Published : 13 Nov 2015 01:22 PM
Last Updated : 13 Nov 2015 01:22 PM

யூத் லைப்ரரி: நாம் ஏன் கேள்வி கேட்க வேண்டும்?

இனம், மொழி, நிறம், மதம், கலாச்சாரம் என எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இன்று வரை இந்தியா உயிர்ப்புடன் இருந்து வந்திருக்கிறது எனில், அதற்கு முக்கியக் காரணம் சகிப்புத்தன்மை!

ஆனால் இன்று அதுதான் கேள்விக் குள்ளாக்கப்பட்டிருக்கிறது. மதங்களின் பெயரால் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவுகள் நம்மை இன்னொரு பிரிவினைக்குத் தள்ளுகிறதோ என்ற அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையை உண்டாக்கியவர்க‌ள் இதுகுறித்து யோசிக்க வேண்டும் என்பதற்காக‌ எழுத்தாளர்களும், திரைப் படைப்பாளிகளும் அரசு தங்களுக்கு வழங்கிய விருதுகளைத் திருப்பித் தந்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் எழுத்தாளர்கள், திரைப் படைப்பாளிகள் ஆகியோரின் வரிசையில் விஞ்ஞானிகளும் இணைந்திருக்கிறார்கள். அவர்களில் பி.எம்.பார்கவா கூறும் கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

ஹைதராபாத்தில் உள்ள ‘உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மைய'த்தை நிறுவி அதன் இயக்குநராகவும் பதவி வகித்தவர் விஞ்ஞானி பார்கவா. மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர்.

நாட்டில் சமீபமாக நிலவிவரும் சகிப்பின்மையை எதிர்த்துத் தனக்கு வழங்கப்பட்ட நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதைத் திருப்பித் தருவதாக அறிவித்தார்.

அதுகுறித்து, ஊடகங்களில் அவர் அளித்த பேட்டியில், "இந்த ஆண்டு நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் புராண காலத்திலேயே விமானங்கள் இருந்ததாகவும், அப்போதே ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை எல்லாம் இருந்தது என்றும் பிரதமர் உண்மைக்குப் புறம்பாகக் கூறியிருந்தார். இது மிகவும் தவறானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51(h) படி, ‘மக்களிடையே அறிவியல் மனநிலையை ஏற்படுத்துவது ஒவ்வொரு விஞ்ஞானியின் கடமை' ஆகும். நான் அதைத்தான் செய்கிறேன்" என்றார்.

அரசின் இந்தப் போக்கை ஒரு விஞ்ஞானி சாடியிருப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு 1966-ம் ஆண்டே, இயற்பியலுக்காக நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.ராமன், அறிவியலை அரசு பயன் படுத்தும் விதத்தைக் கண்டு மனம் வருந்தி தன் கருத்தை வெளியிட்டுள்ளார். அதுவும் சென்னை ஐ.ஐ.டி.யின் பட்டமளிப்பு விழாவில். அந்தக் கருத்து இப்படிப் போகிறது:

"கடந்த அறுபது வருடங்களில் அறிவியல் மிகவும் கெடுதலான ஒரு பாதையில் வளர்ந்து வந்திருக்கிறது. அது, போர்களுக்காக அறிவியலைப் பயன்படுத்துவதுதான். அறிவியல் ராணுவ நடவடிக்கைகளுக்காகவே பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ‘அறிவியல் விபச்சாரம்'. இது மிகவும் வருத்தத்துக்குரியது. வேறு பல நாடுகளிலும், இந்த நிலை உள்ளது என்றாலும், அங்கு விஞ்ஞானிகள் அதனை எதிர்த்து புரட்சி செய்கிறார்கள். இங்கு யாருமே குற்றமற்றவர்கள் இல்லை. எனவே, எதிர்கால விஞ்ஞானிகளாகிய நீங்கள் எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும்".

இரண்டு உலகப் போர்களுக்கிடையே அறிவியலுக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே அடிப்படையாக ஏற்பட்ட ஒரு அசவுகரியம் குறித்து சி.வி.ராமன் இப்படி ஒரு கருத்தை வைத்ததாக டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் துருவ் ரெய்னா தனது கட்டுரையில் எழுதுகிறார்.

இந்தக் கட்டுரை ‘தி பப்ளிக் இன்டலெக்சுவல் இன் இந்தியா' என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

‘நாம் ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?' என்ற கேள்வியின் அடிப்படையில், வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், தத்துவவியலாளர் சுந்தர் சருக்காய், துருவ் ரெய்னா, ‘சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ்' பேராசியர் பீட்டர் ரொனால்ட் டிசெளஸா, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழப் பேராசிரியர் நீலாத்ரி பட்டாச்சார்யா மற்றும் பத்திரிகையாளர் ஜாவேத் நக்வி ஆகியோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே மேற்கண்ட புத்தகம் ஆகும். இதனை ஆலெப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘இன்டலெக்சுவல்' என்ற ஆங்கில வார்த்தைக்கு எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் ‘அறிவியக்கம்' என்று விளக்கம் தருகிறார். அதன் படி, மேற்கண்ட அனைவரையும் நாம் ‘அறிவியக்க ஆளுமைகள்' என்று கூறலாம்.

‘அரசின் பத்ம விருதை நான் பெற்றுக்கொண்டால், அரசை எதிர்க்கும் சுதந்திரம் எனக்குப் பறிபோகும்' என்று விருதை நிராகரித்ததோடு அல்லாமல், கருத்துரிமைக்காகத் தொடர்ந்து தன் எழுத்துகள் மூலமாக வலியுறுத்தியவர் பத்திரிகையாளர் நிகில் சக்ரவர்த்தி.

அவரின் நினைவு நாள் விழா ஒன்றில் கலந்துகொண்டு ‘டு கொஸ்டீன் ஆர் நாட் டு கொஸ்டீன், தட் இஸ் த கொஸ்டீன்' (கேள்வி கேட்க வேண்டுமா அல்லது கூடாதா, அதுதான் கேள்வி) என்ற தலைப்பில் நீண்ட உரை ஒன்றை ரொமிலா தாப்பர் நிகழ்த்தினார். அந்த உரையை சற்று விரிவுபடுத்திக் கட்டுரையாக மாற்றி, அந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக மேற்கண்ட அறிவியக்க ஆளுமைகளின் கட்டுரைகளும் இணைந்து இந்தப் புத்தகம் உருவாகியுள்ளது.

சகிப்பின்மை அதிகரித்துவரும் இந்நாட்களில் அறிவியக்க ஆளுமைகளின் பணி என்ன, கேள்வி எழுப்புதலின் அவசியம் என்ன என்பது போன்ற விஷயங்களை உள்ளடக்கியதாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. ‘வேற்றுமையில் ஒற்றுமை' எனும் கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x