Published : 22 May 2025 04:22 PM
Last Updated : 22 May 2025 04:22 PM
தற்போது வெளியாகும் தமிழ் ஹாரர் நகைச்சுவைப் படங்களில் பேயுடன் நட்பு பாராட்டி, அவற்றைக் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர் தமிழ் சினிமா நடிகர்கள். தற்போது ஒருபடி மேலே போய், பேயை வீட்டில் வளர்க்கும் ஒரு செல்லப் பிராணியாகவே சித்தரித்து திரைக்கதை எழுதி, அதில் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து படமாகவும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார் டி.ஆர். பாலா.
‘பிக்பாஸ்’ புகழ் முகேன் ராவ், பாவ்யா ட்ரிகா, ராதா ரவி, பால சரவணன், நிழல்கள் ரவி, வடிவுக்கரசி, வினோதினி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இப்படத்துக்கு ‘ஜின் - தி பெட்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை, ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசிய பேச்சு, தற்போதைய கோலிவுட்டின் சிக்கல்களை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுவதாக இருந்தது. அவர் பேசிய பேச்சின் முழு விவரம் வருமாறு:
“இப்பட இயக்குநரின் தந்தையான திருமலை வேந்தன் திரைப்படக் கல்லூரியில் எனக்கு ஜூனியர். அவருடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு இருக்கிறது. இப்படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்தபோது தமிழ் திரையுலகுக்கு அற்புதமான திறமை மிக்க குழு கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.நாங்கள் எல்லாம் நாயகியை தேர்வு செய்யும்போது அந்தப் பெண்ணின் புன்னகையையும் கண்களையும் மட்டும் தான் கவனிப்போம். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பவ்யாவிடம் அழகான புன்னகை இருக்கிறது. பார்ப்பதற்கு சமந்தா போல் இருக்கிறார். அவருக்கு தென்னிந்திய சினிமாவில் எதிர்காலம் இருக்கிறது.
மேனேஜர்களுக்கு கதை பற்றி என்ன தெரியும்?
வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாக கதையை கேளுங்கள். நடிகர்களின் மேலாளர்களும் உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது. அவர்களுக்கு கதை பற்றிய அறிவு அறவே கிடையாது. இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை.எப்போது ஒரு நாயகனுக்கும் நாயகிக்கும் இயக்குநருக்கும் இடையே புரிதலும் நட்பும் இல்லையோ, அப்போதே அந்தப் படம் தோல்வியை தழுவுகிறது. இதை என் படத்தினை ஆய்வு செய்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.
மதகஜ ராஜா வசூல் என்ன ஆனது?
இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு திரையரங்குகளில் ஏழு முதல் எட்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு அறுபது கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இவை அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலம் தான் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் நஷ்டம் ஏற்படுகிறது.
என்னுடைய தயாரிப்பாளர் நண்பர் ஒருத்தர் 'மத கஜ ராஜா' படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டான, இன்னும் அதற்கான வசூல் முழுமையாக வந்து சேரவில்லை என குறிப்பிட்டார். இதுதான் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை. அதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தயாரிப்பாளர்கள் - தொழிலாளர் பிரச்சினைக்கு என்ன தீர்வு?
திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும். திரையுலகத்தில் தொழிலாளர்கள் தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை. சில தயாரிப்பாளர்கள் மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள்.
எங்களுடைய பெப்சி பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்களாகிய நாம் நன்றாக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறேன்.தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தொழிலாளர்களை சிறப்பான மரியாதையுடன் நடத்துகிறார்கள்.அதனால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஃபார்முலாவை வைத்திருக்கிறார். அதனைப் பயன்படுத்தி தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காண வேண்டும். நாங்கள் தவறு செய்திருந்தாலும் அதனை அவர் சுட்டிக் காட்டலாம். நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
இந்தப் படத்தின் இயக்குநர் பாலா எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக வருவார். அவரது திறமையை இந்த அறிமுகப்படமே சொல்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT