Published : 11 Nov 2025 10:59 AM
Last Updated : 11 Nov 2025 10:59 AM
விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் இடையிலான ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 182 ரன்களும், ஆந்திரா 177 ரன்களும் எடுத்தன. 5 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 29 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 70.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் 29, கேப்டன் சாய் கிஷோர் 16, பாபா இந்திரஜித் 6, ஆந்த்ரே சித்தார்த் 33, சோனு யாதவ் 28, வித்யூத் 2, திரிலோக் நாக் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆந்திர அணி சார்பில் சவுரப் குமார் 4, திரிபூர்ண விஜய் 2, பிரித்வி ராஜ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆந்திர அணி 41.2 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அபிஷேக் ரெட்டி 75 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் கரண் ஷிண்டே 64 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசினர். அஸ்வின் ஹெப்பார் 21, கலிதிண்டி ராஜு 20 ரன்கள் சேர்த்தனர்.
4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆந்திர அணிக்கு முழுமையாக 6 புள்ளிகள் கிடைத்தன. தமிழக அணிக்கு நடப்பு தொடரில் இது 2-வது தோல்வியாக அமைந்தது. இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழக அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. 2 ஆட்டங்களை டிரா செய்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT