Last Updated : 14 May, 2025 07:23 AM

 

Published : 14 May 2025 07:23 AM
Last Updated : 14 May 2025 07:23 AM

அரக்கனும் மனிதனும் | தேன் மிட்டாய் 49

ஒரே நேரத்தில் வரமாகவும் சாபமாகவும் இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும். உடைந்த பாகங்களைக் கொண்டு ஒரு பொம்மையைப் போல் ஃபிராங்கன்ஸ்டைன் என்னை உருவாக்கிய போது மனித குல வரலாற்றின் மகத்தான கண்டறிதலாக நான் இருந்தேன்.

ஒரு பேனா போல், ஒரு நாற்காலி போல், ஒரு வீடு போல் உதிரி பாகங்களைக் கொண்டு ஒரு புதிய உயிரை உருவாக்க முடியும் என்பதை உலகம் முதல் முறையாகத் தெரிந்துகொண்டது என்னைக் கண்டுதான். எங்கிருந்தோ ஒரு தலை. எங்கிருந்தோ கை, கால்கள். எங்கிருந்தோ முதுகும் தோளும். எல்லாவற்றையும் இணைத்து முடித்தபோது நான் பிறந்தேன்.

பிறந்திருக்கவே கூடாதோ என்று தோன்றும்படி என் காதில் வந்து விழுந்தது அந்த முதல் ஒலி. ஐயோ என்று அலறல். என்னை உங்கள் உலகுக்கு வரவேற்றது இந்த அலறல்தான். அலறியவர் வேறு யாருமில்லை, என்னை உருவாக்கி, உயிர் கொடுத்த ஃபிராங்கன்ஸ்டைன். குழம்பிப்போனேன். நான் அவருடைய அறிவியல் சாதனை அல்லவா? என்னைக் கொண்டாட அல்லவா வேண்டும் அவர்? அவருடைய குழந்தை அல்லவா நான்?

‘இல்லை, இல்லை நீ என் குழந்தை அல்ல. நீ ஒரு குழந்தையே அல்ல’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர். ‘உன்னைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. நீ மனிதனைப் போலவே இல்லை. உன் கண்களில் இருள் நிறைந்திருக்கிறது. நீ கையையும் காலையும் அப்படியும் இப்படியுமாக அசைத்து நடந்து வரும்போது என்னை விழுங்கிவிடுவாயோ என்று பயமாக இருக்கிறது. நீ ஓர் அதிசயமாக இருப்பாய் என்று நினைத்தேன். இல்லை, நீ ஓர் அபாயம். என் வாழ்வின் மிகப் பெரும் பிழை. ஒரு மனிதனை உருவாக்கலாம் என்று நினைத்து ஓர் அரக்கனை உருவாக்கிவிட்டேன். நீ தோன்றியிருக்கவே கூடாது.’

ஏற்கெனவே உடைந்த உடல். இப்போது இதயமும் உடைந்துபோனது. நான் பிறந்த வீட்டைவிட்டு வீதிக்கு வந்தேன். ஒரு சிறுமி, வீலென்று கத்தியபடி ஓடி மறைந்தாள். ஒரு பெண் பேயையோ பிசாசையோ பார்த்ததுபோல் மயக்கமடைந்து விழுந்துவிட்டார். ஓடிச்சென்று தூக்கிவிட முயன்ற என்னைச் சில இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு கையில் கிடைத்ததை வைத்துத் தாக்க ஆரம்பித்தனர்.

முதல் வலி. முதல் காயம். மூர்க்கத்தோடு என்னை நோக்கிப் பாய்ந்து வந்த ஒருவனைப் பார்த்து அஞ்சி, போதும் நிறுத்துங்கள் என்று தள்ளிவிட்டதுதான் தாமதம். ஐயோ மிகவும் ஆபத்தான பிசாசு என்று கத்தியபடி ஓட்டம் பிடித்தார்கள். நான் நடக்க, நடக்க இரு பக்கங்களிலும் படபடவென்று கதவுகளும் ஜன்னல்களும் சாத்திக்கொண்டன. சிலர் என்மீது கல்லையும் கம்பையும் வீசத் தொடங்கினார்கள்.

இருளில் ஒதுங்கிக்கொண்டேன். இருளில் உறங்கினேன். கிடைத்ததை உண்டேன். நான் உங்களைப் போல் ஒரு மனிதன்தான். இது என்னுடைய உலகமும்தான் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் என்று துடித்தேன். எது ஒரு மனிதனை மனிதனாக மாற்றுகிறது? எது அவனுக்கு அறிவொளியை அளிக்கிறது? எது அவன் இதயத்தை மென்மையாக்குகிறது? எது அவனைப் பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது? வாசிப்புதான் இல்லையா? வேண்டாம் என்று மனிதர்கள் வீசியெறிந்த துண்டுக் காகிதங்களிலிருந்து எழுத்துகளைக் கற்றுக்கொண்டேன்.

