Published : 14 Nov 2025 07:07 AM
Last Updated : 14 Nov 2025 07:07 AM
கொல்கத்தா: இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வலுவான சுழற்பந்து வீச்சு இந்திய பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி வலுவான வேகப்பந்து வீச்சை கொண்ட அணி என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் தற்போது அந்த அணி சுழற்பந்து வீச்சிலும் வலுவானதாக மாறி உள்ளது.
கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 என டிரா செய்திருந்தது. இந்தத் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி கைப்பற்றிய 39 விக்கெட்களில் 35-ஐ கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி ஆகியோரை உள்ளடக்கிய சுழல் கூட்டணி வீழ்த்தியிருந்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான நோமன் அலி, சஜித் கான், ஆசீப் அப்ரிடி ஆகியோர் கூட்டாக 27 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தனர். 36 வயதான சைமன் ஹார்மர் முதல்தர கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்திய ஆடுகளங்களுக்கு அவர், ஒன்றும் புதியவர் இல்லை.
கடந்த 2015-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் மொகாலி, நாக்பூர் டெஸ்டில் அவர், விளையாடியிருந்தார். அப்போது சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா ஆகியோரது விக்கெட்களை சைமன் ஹார்மர் வீழ்த்தியிருந்தார். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு அவர், இந்திய மண்ணில் விளையாட உள்ளார். கடந்த மாதம் ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சைமன் ஹார்மர் 8 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க ஈடன் கார்டன் மைதான ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், கேப்டன் ஷுப்மன் கில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் பலமுறை ஆடுகளத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிலையில், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி, ஆடுகளம் “ரேங்க்-டர்னராக இருக்காது” என்று உறுதியளித்துள்ளார்.
கடந்த காலங்களில் கொல்கத்தா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுத்துள்ளது. தொடக்கத்தில் பந்துகளின் நகர்வு சிறப்பாக இருந்துள்ளது. அதேவேளையில் பிற்பகுதியில் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு உதவி உள்ளது. இம்முறையும் ஆடுகளம் அதேபோன்று செயல்பட்டால் ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணியின் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார். அவருடன் 2-வது வேகப்பந்து வீச்சாளராக ஆகாஷ் தீப் களமிறங்கக்கூடும்.
ஏனெனில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அவர், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்பட சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். கடந்த 15 வருடங்களில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தப்பட்ட 159 விக்கெட்களில் 97 விக்கெட்களை வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி உள்ளனர். தொடக்கத்திலும், இறுதியிலும் பந்தின் தையல் நகர்வும், ஸ்விங்கும் பிரதான பங்கு வகித்துள்ளது.
ஷுப்மன் கில்லின் தலைமையிலான இளம் இந்திய அணி நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-2 என்ற சமனில் முடித்திருந்தது. அந்தத் தொடரில் வேகம் மற்றும் ஸ்விங்குக்கு சாதகமான ஆடுகளங்களை இந்திய அணி சிறப்பாக தகவமைத்துக் கொண்டு அற்புதமாக செயல்பட்டிருந்தது. தொடர்ந்து பலவீனமான மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றிருந்தது.
இருப்பினும் சொந்த மண்ணில் கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என இழந்த விதம் வீரர்களின் மனதில் ஆறாத வடுவாக இருக்கக்கூடும். அந்தத் தொடரில் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளங்களில் நியூஸிலாந்து அணியின் அஜாஸ் படேல், மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய சுழல் கூட்டணி 36 விக்கெட்களை வேட்டையாடி இந்திய அணியை படுதோல்வி அடையச் செய்திருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்க அணியிலும் அதே அளவிலான தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இம்முறை இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
அந்த வகையில், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதற்கான வழிகளை இந்திய பேட்ஸ்மேன்கள் கண்டறிந்து செயல்படக்கூடும். ரிஷப் பந்த் அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது பலம் சேர்க்கக்கூடும். மேலும் துருவ் ஜூரெலும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடும். தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்டில் அவர், 2 சதங்கள் விளாசியிருந்தார். ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் பலம் சேர்க்கக் கூடும். இவர்களுடன் 3-வது சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறக்கூடும்.
தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் தெம்பா பவுமா, எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜுபைர் ஹம்சா, கைல் வெர்ரெய்ன், டோனி டி ஸோர்ஸி நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக கார்பின் போஷ், வியான் முல்டர் சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிக்கக்கூடும். காகிசோ ரபாடா, மார்கோ யான்சன் ஆகியோர் தொடக்க ஓவர்களில் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT