Published : 09 Nov 2025 11:22 AM
Last Updated : 09 Nov 2025 11:22 AM
பெங்களூரு: இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 255 ரன்களும், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களும் எடுத்தன.
34 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 24 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது. அபிமன்யு ஈஸ்வரன் 0, தேவ்தத் படிக்கல் 24, சாய் சுதர்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 26 ரன் களுடனும், குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 89.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 382 ரன்ள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. கே.எல்.ராகுல் 27, குல்தீப் யாதவ் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பந்த் 54 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், ஹர்ஷ் துபே 116 பந்துகளில், 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 84 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய துருவ் ஜூரெல் இம்முறை 170 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் விளாசி அசத்தினார். தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி சார்பில் ஒகுஹ்லே செலே 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து 417 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்தது.
ஜோர்டான் ஹெர்மான் 15, லெசெகோ செனோக்வானே 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 10 விக்கெட்கள் முழுமையாக இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 392 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT