Published : 01 Jul 2025 01:10 PM
Last Updated : 01 Jul 2025 01:10 PM

திரைப் பார்வை: மார்கன் | ஓர் இரக்கமற்ற படத்தொகுப்பாளரின் நெத்தியடி!

சைக்கோ கொலையாளியை அடையாளம் காண, நாயகனின் புத்திசாலித்தனத்தைப் பின்தொடரும் குற்றப் புலனாய்வுப் படங்களே தமிழ் சினிமாவில் அதிகமும் வெளி வந்திருக்கின்றன. ‘போர்த்தொழில்’, ஒரு மூத்த அதிகாரிக்கும் ஒரு புதிய, இளம் அதிகாரிக்கும் இடையிலான முரண்களின் வழியே கொலை விசாரணைக் களத்தை உணர்வுபூர்வமாக விரித்தது. அந்த வரிசையில் ஒரு மாறுதலாக, துணைக் கதாபாத்திரம் ஒன்றின் தனித்த, அபூர்வத் திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும் நாயகன், கொலையாளியை எப்படி நெருங்குகிறார் என்பதுதான் இப்படத்தின் சிறப்பு!

இதில் நாயகன் ஒரு பிரபலமான நட்சத்திரமாக இருந்தும் தன்னுடைய புஜபலப் பராக்கிரமத்தைக் காட்டவில்லை என்பதும் கவனிக்க வைக்கிறது.

தனது பிறந்தநாள் அன்று காதலனைச் சந்தித்துவிட்டு வீடு திரும்புகிறார் ஓர் இளம்பெண். அப்போது முகத்தை மறைத்துக்கொண்ட ஒரு மர்மமான நபரால் கொலைசெய்யப்படுகிறார். அந்த மர்ம நபர், கொலை செய்யத் தேர்ந்தெடுத்த அந்தப் பெண்ணின் பின்னங்கழுத்தில் ஓர் ஊசி மருந்தைக் குத்தி நொடிக்குள் மருந்தைச் செலுத்துகிறார். அப்பெண் அடுத்தசில நொடிகளில் மூர்ச்சையாகி இறப்பதுடன், உடல் முழுவதும் கருநீலமாக மாறிவிடுகிறது. இறந்த பெண்ணின் முகநூல் பக்கத்தை ‘ஹேக்’ செய்யும் கொலையாளி, ‘இது என்னுடைய மோசமான பிறந்தநாள்’ என்கிற பதிவுடன் அப்பெண்ணின் நிறம் மாறிப்போன சடலப் படத்துடன் பதிவு செய்துவிட்டுப் போய்விடுகிறார்.

தொலைக்காட்சியில் இந்த ஒளிப்படத்துடன் வெளியாகும் இக்கொலைக்குற்றம் பற்றிய செய்தியை, மும்பையில் வசிக்கும் காவல் அதிகாரியான துருவ் (விஜய் ஆண்டனி) பார்த்து அதிர்ந்துபோகிறார். ஏனென்றால், சில ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் அடியெடுத்து வைத்த துருவின் மகளும் இதே பாணியில்தான் கொல்லப்பட்டாள். இதன்பின்னர், சென்னைக்கு விரைந்து வரும் துருவ், அந்த வழக்கை கைலெடுக்கிறார். வெகு விரைவாகத் தமிழறிவு (அஜய் தீஷன்) என்கிற நீச்சல் விளையாட்டு வீரனைத் தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகிறார். அப்போது சூழ்நிலையும் தடயங்களும் தமிழறிவு கொலையாளியாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை வலுக்கச் செய்கின்றன. தமிழறிவுதான் அந்தக் கொலையைச் செய்தாரா? தமிழறிவைக் கொண்டு கொலையாளியை நெருங்க துருவ் முடிவெடுத்தது ஏன் என்று கதை நகர்கிறது.

தமிழறிவின் திருவண்ணாமலைப் பூர்வீகம், அவனது பால்யம், தண்ணீருக்கும் அவனுக்குமான தொடர்பு, அவனுக்கு அதுசார்ந்து நிகழும் அமானுஷ்ய அனுபவங்கள் ஆகியன, முதல் பாதித் திரைக்கதையில் முக்கிய பங்கை எடுத்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சித்தர்களின் ஸ்தூல உடல் பயணம் உள்ளிட்ட கூடு பாய்தல், கூடு விலகுதல் போன்ற நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் தமிழறிவு கதாபாத்திரம் நம்பகமாகவும் நாயகனுக்கு இணையான முக்கியத்துவத்துடனும் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தின் திறன்களையும் சிக்கல்களையும் நிறுவ, அதற்காக உருவாக்கப்பட்ட வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரமும் அவற்றை வடிவமைத்திருந்த சுவாரசியமும் முதல் பாதிப் படத்தைத் தூக்கி நிறுத்துவிடுகின்றன. தமிழ் ஆன்மிகக் கலாச்சாரத்தின் ஒரு கிளையாக இருக்கும் சித்தர் வழிபாட்டையும் நம்பிக்கையையும் ஒரு சைக்கோ கொலையாளி பற்றிய புலன் விசாரணைப் படத்தில் பொருத்தியது முற்றிலும் புதிதாகவும் ஏமாற்றம் அளிக்காத திரை அனுபவத்துக்கு உத்தரவாதமாகவும் அமைந்துவிட்டது.

