Published : 08 Nov 2025 07:27 PM
Last Updated : 08 Nov 2025 07:27 PM

528 பந்துகளில் 1,000 ரன்கள்: அபிஷேக் சர்மா அசத்தல் சாதனை!

பிரிஸ்பன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று பிரிஸ்பனில் நடைபெற்ற 5-வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 11 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச அரங்கில் குறைந்த பந்துகளில் 1,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அபிஷேக் சர்மா 528 பந்துகளில் 1,000 ரன்களை எடுத்துள்ளார். இந்த வகை சாதனையில் சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் 1,000 ரன்களை எட்டியதே முந்தைய சாதனையாக இருந்தது. இதை தற்போது அபிஷேக் சர்மா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. கான்பராவில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக ரத்தாகியிருந்தது.

மெல்பர்னில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஹோபர்ட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், கோல்டு கோஸ்டில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 48 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, இன்றைய ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x