Published : 21 May 2025 07:50 AM
Last Updated : 21 May 2025 07:50 AM
அந்தக் குட்டி பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்தது. கண் விழித்ததும் தன் தாயைத் தேடியது. ஆனால், யாருமே இல்லை. மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தது. ‘ஐயோ... நான் யார் என்றும் தெரியவில்லை. என் அம்மா எங்கே என்றும் தெரியவில்லை’ என்று நினைத்தபோதே, அந்தக் குட்டிக்கு அழுகை வந்துவிட்டது.
அந்தப் பக்கமாகப் பறந்து கொண்டிருந்த உண்ணிக் கொக்கு, “ஏன் அழற?” என்று கேட்டுக்கொண்டே, குட்டியின் முதுகில் அமர்ந்தது. “நீ யார்?” “உண்ணிக் கொக்கு என்பது என் இனம். என் பெயர் டூடூ.” “இனம்னா என்ன?” “ஒரே மாதிரி நிறைய பேர் இருந்தா அவங்க எல்லாம் ஒரே இனம். நீ ஏன் அழற?” “நான் யார்?” “என்ன, நீ யார் என்று தெரியலையா?” “ஆமா, என் அம்மாவைக் காணோம். நான் யாருன்னு தெரியுமா?”
“நீ ம்ம்மானு கத்தினே, அப்ப நீ ஒரு மாடு” என்றது டூடூ. “நான் மாடா? அதான் என் பேரா?” “இல்ல, மாடு என்பது இனம். வா, உன்னை மாடுகள் கிட்ட கூட்டிட்டுப் போறேன்.” உண்ணிக் கொக்கும் குட்டியும் மாடுகளிடம் சென்றன. “என்ன டூடூ எப்படி இருக்க? இது யார்?” என்று கேட்டது மாடுகளின் தலைவி.
“இவன் தொலைஞ்சு போயிட்டான். உங்களை மாதிரியே கத்துறான். அதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்.” “டூடூ, இது எங்க இனம் இல்ல. குதிரையா இருக்கலாம்” என்றது மாடுகளின் தலைவி. குதிரைகள் இருக்கும் இடம் நோக்கி, குட்டியை அழைத்துச் சென்றது டூடூ. குட்டியைக் குதிரைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. “இவன் குதிரை இல்ல. கழுதைகிட்ட கேட்டுப் பாரு” என்றது.
கழுதையிடம் அழைத்துப் போனது டூடூ. “இவன் கால் நீளமா இருக்கு. கண்டிப்பா கழுதை இல்ல. வரிக்குதிரைகிட்ட கேளு” என்றது கழுதை. வரிக்குதிரையிடம் சென்றன. “இவன் ஒட்டகம் மாதிரி இருக்கான்” என்றது வரிக்குதிரை. யாருக்குமே தன்னை அடையாளம் தெரியவில்லை என்று மீண்டும் அழ ஆரம்பித்தது குட்டி. “அழாதே, வா ஒட்டகத்தைத் தேடிப் போவோம். காட்டை ஒட்டி இருக்கும் பாலைவனத்துலதான் அது இருக்கும்” என அழைத்துப் போனது டூடூ.
பாலைவனத்தில் குட்டியால் நடக்கவே முடியவில்லை. மீண்டும் காட்டுக்கே ஓடிவிட்டது “அந்தக் குட்டி ஏன் ஓடுகிறது?” என்று கேட்டது ஒட்டகம். டூடூ காரணத்தைச் சொன்னது. “எங்களைப் போல் சாயல் இருந்தாலும் அவன் எங்கள் இனம் இல்ல” என்றது ஒட்டகம். அப்போது உண்ணிக் கொக்குகள் எதையோ தேடிக்கொண்டு பறப்பதைக் கவனித்தது டூடூ. “என்ன தேடுறீங்க?” “நம்ம கியோவோட குட்டியைக் காணோம். அதான் தேடிட்டு இருக்கோம்.”
“கியோ எப்ப குட்டி போட்டது?” “இன்னிக்குதான் குட்டி போட்டுதாம். தண்ணீர் குடித்துவிட்டு வந்து பார்த்தால் குட்டியைக் காணோமாம். “எங்களைக் கியோகிட்ட கூட்டிட்டு போ” எனக் கேட்டுக் கொண்டது டூடூ. மூன்றும் கியோ இருக்கும் இடம் நோக்கிச் சென்றன. தூரத்தில் இருந்தே இவர்கள் வருவதைப் பார்த்துவிட்டது கியோ. ஓடிவந்து தன் குட்டியை நாவால் வருடிக் கொடுத்தது. “எங்கே தங்கம் போனே? உன்னைத் தேடித் தவித்தேன்“என்றது கியோ. “எனக்கு நான் யார் என்றே தெரியவில்லை. டூடூ அக்காதான் உதவி செஞ்சாங்க” என்றது குட்டி. “நன்றி டூடூ.”“ஆமா, நாம என்ன இனம்?” என்று கேட்டது குட்டி.
“ஒட்டகச்சிவிங்கி.” “உன் குட்டிக்கு உன்னைப் போல டிசைன் எதுவும் இல்லையே... உடம்பு ஒரே நிறத்தில் இருக்கு” என்று தன் சந்தேகத்தைக் கேட்டது டூடூ. “எங்கள் இனத்தில் அரிதாக இப்படி டிசைன் இல்லாமல் சிலர் பிறப்பார்கள். அவர்களில் இவனும் ஒருவன்” என்று சிரித்தது கியோ. டூடூ மகிழ்ச்சியாக விடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT