Published : 30 Jun 2014 12:00 AM
Last Updated : 30 Jun 2014 12:00 AM
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரினை 21-18, 21-11 என்ற கணக்கில் சாய்னா வீழ்த்தினார். இந்த வெற்றியைப் பெற சாய்னா 43 நிமிடங்களை எடுத்துக் கொண்டார். ரூ.4.5 கோடி பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டனில் வெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சாய்னா பெற்றார்.
சர்வதேச மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில் சாய்னா நெவால் 8-வது இடத்தில் உள்ளார். கரோலின் மரின் 10-வது இடத்தில் உள்ளார். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் வெளிநாட்டில் சாய்னா வென்றுள்ள சர்வதேச பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 2012-ல் டென்மார்க் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் சாய்னை வென்றிருந்தார்.முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடைபெற்ற இண்டியன் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சாய்னா சாம்பியன் பட்டம் வென்றார்.
சமீபகாலமாக சாய்னா பல்வேறு போட்டிகளில் மிகவும் தடுமாற்றத்துடன்தான் விளையாடி வந்தார். முக்கியமாக சீன வீராங்கனைகளுடனான ஆட்டத்தில் சாய்னா தோல்வியைச் சந்தித்தார். இப்போது ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வென்றுள்ளதன் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT