Published : 07 May 2025 07:40 AM
Last Updated : 07 May 2025 07:40 AM
கோள்கள் ஏன் கோள வடிவில் இருக்கின்றன, டிங்கு? - ஜெ. பாலவிக்னேஸ்வரன், 5-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, தங்களாச்சேரி, திருமங்கலம், மதுரை.
நல்ல கேள்வி. ஒரு கோள் ஈர்ப்பு விசையால்தான் கோள வடிவத்தை அடைகிறது. ஈர்ப்பு விசையால் ஒரு கோளின் அனைத்துப் பக்கங்களும் மையத்தை நோக்கி சமமாக இழுக்கப்படுகின்றன. அதாவது, விளிம்புப்பகுதிகள் மையத்தை நோக்கி இழுக்கப்படும்போது, ஒட்டுமொத்த வடிவம் கோளமாக மாற்றப்படுகிறது. இது ஒரு முப்பரிமாண கோள வடிவம். நம் சூரிய மண்டலத்தில் 8 கோள்கள் இருக்கின்றன. இந்த எட்டுக் கோள்களும் ஒரே மாதிரி கோள வடிவில் இல்லை. அளவிலும் தூரத்திலும் இவை வேறுபடுகின்றன.
சில கோள்கள் சிறிதாக இருக்கின்றன. சில கோள்கள் பெரிதாக இருக்கின்றன. சில கோள்கள் பாறைகளால் ஆனவையாக இருக்கின்றன. சில கோள்கள் வாயுக்களால் ஆனவையாக இருக்கின்றன.
பார்ப்பதற்கு அழகான கோள வடிவமாகத் தெரிந்தாலும் அனைத்துக் கோள்களும் ஒரே மாதிரி கோள வடிவில் இல்லை. புதனும் வெள்ளியும் சரியான கோள வடிவில் இருக்கின்றன. சனியும் வியாழனும் நடுவில் சற்றுத் தடிமனாக இருக்கின்றன. பூமியும் செவ்வாய் கோளும் சிறியவை, வாயு கோள்களைப் போல் இவை வேகமாகச் சுழல்வதில்லை.
இவற்றின் நடுப்பகுதி சற்றுத் தடிமனாக இருக்கிறது. ஆனாலும் இவை சனி, வியாழனைவிட நல்ல கோள வடிவில் இருக்கின்றன. யுரேனஸ், நெப்டியூன் கோள்களும் நடுப்பகுதி தடிமனாக உள்ளன என்பதால் முழுமையான கோள வடிவம் என்று அவற்றைச் சொல்ல இயலாது, பாலவிக்னேஸ்வரன்.
சிவப்பு நிறத்தைக் கண்டால் எருதுகளுக்கு ஏன் கோபம் வருகிறது, டிங்கு? - சஞ்சித்ராஜ், 5-ம் வகுப்பு, வி.எம்.ஜே. பள்ளி, மதுரை.
பெரும்பாலான விலங்குகளைப் போலவே மாடு, எருமைகளால் சிவப்பு வண்ணத்தைப் பார்க்க இயலாது. அதனால் சிவப்பு நிறத்தைக் கண்டு மாடுகளும் எருமைகளும் கோபம்கொள்வதில்லை. ஆனால், சிவப்புத் துணியை இப்படியும் அப்படியும் ஆட்டும்போது, தனக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்துக் கோபமடைகின்றன. சிவப்பு அல்லாத துணியை வைத்து இப்படி வேகமாக ஆட்டினாலும் மாடுகளும் எருமைகளும் கோபமடையவே செய்யும். அதனால் சிவப்புக்கும் கோபத்துக்கும் தொடர்பு இல்லை, சஞ்சித்ராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT