Published : 26 Jun 2015 01:12 PM
Last Updated : 26 Jun 2015 01:12 PM

என் வீக்எண்ட் : சுடோகு பாதி, உணவு மீதி

என் பெயர் கிரிதரன். கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினீயரிங் படித்துவருகிறேன். கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் வாரங்கள், வீட்டுக்குச் செல்லும் வாரங்கள் என இரண்டு விதமாக வீக் எண்டைக் கழிக்கிறேன்.

கல்லூரியில் இருந்தால் வீக் எண்ட் நாட்களில் செய்தித்தாள்களில் வெளிவரும் புதிர்களை விடுவிப்பதே எனது பொழுதுபோக்காக இருக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், நான் ஒரு ‘சுடோகு’ பித்தன். புதிர்களைத் தவிர பத்திரிகைகளை அங்கொன்றும், இங்கொன்றுமாக மேய்ந்தால் காலைப் பொழுது போய்விடும்.

சனிக்கிழமைகளில் மதியம் சிறிது நேரம் உறங்குவேன். பிறகு எழுந்து வலைப்பூவுக்கான மேட்டர்களை டைப் செய்வேன். மாலையில் கல்லூரி மாணவர்களுக்கே உரிய பொழுதுபோக்கான சினிமாதான் கைகொடுக்கும். மடிக்கணினியின் முன்னே நண்பர்கள் கூட்டமாக உட்கார்ந்துகொண்டு படத்தைக் கலாய்த்தபடி படம் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன் வெட்டி அரட்டை. என்னதான் முகநூல், வாட்ஸ் ஆப் என்றிருந்தாலும் ஃபிரண்ட்ஸ்ட்ட பேசுறது தனி சுகம். கல்லூரிச் சாப்பாட்டைத் தவிர்த்துவிட்டு இரவில் எங்கேயாவது வெளியில் கிடைக்கும் நல்ல உணவைத் தேடிப்பிடித்துச் சாப்பிடுவோம். ஒரு வரியில் எழுதிவிட்டாலும் உணவுக்கான பயணம் உணவைவிட சுவாரஸ்யமானது.

வீட்டுக்குச் செல்லும் வாரங்களில் வியாழக்கிழமை இரவே துணிமணிகளை எடுத்து வைத்துக்கொள்வேன். வெள்ளிக்கிழமை எப்படா வகுப்பு முடியும் என்றிருக்கும். வகுப்புகள் முடிந்த கையோடு வேக வேகமாக விடுதியறைக்கு வந்து புத்தகங்களை எறிந்துவிட்டு, லக்கேஜை எடுத்துட்டுப் போகும்போது மனசுல வரும் சந்தோஷத்தை எப்படிங்க என்னால சொல்ல முடியும்? அதை அனுபவித்தால்தான் தெரியும் அதன் அருமை.

வீட்டில் அம்மா, எனக்குப் பிடித்த உணவு வகைகளை ஆசையாசையாக சமைத்து வைப்பார். ஆற அமர சாப்பிடுவேன். வேறென்ன வேண்டும்? பள்ளியிலும், டியூஷன் வகுப்புகளிலும் பார்த்து பயந்து மிரண்ட ஆசிரியர்களைச் சென்று பார்ப்பேன். அவர்களின் சிரித்த முகத்தைப் பார்க்கும்போது மனதில் அவர்களின் மிரட்டலான முகம் வந்துபோகும்.

நல்ல சவுண்ட் வச்சு ஸ்பீக்கரில் பாட்டுக் கேட்பேன். நாம் கேட்கும் பாடல்கள் நான்கைந்து வீடுகளுக்காவது கேட்க வேண்டும் என்ற நினைப்பு மனதில் இருக்கும். அதிக ஒலியுடன் திரைப் பாடல்கள் கேட்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். மாலை நேரங்களில் கீபோர்டு வாசிப்பதும், பாடுவதும் (சரி, கத்துவதும்) பிடிக்கும்.

ஞாயிறு மாலையில், அம்மா செய்துதரும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தியின் ருசியையும், மணத்தையும் மனத்தில் மிதக்க விட்டபடியே கல்லூரிக்குத் திரும்புவேன்.

இது என் வீக்எண்ட்’ பகுதியில் நீங்களும் உங்கள் வீக்எண்ட் அனுபவங்களை ஜாலியாகப் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் வீக்எண்ட் கொண்டாட்டங்களை ‘இளமை புதுமை’ வரவேற்கிறது. உங்களைப் பற்றிய விவரங்களுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்கள்.

வயது வரம்பு: 16 - 30.

தொடர்புக்கு: ilamaiputhumai@thehindutamil.co.in

கடிதத் தொடர்புக்கு:

இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை - 600002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x