Published : 27 Apr 2019 03:57 PM
Last Updated : 27 Apr 2019 03:57 PM
6 தொடர் தோல்விகளை அடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேப்டன்சி செய்யும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய குறைந்து விட்ட நிலையில் அணியின் நிலை பற்றி தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்துள்ளார்.
“கண்டிப்பாக! ஆட்டத்தின் முடிவுகள் அணிக்குச் சாதகமாக இல்லாது போகும்போது கேப்டன்சி குறித்த கேள்விகள் எழவே செய்யும். ஆனால் ஓர் அணியாக நாங்கள் நிறைய விஷயங்களைச் சரியாகச் செய்யவே விரும்புகிறோம்.
என் பணி அணியை முன்னின்று வழிநடத்துவதாகும். ஆனால் சில வேளைகளில் முடிவுகள் நமக்குச் சாதகமாக அமைவதில்லை. ஆகவே இது உண்மையில் வளைப்பதற்குக் கடினமான ஒன்றாகும்.
நாங்கள் இது குறித்து கவனிக்காத விஷயமே இல்லை என்று ஏறக்குறைய கூறலாம். அனைவரையும் நல்ல இடத்தில் வைத்திருக்க முயல்கிறோம், ஓய்வறைச் சூழல் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம், அணித்தலைவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்த அனைத்தையும் செய்து வருகிறோம்.
ஆனால் ஒரு அணியாக கடுமையாக முயற்சிக்கிறோம். நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம் என்பது என் அணியினர் மீதான என் நம்பிக்கைக்கு உத்தரவாதமாக அமைகிறது.
பந்து வீச்சு ஒட்டுமொத்தமாக இன்னும் முன்னேற வேண்டும். பேட்டிங்கும்தான். இதனால்தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை” என்றார் தினேஷ் கார்த்திக்.
அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் பிரமாதமாக ஆடி 97 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆனால் அணி வெற்றி பெறவில்லை. உண்மையில் கிரீன் டாப் பிட்சில் மிக அருமையான இன்னிங்ஸ் அது... குறிப்பாக வருண் ஆரோனின் இன்ஸ்விங்கர்கள் வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT