Published : 25 Sep 2015 02:28 PM
Last Updated : 25 Sep 2015 02:28 PM

இயற்கைக்காக இரண்டு இளைஞர்கள்!

ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன. உலக நாடுகளுக்கிடையே பகைமை அதிகரித்து வரும் இன்றைய நாட்களில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணு ஆயுதத் தாக்குதல் நடைபெறலாம் என்ற பதற்றம் இருக்கிறது. இந்தச் சூழலில், அணு மின் நிலையங்கள் ஏன் கூடாது என்பதைப் பற்றியும், அணு ஆயுதங்கள் ஏன் கூடாது என்பதைப் பற்றியும் இரண்டு நாடகங்கள் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றன.

இந்த இரண்டு நாடகங்களையும் இயக்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். ஒருவர் சுஷாந்தா தாஸ், மற்றொருவர் பிரபாஸ் சந்திரா.

ஒரு மீனின் கதை!

‘நிமிர்’ வெளியீடு ஒருங்கிணைப்பில் ‘ஒரு மீனின் கதை’ எனும் நாடகத்தை வங்க மொழி நாடகக் கலைஞர் சுஷாந்தா தாஸ் அரங்கேற்றினார். ‘மைம்’ வகை நாடகமான இந்தப் படைப்பைத் தானே நடித்து இயக்கியுள்ளார் சுஷாந்தா தாஸ்.

கடற்கரைக் கிராமம் ஒன்றில் அணு மின் நிலையம் ஒன்று நிறுவப்படுகிறது. அதன் காரணமாக, அந்தக் கடலில் இருக்கும் மீன் ஒன்று எப்படியெல்லாம் துன்பத்துக்கு ஆட்படுகிறது என்பதையும், அதனால் மீனவர்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இந்த நாடகத்தின் மூலம் விளக்குகிறார் சுஷாந்தா.

நாடகத் திறமைக்காக இவர் 2013-ம் ஆண்டுக்கான இங்கிலாந்தின் சார்லஸ் வாலஸ் நல்கை பெற்றவர். இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட முறை இந்த நாடகத்தை நாடு முழுவதும் அரங்கேற்றியுள்ளார்.

“ஆனால் இந்த நாடகத்தை முதன்முதலில் தமிழ்நாட்டில் அதுவும் இடிந்தகரையில் தான் நிகழ்த்தினேன். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடிய சேவியர் அம்மாவின் மரணம்தான் இந்த நாடகத்தை உருவாக்க என்னை உந்தியது” என்று கூறும் சுஷாந்தா தாஸ் தான் நாடகக் கலைக்கு வந்தது பற்றிப் பகிர்ந்தார்.

“சின்ன வயதிலிருந்தே நாடகம் மீது எனக்கு ஈடுபாடு இருந்தது. முறைப்படி நாடகக் கலையைக் கற்று கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். ஆரம்பத்தில் கலைக்காக நடித்து வந்தேன். 2008-ம் ஆண்டு வரை நானும் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். அதன் பிறகு இந்தக் கலை, நமது சமூகத்துக்காகப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வேலையை உதறிவிட்டு, முழுநேர நாடகக் கலைஞனானேன்” என்கிறார்.

காளான் மேகம்!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் அன்றைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. அப்போது இரண்டு நாடுகளும் அணு ஆயுதச் சண்டையில் ஈடுபடலாம் என்ற அச்சம் உலகம் முழுக்கப் பரவியிருந்தது.

அந்தக் காலகட்டத்தை ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ்’ எனும் திரைப்படம் அங்கத தொனியுடன் உலகுக்குக் காட்டியது. அந்தத் திரைக்கதையை நாடகச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து, ‘மஷ்ரூம் க்ளவுட்’ என்ற பெயரில் நாடகமாக உருவாக்கியுள்ளனர். இந்த நாடகத்தை இயக்கியிருப்பவர் பிரபாஸ் சந்திரா. டெல்லி பல்கலைக்கழக மாணவரான இவர் அணு விஞ்ஞானியும் ஆவார்.

இந்த நாடகம் முழுக்க முழுக்க மாணவர்களால் நடத்தப்படுகிறது. டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களைச் சேர்ந்த 15 மாணவர்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாகவும், பின்னணித் தயாரிப்பிலும் பங்களித்துள்ளனர்.பிரபாஸ் சந்திரா கடந்த ஆண்டு ‘பாபா அணு ஆய்வு மையத்தில்’ சில மாதங்கள் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கிருந்த இவருடைய ஆசிரியர்கள், மூத்த பணியாளர்கள் எனப் பலர் பல்வேறு விதமான நோய் பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தனர். கதிரியக்கப் பொருட்கள்தான் இந்த நோய்களுக்கு முக்கியக் காரணம் என்பது தெரிந்தபோதும் யாரும் அது குறித்துப் பேச முன் வரவில்லை.

இப்படிப் பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அணு மின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவைதானா என்று இவருக் குள் கேள்வி எழுந் திருக்கிறது. அதற்கு விடை தேடியதன் விளை வால் இந்த நாடகம் உருவாகி யுள்ளது.

“இந்த ஆங்கில நாடகத்தை இடிந்தகரையிலும் நாங்கள் அரங்கேற்றினோம். மக்களுக்கு மொழி புரியவில்லை என்றாலும், அந்த நாடகம் உணர்த்தும் செய்தியைப் புரிந்து கொண்டார்கள். ஏனென்றால், அவர்கள்தானே அதிக பாதிப்புகளுக்கு உள்ளான வர்கள்!” என்று சொன்னார் பிரபாஸ் சந்திரா. அவரிடம் நாடகத்தில் ‘இந்தியா மற்றும் இந்துஸ்தானம்’ என இரண்டு வகை இந்தியாவைக் காட்டியிருந்தது எதனால் என்று கேட்டபோது, “இந்தியா என்பது மேட்டுக்குடி யினருக் கானது. இந்துஸ்தானம் என்பது ஒடுக்கப்பட்ட வர்களுக்கானது!” என்கிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x