Published : 23 Apr 2025 06:37 AM
Last Updated : 23 Apr 2025 06:37 AM
கப்பல் போய்க்கொண்டிருந்தது. அதற்குத் தலைமை வகித்துச் செலுத்தியவர் ஜேஸன். கிரேக்க மாவீரர். தொலைவில் தெரிந்த ஒரு தீவில் ஓர் அரண்மனை காணப்பட்டது. அந்த அரண்மனையிலிருந்து அழுகுரலைக் கேட்கவே, அந்த மாளிகையை நோக்கிக் கப்பலைச் செலுத்தினார்கள். “இப்படி விந்தையான ஒரு மாளிகையை நான் கண்டதில்லை. இதில் வசிப்பவர் யாராக இருக்கும் திபஸ்?” என்று ஜேஸன் கேட்டார்.
“இதைக் காணும் ஆவல் பெருகுகிறது” என்றார் திபஸ். “சாகசத்தையும் செல்வத்தையும் தேடியே நாம் கிளம்பி இருக்கிறோம். ஆகவே, அந்த மாளிகையைப் பற்றித் தெரிந்துகொள்வோம்” என்றார் ஜேஸன். இதற்குள் கப்பல், தீவின் கரையில் ஒதுங்கியது. “வீரர்களுடன் நீ கப்பலிலேயே இரு திபஸ்.
நானும் ஜாக்ஸும் கோட்டையில் வசிப்பவர் யார் என்று அறிந்து வருகிறோம்” என்று கிளம்பினார் ஜேஸன். அந்த மாளிகையின் நெடுதுயர்ந்த நுழைவாயில் முன் வந்தார்கள், ஜேஸனும் ஜாக்ஸும். கதவு தாழிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், அதைத் திறக்க முடியவில்லை. “இந்த மாளிகையின் எஜமானருக்கு, அந்நியர்களின் அச்சம் இருக்காது போல!” மாவீரர்கள் இருவரின் முயற்சியால் அந்தப் பெரிய கதவு திறக்கப்பட்டது.
“எவ்வளவு பெரிய மாளிகை! இது ராட்சசனின் வசிப்பிடம் போலிருக்கிறது!” “உண்மைதான்.” “அந்த அழுகை எங்கிருந்து வருகிறது?” “அதோ, அந்த அறையிலிருந்து ஜேஸன்...” “நாம் வந்த வழியைக் காவல் காத்தபடி நீ இங்கேயே இரு. அரக்கன் வந்தால், சொல்” என்றார் ஜேஸன். “ஆகட்டும்... ஒருவேளை அரக்கன் மேலே இருந்தால் குரல் கொடுங்கள். ஒருவரால் சமாளிக்க முடியாது” என்றார் ஜாக்ஸ்.
மேலே சென்று சாளரத்தின் வழியே உள்ளே பார்த்தார் ஜேஸன். ஓர் அம்மா. அவர் மடியில் ஒரு குழந்தை. இருவரையும் காப்பாற்ற வேண்டும் என்று ஜேஸன் நினைத்தபோது, “ஜேஸன், காப்பாற்றுங்கள்” என்கிற ஜாக்ஸின் குரல் எதிரொலித்தது. ஜேஸன் வேகமாக ஓடிவந்தார். ஆனால், அதற்குள் காரியம் முடிந்துவிட்டது. நூறு கண்களை உடைய அரக்கன் ஆர்கஸின் கதாயுதம், ஜாக்ஸைத் தாக்கிவிட்டது.
“ஆர்கஸ், நீ என் தோழனைக் கொன்று விட்டாய்...” “உன் போன்ற மாவீரனைக் கொல்ல விருப்பமில்லை. இங்கிருந்து வெளியேறு!” “என் நண்பன் மரணத்துக்குப் பழிவாங்க மறுபடி வருவேன்.” “ஒரே நேரத்தில் என்னால் எல்லாத் திசைகளிலும் பார்க்க முடியும். உன் வீரர்களோடு நீ என்னைத் தாக்க வரலாம். ஆனால், ஒரு நேரத்தில் என் இரு கண்கள் மட்டுமே ஓய்வு கொண்டிருக்கும். மற்ற 98 கண்களும் விழிப்புடன் எந்தச் சூழ்ச்சியையும் பார்த்துக் கொண்டிருக்கும்” என்று இடி முழக்கமாகச் சிரித்தான் நூறு கண் ஆர்கஸ்.
அரக்கனைப் பழிவாங்க திபஸுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் ஜேஸன். “நீ சொல்வதிலிருந்து, அவன் வெல்ல முடியாதவன் என்று தெரிகிறது. நம் உயிர்களைப் பணயம் வைப்பது நல்லதுதானா?” என்றார் திபஸ். “அந்தப் பெண்ணும் குழந்தையும் பாவம். அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அரக்கன் ஆர்கஸுக்குத் தகவல் அனுப்புவேன். தனி ஒருவனாக அவனை எதிர்க்கத் தயார் என்று. அதற்கு முன் சில காரியங்களை நாம் செய்தாக வேண்டும்” என்ற ஜேஸன், தன் திட்டத்தைக் கூறினார். ஆர்கஸைச் சண்டையிட வரும்படி அழைப்பு அனுப்பப்பட்டது.
“நாளை பகல் அந்தச் சிறிய பள்ளத்தாக்கில் ஜேஸனை நீ சந்திக்கிறாய். எங்கள் வீரர்கள் அங்கிருப்பார்கள். ஆனால், ஜேஸனுடன் மட்டுமே நீ மோதப் போகிறாய். சம்மதம்தானே?” என்று கேட்டார் கிரேக்கத் தூதர். “சரி. உங்கள் தந்திரம் ஜேஸனைக் காப்பாற்றப் போவதில்லை. நாளை சந்திப்போம்” என்று அனுப்பி வைத்தான் அரக்கன். மறுநாள் ஆர்கஸ் வந்துவிட்டான்.
“மானிடப்பதரே, எங்கே இருக்கிறாய் நீ?” என்று முழங்கினான் நூறு கண் ராட்சசன். “நானும் என் வீரர்களும் இதோ இங்குதான் இருக்கிறோம், ஆர்கஸ்” என்று குரல் கொடுத்தார் ஜேஸன். “இந்தப் போர் நேர்மையாக இருக்க வேண்டும். என்னைவிட உன்னிடம் 98 கண்கள் அதிகம் உள்ளன. அது முறையாகாது” என்றார் ஜேஸன். “நான் என் கண்களை மூடிக்கொள்ள மாட்டேன்!” என்றான் ஆர்கஸ்.
“நான் மூட வைக்கிறேன்” என்ற ஜேஸன், பள்ளத் தாக்கின் இரு பக்கங்களிலும் உயர்ந்து நிற்கும் மலைகள் மீது நிற்கும் தம் வீரர்களை நோக்கி, “உங்கள் கேடயங்களை நிமிர்த்துங்கள்” என்று கட்டளை இட்டார். வீரர்கள் கேடயங்களில் சூரிய ஒளிபட்டுப் பிரதிபலிக்கும்படி தூக்கிப் பிடித்தார்கள். பளபளக்கும் சூரிய ஒளியைக் காண முடியாமல் அலறினான் ஆர்கஸ்.
“என் கண்கள் குருடாகிவிட்டன. என்னால் எதையும் காண முடியவில்லை” என்று கதறினான், அந்த நூறு கண் அரக்கன். “அந்த இரு கண்களைத் திறந்துகொண்டு, என்னோடு போரிடு” என்று வாளை வீசிச் சிரித்தார் ஜேஸன். ஆனால், ராட்சசனால் இரண்டு கண்களால் கதாயுதத்தைச் சுழற்ற முடியவில்லை.
விரைவில் ஜேஸனின் வாள் அரக்கனை வீழ்த்தியது. அப்போது, “தோழா, நாம் தவறிழைத்து விட்டோம். அந்தப் பெண் சொல்வதைக் கேள்’ என்றார் திபஸ். “பாவிகளா, என் கணவரைக் கொன்றுவிட்டீர்களே. நீங்கள் என்னைச் சிறைப்பிடித்துப் போகாதிருக்கவே அவர் என்னை அறையில் பூட்டிவிட்டுப் போயிருந்தார்” என்றார் அந்தப் பெண். “உன் கணவனா?” என்று அதிர்ந்தார் ஜேஸன். “ஆம்!” ஐயோ என்று அலறினார் ஜேஸன். - வாண்டுமாமா
நன்றி: கிங் விஸ்வா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT