Published : 03 May 2024 06:20 AM
Last Updated : 03 May 2024 06:20 AM

சினிப்பேச்சு: இடைவேளை இல்லாத படம்!

கோல்டன் ஸ்டுடியோஸ் சார்பில் கோமதி தயாரிப்பில், நடன இயக்குநர் ராதிகா இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘தி ப்ரூஃப்’ (THE PROOF). பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள கமர்ஷியல் படமான இதில், சாய் தன்ஷிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், ஆர்.வி.உதயகுமார், யூகி சேது உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் யூகி சேது பேசும்போது: “ஒரு இடைவெளிக்குப் பிறகு நான் ஒரு படம் செய்துள்ளேன். அப்படத்தின் எல்லாப் பாடலுக்கும் ராதிகாதான் டான்ஸ் மாஸ்டர். இந்தப்படத்துக்குச் சரியான தலைப்பைப் பிடித்திருக்கிறார். எல்லா மொழிக்கும் பொருந்துகிற மாதிரியான தலைப்பு. ராதிகா மாஸ்டரிடம் தலைமைப் பண்பு இருக்கிறது. எந்த நடிகரும் அவரை வணங்கித்தான் ஷாட்டுக்குப் போகிறார்கள். இப்படத்தில் அவர் மகன் தீபக்கை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இன்றைக்கு உலகளவில் எடுக்கப்படும் சினிமாக்களில் 10 சதவீதம்தான் வெற்றி பெறுகிறது. சினிமாவில் ‘இடைவேளை’ விடும் பழக்கம் உலகிலேயே தமிழ் சினிமாவில் மட்டும்தான் இருக்கிறது. ராதிகா அதை இந்தப் படத்தில் தகர்த்துள்ளார். ஒரு இயக்குநராகவும் ராதிகா இப்படத்தின் மூலம் ஜெயிப்பார்.” என்று வாழ்த்திப் பாராட்டினார்.

திருமணமும் குண்டு வெடிப்பும்: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ப்ரின்ஸ்’ படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் ஆனந்த் நாராயணன். அவர் எழுதி இயக்கி, இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘இங்க நான்தான் கிங்கு’. முழுநீள நகைச்சுவை ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இதில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியாலயா அறிமுகமாகிறார்.

இவர்களுடன் தம்பி ராமைய்யா, விவேக் பிரசன்னா, பாலசரவணன், முனீஸ்காந்த், ‘லொள்ளு சபா’ மாறன், மறைந்த சேஷு, மனோபாலா உள்படப் பலர் நடித்திருக்கிறார்கள். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சந்தானம், எதிர்பாராதவிதமாக ரத்னபுரி ஜமீன் இளவரசியைத் திருமணம் செய்துகொள்கிறார்.

மகிழ்ச்சியுடன் வாழ்க்கையைத் தொடங்கும் நேரத்தில், தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குக் காரணமான குற்றவாளி என்று சந்தானத்தைக் காவல்துறை கட்டம் கட்டித் தேடுகிறது. இதனால் மனைவியின் நம்பிக்கையை இழக்கிறார். இந்தச் சிக்கலிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் கதை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x