Published : 21 May 2025 07:58 AM
Last Updated : 21 May 2025 07:58 AM
நான் ஜென்னியாக இருந்தபோதே புரட்சி ஒரு சொல்லாக அறிமுகமாகிவிட்டது. என்றாலும் அதன் பொருளை முழுமையாக நான் உணர்ந்து கொண்டது ஜென்னி மார்க்ஸாக மாறிய பிறகுதான். அவர் யார், அவரோடு இணைந்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவது எப்படி இருக்கும், அந்தப் புதிய வாழ்க்கையில் என்னவெல்லாம் கிடைக்கும், என்னவெல்லாம் கிடைக்காது என்று அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அவர் கரங்களைப் பற்றிக்கொண்டேன். பற்றிக் கொண்ட பிறகு, ஒரு கணம், ஒரேயொரு கணம்கூட இப்படியொரு முடிவை எடுத்துவிட்டோமே என்று கலங்கியதில்லை நான்.
‘ஜென்னி, ஜென்னி வா இங்கே. பார் இதை’ என்று காட்டுக் கத்தல் கத்தியபடி ஓடிவருவார். என்னவோ, ஏதோ என்று பதறியபடி ஓடுவேன். ஒரு புத்தம் புதிய புத்தகத்தை என் முன்னால் நீட்டுவார். ‘இதோ சுடச்சுட வந்துவிட்டது. நம் துயரமெல்லாம் தீர்ந்தது ஜென்னி. நிச்சயம் இதற்கு நல்ல சன்மானம் தருவார்கள். குழந்தைக்கும் உனக்கும் நல்லதாக ஏதாவது வாங்கலாம். எங்காவது கவலையின்றி ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். என்ன சொல்கிறாய்?’
காத்துக்கொண்டே இருப்பார். எதுவும் வராது. எதையாவது போட்டு உடைத்துவிட்டு எங்கே நம்மை அம்மா திட்டுவாரோ என்று முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு வந்து ஒரு குழந்தை கொஞ்சும் பார்த்திருக்கிறீர்களா? அச்சு அசல் அப்படியே செய்வார். ‘தருவதாகச் சொன்னார்கள், ஜென்னி. ஒருவேளை புத்தகம் விற்பனை ஆகவில்லையோ என்னவோ? அல்லது தாமதமாகக் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.
கவலைப்படாதே, ஒரு புதிய பத்திரிகை ஆரம்பித்திருக்கிறார்கள். என்னை எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். சிறு தொகையாவது கொடுப்பார்கள். குறைந்தது, ஒரு வேளை நாம் அனைவரும் நன்றாகச் சாப்பிட அது போதும். மகிழ்ச்சிதானே?’குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, அவரோடு அமர்வேன்.
‘இந்த உலகில் உழைப்புக்கு அர்த்தமே இல்லையா? நாள் முழுக்க, வாரம் முழுக்க, மாதம் முழுக்க உயிரைக் கொடுத்து உழைத் தாலும் ஒரு தொழிலாளி ஏன் அடிப்படையான தேவைகளுக்குக்கூட அவதிப்பட வேண்டும்? இன்னும் எவ்வளவு உழைத்தால் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் வயிறு நிறைய உணவு கிடைக்கும்? குழந்தைகளுக்கு நல்ல ஆடை வாங்கிக் கொடுக்க அவர் தன் முதுகை இன்னும் எவ்வளவு வளைக்க வேண்டியிருக்கும்? இன்னும் எவ்வளவு வியர்வை சிந்தினால் அவர் முகத்தில் புன்னகை மலரும்?’
‘உடைந்த வீட்டில் பிறக்கும் ஒரு குழந்தை இறுதிவரை உடைந்தே இருக்கும் என்பது என்ன மாதிரியான நீதி? உடைந்திருப்பது நீதி மட்டுமல்ல. வீடு மட்டுமல்ல. நம் சமூகமும்தான், ஜென்னி. மேடு பள்ளங்கள் இல்லாத சமூகத்தில்தான் நிலையான வீடுகள் நிற்கும். அப்படியொரு சமூகம் வர வேண்டுமானால் எல்லாவற்றையும் தலைகீழாகத் திருப்பிப் போட வேண்டும். சங்கிலிகள் அனைத்தும் நொறுங்க வேண்டும்.
அப்போதுதான் புதிய உலகம் தோன்றும், ஜென்னி. அப்போதுதான்...’‘இருங்கள், இருங்கள். சமூகத்தை மாற்றுவதற்கு முன்னால் செய்ய வேண்டியது இன்னொன்று இருக்கிறது’ என்று அவரைப் பேச விடாமல் தடுப்பேன். ‘உழைப்பாளி பாவம்தான். அவரைக் கசக்கிப் பிழிவது பெருந்தவறு, சந்தேகமில்லை.
ஆனால் அதே தொழிலாளி தன் வீட்டிலுள்ள பெண்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும் அல்லவா? ஆலையைக் காட்டிலும் மோசமாக அல்லவா சமையலறை இருக்கிறது? அங்கே உழைக்கும் பெண்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? அவர்களுக்கு எப்போது ஆண்களிடமிருந்து விடுதலை கிடைக்கப் போகிறது?’ ஆம், ஆம் என்று துள்ளிக் குதிக்கும் எங்கள் குழந்தை. ‘இதற்குதான் நீ வேண்டும், ஜென்னி’ என்று ஆரவாரம் செய்வார். அது, இது என்று பேசிக்கொண்டே போவோம்.
போன வாரம் அவர் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்த மேஜை இன்று இல்லை. விற்றுவிட்டோம். தரையில் அமர்ந்து மடிமீது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதற்குமேல் காகிதத்தை வைத்து அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். குளிரில் அவர் உடல் நடுங்குகிறது. அவருடைய அங்கியை நேற்றுதான் விற்றோம்.
கடன் கொடுத்தவர்கள் நாற்காலிகளைத் தூக்கிக்கொண்டு போய்விட்டதால் அறை பெரிதாகிவிட்டதுபோல் இருக்கிறது. தரை விரிப்பு இல்லை. குழந்தைக்கு விட்டுவிட்டுக் காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கிறது. நல்ல உணவு சாப்பிட்டு நாள்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் எனக்கும் அடிக்கடி தள்ளாமல் போய்விடுகிறது. நான் நன்றாகவே இருக்கிறேன், நீயே பாரேன் என்று சிரித்தாலும் அவரையும் வலி தின்றுகொண்டுதான் இருக்கிறது.
கடைசியாக எஞ்சியிருந்த தொட்டிலை வாங்கிப் போக ஒருவர் வந்திருந்தார். உலகைப் புரட்டிப்போடுவது குறித்து இரவெல்லாம் எழுதிக்கொண்டிருந்தவரால் தொட்டிலைத் தூக்குவதை விடுங்கள், நகர்த்தக்கூட முடிய வில்லை. என்னையும் குழந்தையையும் கண்கொண்டு பார்க்கும் துணிவுகூட இல்லை அவரிடம். குழந்தையைத் தூக்கி கீழே ஒரு துணியில் படுக்க வைத்துவிட்டு, தொட்டிலை எடுத்துக் கொடுத்து அனுப்பினேன்.
உம்மென்று ஒரு மூலையில் சுருண்டு கிடந்தவரைப் பிடித்து இழுத்து அமர வைத்தேன். ‘கவலைப்படாதீர்கள். எல்லாவற்றையும் இழந்தாலும் இறுதியில் நம் கனவு நமக்காக எஞ்சியிருக்கும். நம்மிடமுள்ள விலை மதிப்பில்லாத ஒரே செல்வம் அது ஒன்றுதான். எந்த இருளையும் வெல்லும் வெளிச்சத்தை, எந்த வலியையும் போக்கும் ஆற்றலை நம் கனவுதான் நமக்கு அளிக்கிறது. எழுந்திருங்கள்.’
இதோ எழுந்து அமர்ந்துவிட்டார். விவாதம் முடிந்து, எழுத ஆரம்பித்துவிட்டார். பேனாவைத் திறந்து வைத்துக்கொண்டேன். கோழி கிறுக்கலில் அவர் எழுதி அளிக்கும் ஒவ்வொரு தாளையும் வாங்கி, வேறொரு தாளில் புதிதாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சில மணி நேரத்தில் அவர் சோர்வடைந்து உறங்கிவிடுவார்.
முழுக்க எழுதி முடித்த பிறகே நான் உறங்க முடியும். ‘அம்மா, எப்போது என் பக்கம் திரும்புவாய், எப்போது என்னைக் கொஞ்சுவாய்’ என்று ஏக்கத்தோடு சிணுங்கி, சிணுங்கி பார்த்துவிட்டுச் சலித்துப்போய் தூங்க ஆரம்பித்துவிட்டாள் மகள். அவள் கன்னத்தை வருடிக்கொடுத்தேன். என்ன கனவு கண்டுகொண்டிருக்கிறாய் பெண்ணே? உன் அப்பாவும் அம்மாவும் கண்டுகொண்டிருக்கும் அதே கனவையா?
ஜென்னி மார்க்ஸ் - உலகப் புகழ்பெற்ற பொதுவுடைமைவாதியும் பொருளாதார அறிஞரும் வரலாற்றாசிரியருமான கார்ல் மார்க்ஸின் இணையர். மார்க்ஸின் எழுத்துகளிலும் சிந்தனையிலும் ஜென்னியின் பங்களிப்பு முக்கியமானது.
(இனிப்பு நிறைந்தது)
- marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT