Last Updated : 09 Dec, 2016 10:46 AM

 

Published : 09 Dec 2016 10:46 AM
Last Updated : 09 Dec 2016 10:46 AM

ஊழல் ஒழிய... சாமானியனின் புரட்சி!

ஊழலுக்கு எதிரான தேசங்களின் உடன்படிக்கையின்படி, 2003-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி ஊழலுக்கு எதிரான தினம் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக அளவில் ஊழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ‘ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்’ அமைப்பின்படி ஊழலில் இந்தியாவுக்கு 76-வது இடம்.

2ஜி அலைக்கற்றை ஊழல் முதல் வியாபம் ஊழல் வரை நம் நாட்டில் ஊழலுக்குப் பஞ்சமே இல்லை. ‘ஊழலற்ற இந்தியா’ என்பது ஒவ்வொரு இளைஞரின் கனவு. அந்தக் கனவு குறித்து கல்லூரி இளைஞர்கள் சிலரிடம் கேட்டோம்...

நல்லிசை, சென்னை

பெரிய அளவில் நடக்கின்ற ஊழலில் பொது மக்களாகிய நாம் கண்ணுக்குத் தெரியாமல் வஞ்சிக்கப்படுகிறோம். ரசாயன உரம் உள்ளே வரக் காரணமாய் இருந்த ஊழல், கல்வியின் பெயரால் நடக்கும் ஊழல் போன்றவை நம்மையும் நமக்கடுத்து வரும் தலைமுறையையும் நாசப்படுத்திக்கொண்டிருக்கிறது. ‘ஊழலுக்கு எதிராக ஒருங்கிணைவோம்’ என்பதுதான் இந்த ஆண்டுக்கான ‘ஆன்டி கரப்ஷன் டே தீம்’. அதனால‌ சாமானிய மக்கள் வெகுண்டெழுந்தால்தான் இப்படியான‌ ஊழலை ஒழிக்க முடியும்.

அ.ஜெரார்டு, திருப்பத்தூர்

இந்தியர்களின் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சுவிஸ் வங்கியிலிருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் கறுப்புப் பணப் பதுக்கல்காரர்களின் பெயர்களை இன்னும் வெளியிடாதது ஏன்? இந்த இரண்டு கேள்விகளும் பதில் கிடைத்தால் ஊழலை ஒழித்துவிடலாம் என்று தோன்றுகிறது.

பத்மப்பிரியா, சென்னை

என்னைப் பொறுத்தவரை ஊழலை ஒழிக்கப் பெரும் புரட்சி உருவாக வேண்டும் என்று தோன்றுகிறது. கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியல் அரசிடம் இருந்தும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது தெரியவில்லை. இந்நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கை விபரீதமான பின்விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உண்டாக்குகிறது.

மணிகண்டன், சென்னை

லஞ்சம், ஊழல் என்றதும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் காவல்துறை ஊழியர்களும்தான் நமக்கு ஞாபகத்திற்கு வருவார்கள். ஆனால் லஞ்சம் சிறுவயதிலிருந்தே நம்மிடையே பழக்கப்பட்டுவிடுகிறது. அம்மா கடைக்குப் போகச் சொல்லும்போது போக மாட்டேன் என்று அடம்பிடிப்போம். ‘போயிட்டுவாடா மீதி காசுக்கு சாக்கலேட் வாங்கிக்கோ’ என்று சொன்னதும் உடனே கிளம்புவோம். கடமையைச் செய்ய லஞ்சம் வாங்கக் கூடாது என்பதை சிறுவர்களாக இருக்கும்போதே ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாகப் பதிய வைக்க‌ வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x