Last Updated : 17 May, 2014 05:11 PM

 

Published : 17 May 2014 05:11 PM
Last Updated : 17 May 2014 05:11 PM

புதுவையைக் கலக்கும் ரிக்‌ஷாக்கள்

வரிசையாக வருகின்றன ரிக்‌ஷா வண்டிகள். ரிக்‌ஷாவினுள் வெளிநாட்டவர்கள் சிரித்த முகத்துடன் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளே இருந்தபடி இந்தியாவின் பாரீசான புதுவையைச் சுற்றிப் பார்க்கின்றனர். இது புதுச்சேரி மக்கள் தினமும் பார்க்கும் சாதாரண காட்சிதான். ஆனால் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு இது ஆச்சரியமான விஷயம்.

ஒருகாலத்தில் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் ரிக்‌ஷா பயணம் வெகு பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. தினசரி அலுவலகம் சொல்ல நகரவாசிகள் பலரும் ரிக்‌ஷாவை நம்பியிருந்தார்கள். பள்ளிக் குழந்தைகளைக் கூட்டிச் செல்ல முன்பெல்லாம் பேருந்துகள் அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. அந்தக் குறையை ரிக்‌ஷாக்களே போக்கின. குழந்தைகளைப் பத்திரமாக அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்துவருவதில் ரிக்‌ஷாக்கள் முக்கியப் பங்காற்றின. கால மாற்றத்தில் ரிக்‌ஷாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் அன்றாட நாட்களில் இருந்து மறைந்துவிட்டன. இன்று இந்த ரிக்‌ஷா பயணம் என்பது முந்தைய தலைமுறையினரின் நினைவில் மட்டுமே உறைந்துபோன ஒரு காட்சியாக ஆகிவிட்டது. ரிக் ஷாவிற்குள் பதிலாக ஆட்டோ, கால் டாக்சி என புதுப் புது வாகனங்கள் வந்துவிட்டன. ஆனாலும் புதுச்சேரியில் இன்னும் ரிக்‌ஷாக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வெளிநாட்டுப் பயணிகளிடம் ரிக்‌ஷா பயணத்திறகுப் பெரும் வரவேற்பு இருப்பதுதான் காரணம்.

வெளிநாட்டுப் பயணிகளுக்காக ரிக்‌ஷாவை ரசித்து அழகுபடுத்தி வைத்திருக்கும் ரிக் ஷா ஓட்டுநர்கள் பலரும் தமிழுடன், பிரெஞ்சு, ஆங்கிலமும் தெரிந்துவைத்திருக்கின்றனர்.

ரிக்‌ஷா ஓட்டுநர்களான சின்னையனும் முரளியும் தங்கள் அனுபவங்களைக் கூறுகையில், “வெளிநாட்டவர்கள் நவீன வாகனங்கள் பலவற்றையும் பயன்படுத்தியிருப்பார்கள். ரசிப்புத் தன்மையுடன் சுற்றுலா வருவோர், ரிக் ஷா பயணத்தையே விரும்புகின்றனர். புதுச்சேரி கடற்கரைச் சாலை, புல்வார் பகுதி, முக்கிய வீதிகள், கடை வீதி, கோயில் பகுதி எனப் பல இடங்களைக் குழுவாக நாங்கள் சுற்றிக் காட்டுகிறோம். ரிக் ஷாவில் பல குழுவினர் உள்ளனர். ரிக் ஷா மேற்கூரையைத் திறந்து விட்டு வெயில் உடலில் பட்டவாறு, காற்று மோதியபடி மெதுவாகப் பல இடங்களை வெளிநாட்டவர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். பலரும் புகைப்படம் எடுத்தபடி வருவார்கள். புதுச்சேரிக்கு அடிக்கடி வரும் வெளிநாட்டவர்கள் பலருக்கும் ரிக் ஷா ஓட்டுநர்கள் நன்கு பழக்கமாயிருப்பார்கள். அத்துடன் சுற்றுச்சூழல் மாசில்லாத வாகனம் எங்களுடையது. ஆனால், உள்ளூர் மக்களோ, இந்தியாவில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர் களோ எங்கள் வாகனத்தை அதிகளவில் பயன்படுத்துவதில்லை. அது எங்களுக்கு குறைதான்” என்று குறிப்பிட்டனர்.

பிரான்சிலிருந்து வந்த சுற்றுலாப் பயணி ரிச்மண்ட் கூறுகையில், “கார், விமானம் என நவீன வாகனங்களில் வேகம் இருக்கும். அதில் இடத்தை உற்றுப்பார்க்கவோ, ரசிக்கவோ முடியாது. ஆனால், ரிக் ஷா அருமையான வாகனம். அமைதியாகப் பயணித்தபடி இடத்தை சுற்றிபார்க்க முடியும். விரும்பிய இடங்களைப் படமெடுக்க முடியும். உள்ளூர் சுற்றுலா வாகனங்களில் பெஸ்ட் ரிக் ஷாதான். அதனால் நாங்கள் பிரான்ஸ் சென்றாலும் இங்கு முதல் முறை வருவோரை ரிக் ஷா பயணத்தைத் தவற விடாதீர்கள் என்போம்” என்றார் துள்ளலுடன்.

அவர் சொல்வது வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டுமல்ல. நீங்களும் புதுவைக்கு வந்தால் ரிக் ஷா பயணத்தைத் தவறவிட்டுவிடாதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x