தமிழறிவாக நடித்துள்ள அஜய் தீஷன், காதல் காட்சிகளில் வெகு இயல்பான நடிப்பையும் அமானுஷ்யத்தை எதிர்கொள்ளும் காட்சிகளில் இன்னும் அதிக அக்கறையுடனும் நடித்துக் கவர்ந்துவிடுகிறார். இவரது காதலியாக வரும் தீப்ஷிகாவும் நச்சென்ற பங்களிப்பைத் தந்திருக்கிறார். தமிழறிவின் தனித் திறனைப் பயன்படுத்திக்கொள்ளும் விசாரணை அதிகாரியாக வரும் விஜய் ஆன்டனி, படத்தின் நாயகனாக இருந்தாலும் வீர தீரச் சாகசங்கள், சண்டைக் காட்சிகளில் முஷ்டியை மடக்காமல், தன்னுடைய தனிப்பட்ட இழப்பின் சோகத்தைக் கண்களுக்குள் இழையோடவிட்டபடி கொலையாளியை நெருங்க ஆடும் அலப்பறையில்லாத ஆட்டம், இரண்டாம் பாதிப் படத்தைச் சுவாரசியமான வெட்டாட்டமாக மாற்றிவிடுகிறது. தன்னைவிட அதிக முக்கியத்துவமுள்ள ஒரு கதாபாத்திரத்தைக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்த காரணத்துக்காகவே விஜய் ஆண்டனியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அதேபோல், ஓர் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி தந்திருக்கும் ‘உலகையே’, ‘ஏம்மா’ ஆகிய பாடல்கள் ஈர்த்தாலும் அவரின் பின்னணி இசை படம் முழுவதும் பெரும் மாயத்தைச் செய்திருக்கிறது.

கொலையாளி குறித்த பின்னணியை நீட்டி முழக்காமல் அளவாக, ஆனால், நறுக்கென்று புரியும் விதமாகச் சொன்னதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். கொலையாளி கொலை செய்யும் விதத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை தர்க்கம் விலகாமல் அமைத்த வகையிலும் இப்படத்தின் திரைக்கதை ஆசிரியரைப் பாராட்டலாம். திரைக்கதையின் நேர்த்தி, விலகலின்மை இரண்டையும் அடையாளம் கண்டுகொண்ட படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால், அவற்றுக்குப் பங்கம் வந்துவிடாத வகையில் 2 மணி நேரம் 12 நிமிடங்களுக்குப் படத்தை நறுக்கென்று இழைத்திருப்பது திரை அனுபவத்துக்குப் பேருதவி புரிந்திருக்கிறது. திரைக்கதையில் படத்தொகுப்பாளரின் சரி பாதிப் பங்களிப்பு இருப்பதும் படம் இழைக்கப்பட்டிருப்பதற்கு ஒரு காரணம். இப்படத்தின் இருவேறு களங்களை இணைப்பதில் திரை எழுத்து, தொழில்நுட்பம் இரண்டையும் திறம்படப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இயக்குநரே இப்படத்தின் இரக்கமற்ற படத்தொகுப்பாளராகவும் இருப்பதும், விஜய் ஆண்டனி என்கிற நட்சத்திரமும், ரசிகர்களின் நேரத்தையும் பணத்தையும் பெரிதும் மதித்து நடந்துகொண்டிருக்கிறார்கள்.

இருவேறு களங்களை ஒரே ஓவியக் கித்தானுக்குள் கொண்டுவந்து இணைக்கும் சாகசத்தைச் செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் யுவாவும், அவருக்குத் துணை நிற்கும் விதமாகக் கலை இயக்கத்தைப் பழமையும் புதுமையும் கைகோர்க்கும் கலவையில் தூக்கி நிறுத்தியிருக்கும் ஏ.ராஜா இருவருக்கும் நல்வரவு.

சிரியல் கில்லர், சைக்கோ கில்லர், கொலை விசாரணைக் கதைக் களங்களை இன்னமும் பழைய டெம்பிளேட்டுகளில் சொல்லிக்கொண்டிருந்தால் ரசிகர்களைக் கவர முடியாது என்பதை உணர்ந்து தெளிந்து உருவாக்கப்பட்ட ஓர் அசலான பொழுதுபோக்குப் படம் ‘மார்கன்’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x