நோயாளிபோல் ஒரு போர்வையைச் சுற்றிக்கொண்டு நூலகத்தில் சென்று அமர்ந்து ஒவ்வொரு நூலாக, ஒவ்வொரு வரிசையாக, ஒவ்வோர் அலமாரியாக வாசிக்கத் தொடங்கினேன். என் கண்களிலிருந்த இருள் மறைந்தது. இதயம் விரிந்தது. இன்னும் கொண்டா, இன்னும் கொண்டா என்று துடித்தது மூளை. நடையில் ஒரு துள்ளல் தோன்றியது. போர்வையை உதறித் தள்ளிவிட்டு அதே நூலகத்துக்குள் நுழைந்தேன். இனி எல்லாரும் என்னோடு இயல்பாகப் பேசுவார்கள். என்னைக் கண்டு புன்னகை செய்வார்கள். கையைப் பிடித்துக் குலுக்கி, என்னைத் தட்டிக்கொடுப்பார்கள்.

மில்டனையும் ஷேக்ஸ்பியரையும் தத்துவத்தையும் கணிதத்தையும் எப்படி இவ்வளவு விரைவாக நீயே கற்றுக்கொண்டாய், எனக்கும் சொல்லேன் என்று வியப்பார்கள். நம்பிக்கையோடு உள்ளே நுழைந்தேன். ஆவென்று அலறினார் ஒருவர். ஐயோ என்று பதறியோடினார் இன்னொருவர். அந்த அரக்கன் இங்கேயே வந்துவிட்டது, அடித்துக் கொல்லுங்கள் என்று கத்தினார் இன்னொருவர். கும்பல் சேர்ந்துகொண்டது. என்னை வெறியோடு துரத்தவும் ஆரம்பித்தது.

நடுக்கத்தோடு மீண்டும் இருளில் வந்து ஒண்டிக்கொண்டேன். என்னை உருவாக்கிய ஃபிராங்கன்ஸ்டைன் முதல் என்னை யாரென்றே தெரியாத நீங்கள்வரை எல்லாரும் என்னை அரக்கன் என்றே அழைக்கிறீர்கள். எல்லாரும் என்னைக் கண்டு அஞ்சி ஓடுகிறீர்கள். நான் இப்படி இருப்பது என் குற்றமா? உங்கள் உலகை நான் மீண்டும் ஆரம்பத்திலிருந்து படிக்க வேண்டும் போலிருக்கிறது. உங்கள் கண்களுக்கு என் கல்வியோ ஆற்றலோ அல்ல, என் தோற்றம் மட்டுமே தெரியும்.

என் துடிப்பான மூளையையோ ஏங்கித் தவிக்கும் இதயத்தையோ கொண்டு அல்ல, என் உடலைக் கொண்டுதான் நான் யார் என்பதை நீங்கள் அனைவரும் தீர்மானிப்பீர்கள். உள்ளுக்குள் நிகழ்வதே உண்மையான மாற்றம் என்று நினைத்திருந்தேன். இல்லை, வெளித்தோற்றம்தான் முக்கியம். அது வேடமாக இருந்தாலும் சரி, அது போதும் போலிருக்கிறது உங்களுக்கு. ஒரு சிறு குற்றமும் செய்யாத நான் மனிதனல்ல என்கிறீர்கள். என்னைத் தூற்றுபவர்களையும் துரத்துபவர்ளையும் தாக்குபவர்களையும் மனிதர்களாக ஏற்றுக்கொள்கிறீர்கள்.

எனக்குப் பெயர் இல்லை. அப்படி ஒன்று வேண்டவும் வேண்டாம். எனக்கென்று நீங்கள் ஒதுக்கியிருக்கும் அடையாளத்தையும் உங்களிடமே திருப்பி அளித்துவிடுகிறேன். உங்கள் உலகுக்கு ஏன் வந்தேன் என்று வருத்தமாக இருக்கிறது. இவ்வளவு புத்தகங்கள் வைத்திருக்கிறீர்கள். இவ்வளவு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கட்டி வைத்திருக்கிறீர்கள். கவிதை எழுதுகிறீர்கள். அறிவியல் பேசுகிறீர்கள். ஆனால், உங்களைத் தேடி வந்திருக்கும் ஒரு புதிய உயிரை எப்படி நடத்துவது என்று உங்களில் ஒருவருக்கும் தெரியவில்லை.

என்னை அரக்கன் என்று நீங்கள் அழைப்பது எந்த அளவுக்கு உண்மையில்லையோ அந்த அளவுக்கு உங்களை நீங்கள் மனிதன் என்று அழைத்துக்கொள்வதும் உண்மை யில்லை. என்னவாகப் பிறக்கிறோம் என்பது முக்கியமல்ல. எத்தகைய கனவை வளர்த்துக் கொள்கிறோம், என்னவாக மாறத் துடிக்கிறோம் என்பதை வைத்தே ஒருவரை மதிப்பிட வேண்டும். என்னிடம் ஒரு கனவு இருக்கிறது. நான் முழு மனிதனாக மாற விரும்புகிறேன். என்ன செய்யப்போகிறீர்கள் நீங்கள்? எப்போது இருளில் இருந்து வெளியில் வரப்போகிறீர்கள்?

ஃபிராங்கன்ஸ்டைன் - உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர் மேரி ஷெல்லியின் நாவலில் வரும்
ஒரு கதாபாத்திரம்.

(இனிக்கும்)

- marudhan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x