Last Updated : 30 Apr, 2025 07:23 AM

 

Published : 30 Apr 2025 07:23 AM
Last Updated : 30 Apr 2025 07:23 AM

ரஷோமானை நம்புங்கள்! | தேன் மிட்டாய் 47

“என்ன குரோசாவா, மெய்யாகவே இதுதான் கதையா? இதையா படமாக எடுக்கப் போகிறாய்? இதற்காகவா மாய்ந்து, மாய்ந்து இவ்வளவு காலமாக உழைத்துக் கொண்டிருந்தாய்?” என்றார் முதல் நபர். “ஒரு கதை என்றால் முடிவடைய வேண்டும். இதில் எங்கே இருக்கிறது முடிவு? ஒரே குழப்பமாக இருக்கிறது.

நீ என்னதான் சொல்ல வருகிறாய்?” என்றார் இரண்டாவது நபர். “ஏதாவது வித்தியாசமாகப் பண்ண வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்து வைத்திருக்கிறாயா? இதை எல்லாம் யார் வந்து பார்ப்பார்கள்?” என்றார் மூன்றாவது மனிதர். “உனக்குப் படம் எடுக்க வரவில்லை. நீ ஏன் வேறு ஏதாவது செய்யக் கூடாது?” என்றார் நான்காவது நபர்.

எல்லா நாடுகளிலும், எல்லா ஊர்களிலும், எல்லாக் கிராமங்களிலும், எல்லா வீதிகளிலும் இந்த நான்கு பேரை நீங்கள் காணலாம். காட்டுக்கே ஓடிப்போனாலும் அங்கும் இவர்கள் தோன்றிவிடுவார்கள். ஒரு துரும்பைக்கூட இவர்கள் இல்லாமல் நீங்கள் நகர்த்த முடியாது.

அந்தப் பாவப்பட்ட துரும்பைத் தொந்தரவு செய்வதால் உனக்கோ எனக்கோ ஏதாவது பலன் இருக்கிறதா என்பது தொடங்கி ஆகா, துரும்பை நகர்த்துவதன் மூலம் மாபெரும் மாற்றத்தை நீ உலகுக்கு ஏற்படுத்திவிட்டாய் என்பதுவரை நான்கு வாய்களும் நான்கு விதமாகப் பேசுவதை நீங்கள் கேட்கலாம்.

நான் ஒவியராகப் போகிறேன் என்று கொஞ்சம் சத்தமாகச் சொல்லிப் பாருங்கள். சொல்லி வாய் மூடுவதற்குள் உங்களை உண்டு, இல்லை என்று பண்ணுவதற்கு இந்த நான்கு பேரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். இதெல்லாம் ஓவியமா? இதை ஏன் இப்படி வரைந்திருக்கிறாய்? இது யாருக்குப் புரியும்? இதை எல்லாம் யார் வாங்குவார்கள்? தூரிகையைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடலாம் என்று உங்களுக்குத் தோன்றும்வரை நகர மாட்டார்கள்.

இப்படித்தான் ஒரு நாள் நான் படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்னேன். நல்ல பாம்பே தோற்றுவிடும் அளவுக்கு ஆளுக்கு ஒரு பக்கம் நின்றுகொண்டு, படம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டார்கள் நால்வரும். என்ன செய்தேன் தெரியுமா? நின்று நிதானமாக இவர்களுடைய நடனத்தைச் சில நிமிடங்கள் ரசித்தேன். பிறகு வேகமாக நகர்ந்து சென்றுவிட்டேன். இவர்கள் சொல்வதை எல்லாம் ஒன்றுவிடாமல் கேட்டு என் படத்தைத் திருத்தியிருந்தால் எனது ரஷோமான் உருவாகி இருக்காது.

