Published : 13 Jun 2025 07:47 AM
Last Updated : 13 Jun 2025 07:47 AM
சத்தமில்லாமல் வந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவிடும் சிறிய படங்கள் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ‘குட் டே’ படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் டி.அரவிந்தன். இயக்குநர் பிரேம்குமாரிடம் 96 படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான அவருடன் படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
என்ன கதை, எங்கே நடக்கிறது? - கதை திருப்பூரில் ஒரே இரவில் நடந்து முடிகிறது. அங்கே, 13 வருடங்களாக ஆயத்த ஆடைகள் நிறுவனம் ஒன்றில் சூப்ரவைசராக வேலை செய்து கொண்டிருக்கிறான் சாந்தகுமார். உடன் பணிபுரியும் சக ஊழியரான ஒரு பெண்ணுக்கு மேனேஜரால் சிக்கல் வருகிறது.
அதை சாந்தகுமார் கேள்வி கேட்கிறான். அதுவரை அடிமாடுபோல் கேள்வி கேட்க முடியாத மவுனியாக வேலை செய்தவனின் தார்மிகக் கோபம் அது. பணி அடுக்கில் தனக்குக் கீழே இருப்பவன் தன்னை எப்படிக் கேள்வி கேட்கலாம் என்று மேலாளர் இவனைக் கன்னத்தில் அறைந்து அசிங்கப்படுத்திவிடுகிறார்.
அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில், மனம் புழுங்கி அவமானத் தால் வெந்து தணிகிறான். தனது மனவலியைத் தணிக்க, நண்பனுடன் சேர்ந்து மது அருந்துகிறான். அப்போது, ‘நீ போய் மேனேஜரைத் திரும்ப அடித்தால்தான் உன்னால் சகஜமான நிலைக்கு வரமுடியும்; இல்லாவிட்டால் இந்த அவமானத்தை நினைத்தே நீ பைத்தியமாகிவிடுவாய்” என்று நண்பன் சொல்கிறான். நண்பனின் தூண்டுதல், மது தந்த மயக்கம் இரண்டும் சேர்ந்து எரியும் கொள்ளிபோல் ஆகிவிடு கிறான்.
அன்று இரவே மேனேஜரின் வீட்டுக்குப்போய் அவரைப் பதிலுக்குப்பதில் அடித்துவிடுவது என்று முடிவு செய்து போதையுடன் கிளம்புகிறான். அவன் மது அருந்திய இடத்திலிருந்து மேனேஜரின் வீடு நகரத்தின் மறு முனையில் இருக்கிறது. செல்லும் வழியில், அவன் பலவிதமான மனிதர் களைச் சந்திக்கிறான். அவர்களை அவன் எப்படி எதிர்கொண்டான்? விடியும் முன் மேனேஜரின் வீட்டை அடைந்தானா? அவரை அடித்தானா, அவனுடைய மனம் அமைதியடைந்ததா என்பது கதை.
கதாநாயகனின் ‘மோசமான’ நாளுக்கு ‘குட் டே’ என்று தலைப்பு வைத்திருப்பது ஏன்? - நாயகன் தன்னை உணர்வதுதான் ‘கேரக்டர் ஆர்க்’. பொதுவாக, சாமானிய மனிதர்களைப் பிரதிபலிக்கும் கதை யின் நாயகன் கதாபாத்திரங்களை ‘குளோரிஃபை’ செய்வது, அதன் திடீர் சாகசங்களை வைத்து வித்தை காட்டுவது என்றெல்லாம் பல படங்கள் வந்துவிட்டன. கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் அந்தத் தவறை இதில் செய்யவில்லை. சாந்தகுமார் போன்ற மனிதர்களே உண்மையானவர்கள். வாழ்க்கை இதுதான் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒருவன், ‘தன்னை உணர்வதுதான் உண்மையான வாழ்க்கை’ என்பதை உணரும் அந்த உயர்ந்த தருணத்தை இப்படத்தில் எல்லாருமே பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
நம் எல்லாருக்குள்ளுமே ஒரு சாந்தகுமார் இருக்கவே செய்கி றான். சாந்தகுமார் படம் முழுக்க அட்ராசிட்டி பண்ற கேரக்டர். அதை முழுக்க சோசியல் சட்டையராகச் சொல்லியிருக்கிறோம். சாந்தகுமார் மட்டுமல்ல; படத்தில் வரும் எந்தக் கதாபாத்திரமும் செயற்கையாக இருக் காது. எல்லாவற்றுடனும் ஈஸியாக ‘கனெக்ட்’ ஆகிவிடலாம்.
நாயகனாக நடித்திருப்பது யார்? மற்ற நடிகர்கள், படக்குழு பற்றிக் கூறுங்கள்.. பிரித்திவிராஜ் ராமலிங்கம் கதை எழுதி, நாயகனாக நடித்துப் படத்தை யும் தயாரித்திருக்கிறார். இவர் ‘96’ படத்தின் கோ-டைரக்டர். படத்தை விஜய் சேதுபதிக்குப் போட்டுக் காட்டி னோம். இவரது நடிப்பைப் படத்தில் பார்த்து, மனம் விட்டுப் பாராட்டினார். தியாகராஜன் குமாரராஜா, நெல்சன் எனப் பல முன்னணி இயக்குநர்கள் படத்தைப் பார்த்துப் பாராட்டினார்கள்.
இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை பூர்ணா ஜே.எஸ்.மைக்கேல் எழுதியிருக் கிறார். ஒளிப்பதிவு செய்திருப்பதுடன் படத்தை எடிட்டும் செய்திருக்கிறார் மதன் குணதேவ். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பாடல்களுடன் படத்துக்குக் கூடுதல் வசனங்களும் எழுதியிருக்கிறார். படத்துக்கு இசை கோவிந்த் வசந்தா. ‘மின்மினியே ராசாத்தி’ என்கிற முதல் பாடல் வெளியாகி வைரலாகியிருக்கிறது.
டீசருக்கும் நல்ல வரவேற்பு. நாயகன் புதுமுகம் என்பதால், மற்ற அனைத்துத் துணைக் கதாபாத்திரங்களுக்கும் பிரபலமான நடிகர்களையே தேர்வு செய்துகொண்டோம். காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், கலை இயக்குநர் விஜய் முருகன், திருநங்கை ஜீவா சுப்பிரமணியம் என்று பட்டியல் பெரியது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தைப் பார்த்துப் பிடித்துப் போய், தாமாகவே முன்வந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு படத்தை வெளியிடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT