Published : 06 Jun 2025 07:21 AM
Last Updated : 06 Jun 2025 07:21 AM
அசலான முயற்சிகளைத் திரையரங்கில் கண்டு ஆராதிக்க விரும்புகிறவர்களாக இன்றைய ரசிகர்கள் இல்லை. படம் குறித்துக் கேள்விப்பட்ட பிறகு, அதை ஓடிடி தளங்களில் தேடியோ, ‘பைரசி’ பிரதியாக தரவிறக்கியோ காணும் நிலைக்குத் திரைப்படங்கள் அவர்களைத் தள்ளிவிட்டன. தற்போது ரசிகர்களைத் தேட வைத்திருக்கும் ஓர் அசல் முயற்சி ‘மனிதர்கள்’.
கதாநாயகி இல்லாத, வணிக சினிமாவின் அழுக்குகள் இல்லாத ஒரு தரமான சம்பவம் இது. மதுப்பழக்கம் என்பது ‘குடிநோய்’ ஆகப் பரவிக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஆறு சாமானியர்களின் ஓரிரவு வாழ்க்கையைப் புடம் போட்டுக் காட்டியிருக் கிறார் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா.
திண்டுக்கல்லில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்து வரும் கர்லி (கபில் வேலவன்), சதீஷ் (தக்ஷா), மனோ (குணவேந்தன்), தீபன் (அர்ஜுன் தேவ்), சந்திரன் (சம்பசிவம்), பிரேம் ஆகிய ஆறு நண்பர்களும் நள்ளிரவில் ஒரு தனிமையான மலை வனப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். போதை தலைக்கேறி வார்த்தைகள் முற்றி, அவர்கள் கைகலப்பில் இறங்கி, இரவின் மடியில் அயர்ந்து அரை போதையில் கண் விழிக்கிறார்கள். அப்போது மதுப்போத்தல் குத்தி பிரேம் மரணித்துக் கிடக்கிறார்.
பதற்றமடையும் மற்ற ஐந்து பேரும் நடந்தது கொலையா, விபத்தா? கொலையென்றால் ஐவரில் அதை யார் செய்தது என்கிற குழப்பத்துடன் பிரேமின் சடலத்தை விடியும் முன் அப்புறப்படுத்த அதை காரில் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். அந்த நள்ளிரவில் அங்கிருந்து கிளம்பும்போது அவர்களுக்கிடையிலான உரையாடலுடன், வழியில் சந்திக்கும் இரவின் மனிதர்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள், பிரேமின் சடலத்தை அவர்கள் நினைத்த மாதிரி மறைக்க முடிந்ததா எனப் படம் நகர்கிறது.
போதையின் விளைச்சலாக நிகழ்ந்துவிட்ட ஒரு குற்றத்தையும் அதைத் தொடர்ந்து, சுயநலத்துக்கும் நட்புணர்வுக்கும் இடையில் ஊசலாடும் சாமானிய மனிதர்களின் அகங்களையும் கச்சாத் தன்மையுடன் திரை விலக்கிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். நண்பர்களின் கதாபாத்திரங்களில் சடலமாகிவிடும் பிரேம் தவிர, மற்ற ஐந்து பேரும் அறிமுக நடிகர்கள் என்று சொல்ல முடியாதபடி நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.
கொல்லும் குற்றவுணர்வு, கட்டுக்குள் வராத கண்ணீர், பிதற்ற வைக்கும் பதற்றமும் பயமும், தெளிவாக முடிவெடுப்பதுபோல் தோன்றும் மிதமிஞ்சிய குழப்பம், ஒரு கட்டத்தில் சுயநலம் உருவாக்கும் நிதானம் எனத் தங்களை ஆக்கிரமித்து வழிநடத்தும் உணர்வுகளை, உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்பு ஆகியவற்றின் வழியாக அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அவ்வளவு பதற்றத்திலும் முடிவுகளை எடுக்கும் கர்லியின் கதாபாத்திரத்தில் வரும் கபில் வேலன், மற்ற நால்வரையும் கட்டுக்குள் வைத்து ஆற்றுப்படுத்தியபடி பயப்படும் நடிப்பில் மீட்டருக்குள்ளேயே மிரட்டியிருக்கிறார். ஒரே இரவில் நடந்து முடியும் படத்தின் திரைக்கதையை ‘ சஸ்பென்ஸ் த்ரில்லர்’ என்கிற வகைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுபோல் எழுதியிருக்கிறார் இயக்குநர் ராம் இந்திரா.
அதைப் புரிந்துகொண்டு காருக்குள் நடக்கும் உரையாடலுக்கான காட்சிக் கோணங்கள், இருளில் விரியும் திண்டுக்கல்லின் நிலப்பரப்பு இரண்டையும் விரையும் வாகனங்களின் ஹெட் லைட் ஒளி கொண்டு ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் கதை சொல்லலுக்கு முதுகெலும்பாகப் பயன்பட்டிருக்கிறது. இந்த ‘மனிதர்கள்’ எங்கோ இருப்பவர்கள் அல்ல; நமக்கு மத்தியில் வாழ்பவர்கள். நமக்கு இவர்கள் கொடுத்தனுப்புவது நிறைய்ய...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT