Published : 01 Jun 2025 09:20 AM
Last Updated : 01 Jun 2025 09:20 AM
கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக இருக்கும் சாட்சியங்கள், தடயங்கள், ஆதாரங்கள் ஆகியன அரசுத் தரப்பு வழக்கறிஞருக்குப் பெரும் பலம். ஆனால் அப்படிப்பட்ட நம்பகமான சாட்சியங்களில்கூட வேறொரு உண்மைக் கதை ஒளிந்திருக்கலாம் என்கிற சுவாரசிய மான பக்கத்தைத் திறந்து காட்டுகிறது ‘தி வெர்டிக்ட்’ என்கிற இந்த கோர்ட் ரூம் டிராமா.
இரண்டாம் பாதிப் படத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஓர் ஏமாற்றம் அளிக்காத திரைக்கதையுடன் நம்மை இறுதிவரை உட்கார வைக்கிறார் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் கிருஷ்ணா சங்கர். மனித உயிர்கள் மதிப்பிழந்துபோய், உலகமே கரோனா பெருந்தொற்றின் முன்னால் மண்டியிட்ட நேரத்தில் அமெரிக்காவில் நடக்கிறது கதை. 2019, மே 20ஆம் தேதி, பெரும் செல்வந்தர் பெண்மணியான எலிசா (சுஹாசினி மணிரத்னம்) மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.
மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் உருளையுடன் வாழ்க்கைப்பட்டவர். அப்படிப்பட்டவரின் மரணம், இயற்கையா, கொலையா என்று போலீஸ் சந்தேகிக்கிறது. இறப்பதற்கு முன்பு எலிசாவுடன் இருந்தவர், அவர் தன் மகளைப் போல் நேசித்த நம்ரதா (ஸ்ருதி ஹரிஹரன்) என்கிற இளம் பெண். அவருக்கு எதிராகவே சாட்சியங்களும் தடங்களும் மாறிவிட, விசாரணைக்குப் பின் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துகிறது போலீஸ்.
உண்மையில் அவர்தான் எலிசாவின் மரணத்துக்குக் காரணமா என்பதை நோக்கி நகரும் கதையில் ஒளிந்திருக்கும் எதிர்பாராத திருப்பங்கள் அனைத்தும் திடுக்கிடல்கள்.
கட்டற்ற சுதந்திரமான பாலியல் வாழ்வு, அமெரிக்கா வழங்கும் மகத்தான ஜனநாயகம். அதன் பலனைத் தவறான வழியில் அனுபவிக்கத் துடிப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதைப் படம் நல்லதொரு செய்தியாக நமக்குக் கொடுத்து அனுப்புகிறது. முதல் 20 நிமிடங்கள் பொறுமையுடன் காத்திருந்தால் அதன்பின் படத்தின் ஓட்டத்தில் இணைந்துவிடுவீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT