிங்கங்கள் ஒன்றுக்கு மற்றொன்று முகத்தை உராய்வதன் மூலம் இந்த வாசனைகளைப் பரிமாறிக்கொள்கின்றன. இது அவற்றிற்கிடையே உள்ள சமூக பிணைப்பை வலுப்படுத்துகிறது.

சிங்கங்கள் ஒன்றை மற்றொன்று மூக்கால் முகர்ந்து பார்ப்பதன் மூலம் இந்த வாசனைகளை அறிகின்றன. இதன் மூலம் சிங்கங்களுக்கிடையே அங்கீகாரம், ஏற்புத்தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்க உதவுகிறது. ஒரே கூட்டத்தைச் சேர்ந்த சிங்கங்கள் தங்களுக்குள் வலுவான சமூக உறவுகளை நிலைநிறுத்த இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.

பெண் சிங்கங்கள் தங்கள் இனப்பெருக்க நிலையைக் குறிப்பிட்ட வாசனைகள், ஒலிகள் மூலம் தெரிவிக்கின்றன. ஆண் சிங்கங்கள் அதிகக் கர்ஜனை, தீவிர வாசனை குறியீட்டின் மூலம் பதிலளிக்கின்றன.

பெண் சிங்கங்கள் தங்கள் குட்டிகளுடன் தொடர்பு கொள்ளக் குறிப்பிட்ட ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. குட்டிகளுக்கு உடல் மொழி மூலம் வேட்டையாடுதல், பாதுகாப்பு போன்ற திறன்களைக் கற்பிக்கின்றன.

சிங்கங்களின் கர்ஜனை 40 ஹெர்ட்ஸ் முதல் 200 ஹெர்ட்ஸ் வரை மாறுபடும் அதிர்வெண்களைக் கொண்டுள்ளது. மிகக் குறைந்த அதிர்வெண்கள் நீண்ட தூரத்திற்குப் பயணிக்கும்.

சமீபத்திய ஆராய்ச்சிகள் சிங்கங்களின் தொடர்பு முறைகளைப் பற்றிய புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. விஞ்ஞானிகள் சிங்கங்களின் கர்ஜனைகளைப் பகுப்பாய்வு செய்ததில், ஒவ்வொரு சிங்கத்தின் கர்ஜனையும் அதற்கே உரித்தான தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

இரவு நேரத்தில் அல்லது அடர்ந்த காடுகளில் தொலைவில் உள்ள சிங்கங்களைப் பார்க்காமலேயே கர்ஜனையை வைத்து அடையாளம் காணும் திறன் இவற்றிற்கு உண்டு. இந்தக் கண்டறிதல் சிங்கங்களின் சமூக அமைப்பு, தொடர்பு முறைகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியுள்ளது.

கட்டுரையாளர், எழுத்தாளர் | தொடர்புக்கு: writernaseema@gmail.com

முந்தைய பகுதி > காதுகள் மூலம் தகவல் பரிமாறும் குதிரைகள் | உயிரினங்களின் மொழி - 19

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x