ஒரு படைப்பு குழப்பம் இல்லாமல், எளிமையாக இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு என்கிறார் ஒருவர். உங்கள் எதிர்பார்ப்பு உங்களுக்குச் சரியானதாக இருக்கலாம். எனக்கென்று ஒரு மூளை இருக்கிறது. அது சுயமாகச் சிந்திக்கிறது. துடிப்போடு கற்பனை செய்கிறது. நான் உருவாக்கும் படைப்பில் நான் விரும்பியதைக் கொண்டு வரவேண்டுமா அல்லது நீங்கள் எதிர்பார்ப்பதையா? எனது ரஷோமான் புதிய உலகைக் காண்பிக்க விரும்புகிறது.

புதிய மொழியில் அது பேசுகிறது. புதிய சாத்தியங்களை அது உருவாக்கி அளிக்கிறது. எளிமையான, நேரடியான பல படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ரசித்திருப்பீர்கள். நீங்கள் ஏற்கெனவே பார்த்து மகிழ்ந்த படங்கள் போலவே என் ரஷோமானும் இருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? இருக்கிறது என்றால், அதை உடைப்பதே என் படத்தின் நோக்கம்.

என் ரஷோமானும் நால்வரைப் பற்றிய படம்தான். ஒரே நிகழ்வை நான்கு பேர், நான்கு விதமாக உங்களிடம் விவரிப்பார்கள். அவர்களில் யார் சொல்வது நிஜம்? யார் சொல்வது பொய்? ஏன் பொய், உண்மை போல் இருக்கிறது? ஏன் உண்மை, சில நேரம் பொய் போல் காட்சி அளிக்கிறது? ஒரே உண்மைதான் இருக்க முடியுமா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட உண்மைகள் உண்டா? அப்படி இருப்பது சாத்தியமா? இந்த விவாதங்களை உங்களிடமே விட்டுவிடுகிறது எனது ரஷோமான். படம் பார்த்தோமா, வெளியேறினோமா என்று வெறும் பார்வையாளராக நீங்கள் இனியும் இருக்க முடியாது. ரஷோமான் உங்கள் கையைப் பிடித்துத் தன் உலகுக்குள் இழுத்துக்கொள்கிறது.

உங்களையும் ஒரு கதாபாத்திரமாக அது மாற்றுகிறது. நான் உருவாக்கிய நால்வரையும் நீங்கள் நெருங்கிச் சென்று பார்க்கிறீர்கள். அவர்கள் சொல்வதையும் செய்வதையும் கவனமாக ஆராய்கிறீர்கள். குறுக்கு விசாரணை செய்கிறீர்கள். விவாதிக் கிறீர்கள்.

பிறகு ஒரு முடிவுக்கு வருகிறீர்கள். இல்லை, அப்படி இருக்காது என்று எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு மீண்டும் ஒருமுறை புதிதாக ரஷோமானைப் பார்க்கிறீர்கள். அப்போது வேறொரு வெளிச்சம் கிடைக்கிறது. அந்த வெளிச்சத்தைக் கொண்டு மேலும் சில கேள்விகளை எழுப்புகிறீர்கள்.

எல்லாவற்றையும் கேள்வி கேளுங்கள். எல்லா வற்றையும் ஆராயுங்கள். எதையும் அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு விடாதீர்கள் என்கிறது ரஷோமான். நான்கு பேர் நான்கு கருத்துகளை உதிர்ப்பார்கள். நான்கு தீர்ப்புகளை வழங்குவார்கள். நான்கு விதமாக நடந்துகொள்வார்கள். நான்கு வழிகளைக் காட்டுவார்கள். எது உங்கள் பாதை என்பதை முடிவு செய்பவராக நீங்கள், நீங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்கிறது ரஷோமான்.

அகிரா குரோசாவா - உலகப் புகழ்பெற்ற ஜப்பானியத் திரைப்பட இயக்குநர். அற்புதமான பல திரைப்படங்களை இயக்கியவர். 1990ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவர்.

(இனிக்கும்)

- marudhan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x