Published : 25 Jul 2014 01:06 PM
Last Updated : 25 Jul 2014 01:06 PM

யாதும் ஊரே - தமிழ் ஊடகங்களில் ஒரு புதிய முயற்சி

பயணக் கட்டுரைகள் எப்போதுமே படிப்பவரை உற்சாகப்படுத்தும். எழுத்தாளரோடு, வாசகரும் பயணிப்பதைப் போன்ற உணர்வைத் தரும். அத்தகைய பயணக் கட்டுரைகளுக்கு என்றுமே ஆதரவு குறைந்ததில்லை.

அதே போல, ட்ராவல் டாக்குமென்டரி என்று சொல்லப்படும் பயணம் சார்ந்த ஆவணப் படங்களும் சுவாரசியம் குறையாமல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். ஆங்கிலத்தில் பல டிராவல் டாக்குமென்டரிகள் எடுக்கப்படுகின்றன. ஏன், இதற்கென தனி சேனலும்கூட இருக்கிறது. ஆனால் தமிழில் அத்தகைய முயற்சி மிக மிக அரிது.

தமிழில் இப்படியான பயண ஆவணத் தொடர் ஒன்று லண்டனில் தயாராகிக் கொண்டிருக்கிறது. ‘யாதும் ஊரே’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் பயண ஆவணத் தொடரின் முதல் அத்தியாயம் தற்சமயம் யூட்யூப் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

லண்டனைச் சேர்ந்த கவிஞரும் ஊடகவியலாளருமான தவ சஜிதரன் இதை எழுதி இயக்கியிருக்கிறார். ‘இந்தியா, இலங்கை தவிர்த்த நிலப்பரப்புகளைக் கவனப்படுத்தித் தமிழில் ஆவணப் படங்கள் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை’ என்று கூறும் சஜிதரன், தமிழில் இத்தகைய தகவல் ஆவணப் படங்களுக்கான தேவை அதிகம் என்கிறார்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் முதலான சர்வதேச ஊடகங்களில் இதழியலாளராகப் பங்களித்துள்ள இவர், தற்சமயம் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்று வருகிறார். கவிதை, மொழிபெயர்ப்பு முதலான துறைகளிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார்.

‘யாதும் ஊரே’ ஆவணத் தொடரின் முதல் பகுதி, லண்டனில் இருக்கும் பிரிட்டிஷ் மியூஸியம் பற்றி அமைந்துள்ளது. பிரித்தானியப் பேரரசின் காலனி ஆட்சிக் காலத்தின் போது இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்ட ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள், அவற்றைப் பற்றிய தகவல்கள் சஜிதரனின் ஆவணப் படத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நல்ல தமிழில், தெளிவான உச்சரிப்போடு, சுவாரசியமான தகவல்கள், சிறப்பான ஒளிப்பதிவில் காட்சிகளாக விரிகின்றன.

இதோடு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம், இதன் ஆங்கில உபதலைப்புகள். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கியின் சிறப்பான ஆங்கில மொழிபெயர்ப்பு, தமிழ் அறியாதவர்களும்கூட இதில் கூறப்பட்டுள்ள தகவல்களை அறிந்து கொள்வதற்குத் துணைபுரிகிறது.

இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த ஆவணத் தொடரில் பணியாற்றியுள்ளனர்.

ஆவணப் படத்தின் இரண்டாம் பகுதியில் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், இலங்கை, திபெத், ஜாவா முதலான இடங்களிலும் இந்திய மதங்களும் பண்பாடுகளும் எப்படிப் பரவின உள்ளிட்ட தகவல்கள் சொல்லப்பட உள்ளன.

‘யாதும் ஊரே’ - பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு பயணத் தொடர்.

லிங்க்: > http://youtu.be/lx3FhRqr0Es

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x