Published : 16 Nov 2025 10:20 AM
Last Updated : 16 Nov 2025 10:20 AM
கொல்கத்தா: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 13, வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.
பொறுமையாக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் 122 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் சைமன் ஹார்மர் வீசிய பந்தை தடுத்து விளையாட முயன்ற போது மட்டை விளிம்பில் பட்டு சிலிப் திசையில் நின்ற எய்டன் மார்க்ரமிடம் கேட்ச் ஆனது. 2-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர் ஜோடி 57 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில், சைமன் ஹார்மர் வீசிய 35-வது ஓவரின் 4-வது பந்தை பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் ஸ்வீப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தார். அப்போது அவருக்கு கழுத்து பகுதியில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் 4 ரன்களுடன் ஷுப்மன் கில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடினார். கேசவ் மஹாராஜ் வீசிய 38-வது ஓவரில் மிட் ஆஃப் திசையிலும் 42-வது ஓவரில் லாங் ஆன் திசையிலும் சிக்ஸர் விளாசி அசத்தினார் ரிஷப் பந்த்.
மறுமுனையில் நங்கூரமிட்டு விளையாடி வந்த கே.எல்.ராகுல் 119 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மஹாராஜ் பந்தில் சிலிப் திசையில் நின்ற எய்டன் மார்க்ரமிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
மட்டையை சுழற்றிய ரிஷப் பந்த் 24 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் கார்பின் போஷ் வீசிய வேகம் குறைந்த பவுன்ஸரை லெக் திசையில் விளாச முயன்றார். ஆனால் பந்து கையுறையில் பட்டு விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைய்னிடம் கேட்ச் ஆனது. மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 45 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. ரவீந்திர ஜடேஜா 11, துருவ் ஜூரெல் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. துருவ் ஜூரெல், சைமன் ஹார்மர் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். 14 பந்துகளை எதிர்கொண்ட துருவ் ஜூரெல் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் சேர்த்தார். இதைத் தொடர்ந்து அக்சர் படேல் களமிறங்கினார். கார்பின் போஷ் வீசிய 50-வது ஓவரின் முதல் பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்ட இந்திய அணி 161 ரன்களுடன் முன்னிலை பெறத் தொடங்கியது.
சீராக ரன்கள் சேர்த்து வந்த ஜடேஜா 45 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் சைமன் ஹார்மர் பந்தை தடுத்தாடிய போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய குல்தீப் (1), முகமது சிராஜ் (1) ஆகியோர் மார்கோ யான்சன் பந்தில் நடையை கட்டினர். அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட அக்சர் படேல் 45 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் சைமன் ஹார்மர் பந்தில் பேக்வேர்டு பாயின்ட் திசையில் நின்ற மார்கோ யான்சனிடம் எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முடிவில் இந்திய அணி 62.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காயம் காரணமாக வெளியேறி இருந்த ஷுப்மன் கில் மீண்டும் பேட் செய்ய களமிறங்கவில்லை. பும்ரா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி ஒரு கட்டத்தில் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொண்டு 114 ரன்களை சேர்ப்பதற்குள் 8 விக்கெட்களையும் பறிகொடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினர். கேசவ் மஹாராஜ், கார்பின் போஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
30 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழற்பந்து வீச்சில் தடுமாறியது. ரியான் ரிக்கெல்டன் 11, எய்டன் மார்க்ரம் 4, வியான் முல்டர் 11, டோனி டி ஸோர்ஸி 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5, கைல் வெர்ரெய்ன் 9, மார்கோ யான்சன் 13 ரன்களில் நடையை கட்டினர்.
2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 35 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் தெம்பா பவுமா 78 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களும், கார்பின் போஷ் ஒரு ரன்னும் சேர்த்து களத்தில இருந்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4, குல்தீப் யாதவ் 2, அக்சர் படேல் ஒரு விக்கெட் கைப்பற்றினர். 63 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி கைவசம் 3 விக்கெட்கள் இருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
கே.எல்.ராகுல் 4 ஆயிரம் ரன்கள்: கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர், 15 ரன்கள் சேர்த்திருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை கடந்தார். அவர், அறிமுகமான நாளில் இருந்து இதற்காக 3,977 நாட்களை செலவிட்டுள்ளார்.
சிக்ஸர் மன்னன்: கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 2 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் வீரேந்திர சேவக்கை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தார். ரிஷப் பந்த் இதுரை 92 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளார். சேவக் 90 சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.
4 ஆயிரம் ரன்கள்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர், 10 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச டெஸ்ட் அரங்கில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் மற்றும் 300 விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் இயன் போத்தம், இந்தியாவின் கபில்தேவ், நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோருடன் ஜடேஜா 4-வது வீரராக இணைந்தார்.
உருமாறிய ஆடுகளம்: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் தன்மை 2-வது நாள் ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே பெரிய அளவில் மாறியது. துணைக்கண்டங்களில் 4-வது நாளில் காணப்படும் ஆடுகளம் போன்று செயல்பட்டது. ஆடுகளத்தில் அதிகளவில் விரிசல்கள் இருந்தன. சிறந்த நீளத்தில் பந்துகள் வீசப்பட்ட போது புழுதி கிளம்பியது. அதேவேளையில் பவுன்ஸ்கள் மாறுபட்ட வகையில் இருந்தன.
120 ரன் இலக்கை எட்டுவதே கடினம்: கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ஸ்டிரோக் மேற்கொள்வது கடினமாக உள்ளது. ஆட்டமிழக்காமல் இருப்பதற்கே கடுமையாக போராட வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் இந்த போட்டி இன்றே முடிவுக்கு வரக்கூடும். இந்த ஆடுகளத்தில் 120 முதல் 150 ரன்கள் இலக்கை அடைவதே கடினமாக அமையக்கூடும்.
கில்லின் நிலை என்ன?: கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங்கின் போது இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில்லுக்கு கழுத்து பகுதியில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் அவர், ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இந்நிலையில் அவரது உடல் நிலையை மருத்துவக்குழு கண்காணித்து வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
250 விக்கெட்கள்: கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று தென் ஆப்பிரிக்க அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸை (5), ரவீந்திர ஜடேஜா தனது சுழலால் போல்டாக்கினார். சொந்த நட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவுக்கு இது 250-வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் 250+ விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் ஜடேஜா 4-வது இடத்தை பிடித்தார். இந்த வகையில் அஸ்வின் (383), அனில் கும்ப்ளே (350), ஹர்பஜன் சிங் (265) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT